09 June 2011

ஊர்சுற்றி 3....

நாங்க போன வாட்டி ஊருக்குப் போயிருந்தப்போ, கணவர் வீட்டுக்குப் பக்கத்துல ஒரு ஜோடி குடி வந்திருந்தாங்க.. புதுசாக் கல்யாணம் ஆனவங்க.. காதல் திருமணம்.. பெற்றோர் எதிர்ப்பை மீறித் திருமணம் செய்து போராட்டங்களுக்கிடையே வாழ்க்கைய நடத்திகிட்டு இருந்தாங்க.. அதுக்கிடையிலும் நாங்க கிளம்பும் போது எங்களுக்காக ரெண்டு பொம்மைகள் வாங்கித் தந்தாங்க.. அந்த ரெண்டும் இங்க எங்க வீட்டுல தான் இருக்கு.. இந்த வாட்டிப் போயிருந்தப்போ எப்படி இருக்காங்கன்னு வீட்டுல கேட்டதுக்கு, அவங்க ரெண்டு பேரும் பிரிஞ்சுட்டாங்க, இப்ப விவாகரத்துக்கு ஏற்பாடு பண்ணிட்டு இருக்காங்கன்னு சொன்னாங்க.. அதிர்ச்சியா இருந்தது.. அதுக்குள்ளேயான்னு.. அந்த ஆணோட குடி, சந்தேகம், நடவடிக்கை சரியில்ல, மனைவி மீதான வன்முறை - இதனால மனைவி தனியாப் போயிட்டதாவும், அந்தக் கணவர் அவங்களைச் சமாதானம் செய்றதுக்காக அவங்க வீட்டு முன்னாடி காத்துக் கெடக்கறதாவும் சொன்னாங்க.. அதுக்காக இருக்காரோ இல்ல வேற வாழ்க்கைய ஆரம்பிச்சிரப் போறான்னு காவல் இருக்காரோ தெரியல..  இனிமே அவரோட வாழுறது கஷ்டம், அதனால பிரிஞ்சுட்டாங்கன்னு புரிஞ்சாலும், என்னால அதைச் சாதாரணமாக் கடந்து போக முடியல, ஏன்னா இங்க மாதிரி இல்ல, அங்க காதலைத் திருமணம் வரைக்கும் கொண்டு போறதுக்கே, பொருளாதாரம் பெற்றோர் சம்மதம்ன்னு நிறைய இடையூறுகள்.. அதனாலேயே அப்படிப் போராடிக் கல்யாணம் பண்ணி உறுதியா வாழ்றவங்கள எனக்குப் பிடிச்சுப் போகும்.. இப்ப இவங்கள நினைச்சு, இதுக்காகவா இவ்வளவு போராட்டங்களைத் தாண்டி வந்தாங்கன்னு  கஷ்டமா இருக்கு..

எங்க ஊர்ல நானிருக்கும் போது ஒரு கொலை நடந்துருச்சு.. காரணம், மனைவியோட கள்ளக்காதல் ன்னு சொன்னாங்க.. கணவரே போயிச் சரண்டர் ஆயிட்டு எதோ டயலாக் விட்டிருக்கார்,  தான் செஞ்சது சரி தான் அப்படின்ற மாதிரி.. ஹ்ம்ம்..

எங்க உறவினர் ஒருத்தர் மண்புழுவை வச்சு இயற்கை உரம் தயாரிக்கறதுல ஈடுபட்டிருக்கார்.. அவர் கிட்ட விவரமாப் பேச நேரம் கிடைக்கல.. சுருக்கமா, ரசாயன உரம் போடாம அதை மட்டும் போட்டு விளைவிச்சா உற்பத்தி பாதிக்கப்படாதான்னு கேட்டேன்.. அந்தளவுக்கு பாதிக்கப்படாதுன்னு தான் சொன்னார்.. அடுத்தவாட்டி போறப்போ தீர விசாரிக்கணும்..

ஊர்ல அத்தை (மாமாவோட மனைவி) கம்பு ஆக்கித் தந்தாங்க.. அதை நீராகரமா சாப்பிட்டோம், பிடிச்சிருந்தது.. அந்தக் காலத்துல எல்லாம் சோளம் ராகி கம்பு தான் முக்கியமான உணவாம்.. அரிசிச் சோறு எல்லாம் அப்பப்பத் தான் இருக்குமாம்.. கம்பைச் சமைக்கறதுக்காக தயார் செய்யறதே பெரிய வேலையா இருக்கு.. அதைச் சுத்தம் செய்து, உரல்ல இடிச்சு, புடைச்சு, தவிடு நீக்கி, குருனையாக்கி.. அதுக்கப்புறமா சமைக்கணும்.. இதெல்லாம் என்னால ஆகற காரியமா??

ஹமாம் போட்டா rashes, allergy இதெல்லாம் வராதாம்.. காம்ப்ளான் சாப்பிட்டா பசங்க உயரமா வளருவாங்கன்னு விஞ்ஞானப்பூர்வமா நிரூபிக்கப்பட்டிருக்காம்.. அப்புறம் முக்கியமா, முன்னாடியெல்லாம் சிகப்பழகு நாலு முதல் ஆறு வாரங்கள்ல கிடைச்சிட்டு இருந்தது.. இப்பல்லாம் ஒரே வாரத்துல கிடைச்சுடுதாம்.. ஏனோ தெரியல, அங்க இருக்கும் கடந்து செல்ல நேரிட்ட ஒரு முதிய வறிய கிளி ஜோசியர் நினைவில வந்து போனார்.. இப்படியெல்லாம் சொல்லுறதால நான் இதுல எதையுமே உபயோகித்திருக்காத ஆளுன்னு நினைச்சுடாதீங்க.. சோப்பு போட்டுக் குளிச்சா புத்துணர்வா இருக்கும், அழுக்குப் போகும், உங்க தோல் தன்மைக்கேத்த சோப் - இப்படியெல்லாம் சொன்னா ஓகே.. அதைய விட்டுட்டு.. rashes, allergy எல்லாம் வராம இருக்கறதுக்கு அதென்ன மருந்தா?

வால்மார்ட் மாதிரி பெரிய டிபார்ட்மெண்டல் ஸ்டோர் ஒன்னு சங்கிலித் தொடரா ஒவ்வொரு ஊருலயும் வர ஆரம்பிச்சிருக்கு.. தென்மாவட்டத்துப் புள்ளைங்க வேலை செய்யறாங்க.. அங்காடித் தெரு நினைவு வந்ததுன்னு சொல்லித் தான் தெரியனுமா?

நெருங்கிய உறவினர் ஒருத்தர் வீடு கட்டப் போறதாச் சொன்னாங்க.. இப்பல்லாம் எஞ்சினியர்களே வாஸ்துவையும் உள்ளடக்கிக் கட்டிக் கொடுக்கறாங்களாம்.. வெளிய திண்ணை வச்சுக் கட்டச் சொன்னேன், அதெல்லாம் அவுட் ஆஃப் ஃபேஷனாம்.. அதுக்குப் பெரிய விவாதமே நடந்தது.. தெரியல, வீடுன்றது பல காலம் வாழப் போற இடம்.. தோற்றத்தை விட, நம்மோட வாழ்க்கை முறைகளை வசதிகளை முன்னிறுத்தி கட்டப்படனும்ன்னு நான் நினைக்கிறேன்.. இது ஒரு சின்ன உதாரணம் தான்.. இப்ப இருக்கிற வீட்டுல திண்ணை இருக்கு, பாட்டியால கீழ உட்கார முடியாது, சமையல் வேலைகள அதுல உட்காந்து செஞ்சுகிட்டு இருக்காங்க.. சாயந்திரம் மின்சாரம் இல்லாத நேரம் எல்லோரும் வெளிய வந்து உட்காந்து பேசறாங்க.. காய்க்காரம்மா வந்தாங்கன்னா கூடைய இறக்கி வச்சு உட்காந்து தண்ணி வாங்கிக் குடிச்சுட்டு வித்துட்டுப் போறாங்க.. பெரியவங்க யாராச்சும் கடந்து போனா உட்காந்து பேசிட்டுப் போறாங்க.. ஏன் அதை அவுட் ஆஃப் ஃபேஷன்னு விட்டுத் தரனும்?

இன்னொரு விவாதம் டாய்லட்களைப் பத்தி.. இந்தியனா வெஸ்டேர்னான்னு.. வயசான காலத்துல மூட்டு எல்லாம் தேஞ்சு போன பின்னாடி வெஸ்டேர்ன் தான் நல்லது, ஆனா ஒரு விஷயம் இடிக்குதே.. இங்க பேப்பர்  வச்சிருக்கான், எங்கயும் தண்ணி சிந்தாது.. அங்க அதுக்கேத்த மாதிரி ஒரு wired  ஷவர் வச்சாத் தானே சரி வரும்? இல்லாட்டி உக்காரும் இடம் அல்லது தரை அசுத்தம் ஆகிடாது?? வீட்டுல கூடப் பரவாயில்ல, பல பேரு உபயோகப்படுத்தற ஹாஸ்டல்ல இப்படிக் கட்டி வச்சுக் கொடுமப் படுத்துவாங்க.. ச்சை..
 
அம்மா ஆட்சி மலர்ந்தவுடனே மின்சாரத் தடைகள் குறையும்ன்னு நினச்சா, அந்த முதல் வாரம் கண்டபடிக்கு நிறுத்தி வச்சுட்டாங்க, அதும் இரவுல விட்டுவிட்டுப் போகும், கொசுக்களுக்கு ஒரே கொண்டாட்டமாப் போச்சு.. தூங்கவே முடியல.. இனிமே அவங்கவங்க வீட்டுத் தேவைக்கு அவங்களே உற்பத்தி செஞ்சுகிட்டாத் தான் உண்டு போல.. சூரிய ஒளி ல மின்சாரம் தயாரிக்கறதப் பத்திப் படிச்சுப் பாக்கணும், நாமே ஒன்னு வாங்கி நிறுவிக்க முடியுமான்னு.. இது மாதிரி விஷயங்களை எல்லாம் இலவசமாத் தந்தாங்கன்னா புண்ணியமாப் போவும்..

நான் பார்த்து வியந்த ஒரு விஷயமும் இருக்கு.. ரெம்ப பெருசா போயிடும் என்பதால அது அடுத்த இடுகையில..

கிளம்பற அன்னைக்கு ஒரு நண்பரை சந்திச்சோம்.. நாங்க மாறவே இல்லைன்னு சொன்னார்.. தோற்றமும் பேச்சும் அவ்வளவா மாறல தான், அதையத் தான் சொல்லியிருக்கார்..  சிந்தனைகள்ல கண்டிப்பா மாற்றம் ஏற்பட்டிருக்கு.. இன்னொரு நாட்டுக்கு வர்றோம், அங்க இருக்கிற விஷயங்களையும் உள்வாங்கி அலசி வளர்றது தானே இயல்பு?  ஆனா சில விஷயங்கள்ல நான் மாற விரும்பல,  எதை எடுத்துக்கணும் எதை விடனும்ன்னு முடிவு பண்ண வேண்டியது நான் தான்..

இன்னும் நாலஞ்சு வருஷத்துல ஊர் திரும்பிடலாம்ன்ற எண்ணம் தான் இப்போதைக்கு எனக்கு.. வேலை நிலவரம் குறித்து விசாரித்தப்போ, தனியாரிடத்திலே ஓரளவுக்கு இங்கிருப்பது போன்ற டெக்னாலஜி இருப்பதாக அறிந்தோம்.. ஆனால் பெற்றோர் இருக்குமிடத்திலே வேலை வாய்ப்பு saturated  ஆக இருக்கும் என்று தோன்றுகிறது. வேறேங்காவதும் சிறிது காலம் வசிக்க நேரிடலாம்.. ம்ம்.. பார்ப்போம்..

05 June 2011

ஊர் சுற்றி.. 2



பெரியண்ணன் நாட்டுல இருந்து கிளம்பி சென்னையில மூணு நாளு இருந்துட்டு அப்புறம் ஊருக்கு வந்து சேந்துன்னு ஒரு வாரம் ஓடிப் போச்சு.. சென்னைல இறங்குனதுல இருந்தே காலு ரெண்டும் கணுக் கணுன்னு வீங்கிக் கெடக்கு.. வீக்கம் விட்ட பாடில்ல.. அங்கயும் இங்கயும் சுத்திகிட்டே இருந்தா எப்படிக் கொறயும்.. கண்டங்களுக்கிடையே விமானப் பயணம் மேற்கொள்ளும் போது கால் ரத்தக் குழாய்களிலே ரத்தம் கட்டிப் போக வாய்ப்பு இருக்கு.. நான் ஏறுன மொத விமானம் அபுதாபி வந்து சேர்றதுக்கு பதினாலு மணி நேரம் ஆச்சு.. நான் வேற உட்காந்த இடத்த விட்டு எழாம தின்னுட்டும் தூங்கிட்டும் படம் பாத்துகிட்டும் இருந்துட்டேன்..  அந்த மாதிரி ரத்தம் உறைஞ்சு போயிருந்தா மருத்துவர் கிட்ட ஓடனும்.. மாத்ர மருந்து வாங்கித் தின்னனும்.. இருக்கிற தலைவலி பத்தாதா இது வேறயான்னு நொந்துகிட்டு ரெண்டு நாள் நல்லா ஓய்வெடுத்தேன், தூங்கும் போது பாதத்துக்குக் கீழ ரெண்டு தலையனைய முட்டுக் கொடுத்துத் தூங்குனேன்.. அப்புடியே கொஞ்சங் கொஞ்சமா நீர் வடிஞ்சு போச்சு.. திரும்பி வரும் போது உஷாரா விமானத்துலயே கொஞ்சம் நேரம் நடந்துகிட்டு இருந்தேன்.. இங்க வந்து ஒன்னும் ஆகல..
 
கல்லூரி மெஸ்சுல சில பல வருஷம் தின்னு வளர்ந்த அனுபவம் இருக்கு.. அங்க வெளயாட்டாப்  பேசிப்பாங்க.. இங்க இத்தன காலம் தின்னே உசிரு பொழைச்சிட்டோம்.. வேறென்ன நமக்குச் சேராம போகப் போவுதுன்னு.. ஒரு மெதப்புக்கு அப்படிச் சொல்லிக்கிட்டுத் திரிஞ்சாலும், அதுக்கப்புறம் அப்பப்ப வயித்தால போயிச் சரியாயிருக்கு.. amoebiasis மாதிரி.. ஆனா பெருசா பேதி ஆனதில்ல.. இப்பப் போயிருந்தப்ப ஊருல ஒரு நாள் முட்டைக் கொழம்பு வச்சுத் தந்தாங்க.. அதுல தான் என்னமோ பிரச்சனைன்னு நினைக்கிறேன்.. அன்னைக்கு ராத்திரி செம பேதி.. யாரையும் எழுப்பிக்கிட்டு இருக்கவேணாம், காலைல சொல்லிக்கலாம்ன்னு விட்டுட்டேன்.. விடியற்காலைல பாத்தா அப்படி ஒரு உடம்பு வலி.. தூங்கவும் முடியல.. எழவும் முடியல.. ரொம்ப வீக் ஆகிப் போச்சு.. வாய் உதடு எல்லாம் உலர்ந்து போய் சிறுநீர் போவதும் குறைஞ்சு போச்சு.. dehydrate ஆகிட்டேன் போல.. அப்புறம் நாலஞ்சு ors பாக்கெட் வாங்கி வரச் சொல்லி  தண்ணியில கலந்து குடிச்சேன்.. குடிச்சு கொஞ்ச நேரத்துல வலியெல்லாம் சரியாப் போச்சு.. பேதியும் கொறஞ்சு நின்னு போச்சு.. இதுல கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னன்னா, எங்க வீட்டுல லெற்றின் அறை மட்டும் வீட்டுல இருந்து கொஞ்சம் தூரம் தள்ளி இருக்கும் (லெற்றின் சிஸ்டம் எல்லாம் ஊருக்குள்ள அறிமுகம் ஆகாத காலத்துல கட்டப்பட்ட வீடு)... நல்ல வேளை, கணவர் வீட்டுல பக்கத்துலயே இருந்ததால தப்பிச்சேன் :))
 
எங்க நெருங்கின சொந்தக்காரங்க எல்லாத்துக்கும் (அப்பா அம்மா பாட்டி) ஏதாவது ஒரு வியாதி இருக்கு.. ஒரு வியாதின்னு சொல்றது குறைச்சல், ரெண்டு மூணு தான் நிதர்சனம்.. நோயற்ற வாழ்வுன்னு எல்லாம் எதுவும் இல்ல இனிமே, நோயோட வாழ்ந்து பழகிக்க வேண்டியது தான் போல... ரெண்டு மூணு வயதான பெரியவங்க (பெண்மணிகள்) கீழ விழுந்து கையக் கால உடைச்சுகிட்டு சரியாகி இருந்தாங்க.. ஃபோன்ல கால் வீக்கம்ன்னு சாதாரணமாச் சொல்லுறாங்க, அங்க போயிப் பாத்தா Congestive Cardiac Failure அப்படின்னு பெரிய diagnosis ஆ இருக்கு.. அவங்களுக்குத் தெரியறதில்ல, தெரிஞ்சாலும் நம்மகிட்டச் சொல்ல விரும்பறதில்ல.. சொன்னாக்க கவலைப்படுவோம்ன்னு.. நாங்க மட்டும் என்ன லேசுப்பட்ட ஆட்களா.. நாங்களும் அப்படித் தான் செய்றது.. :))
 
தேர்தல் முடிவு அறிவிக்கறப்போ நாங்க ஊர்ல தான் இருந்தோம்.. ஒரு அரசாங்க அலுவலகத்துல கொஞ்சம் வேலை இருந்ததால அங்க போயிருந்தோம், அங்க ஒரு தொலைக்காட்சிப் பொட்டி வச்சிருந்தாங்க (இலவசமாக் கொடுத்ததோ??), அதுல அப்பத் தான் ஒவ்வொரு தொகுதிலயும் யாரு முன்னணியில இருக்காங்கன்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்க.. ஒரே பரபரப்பா கவனிச்சிட்டு, அப்படியே மத்த சனங்க எல்லாரும் என்ன பண்ணிட்டு இருக்காங்கன்னு திரும்பிப் பாத்தா.. யாருமே செய்திய கவனிக்கக் காணோம்.. ஒருவேளை எல்லாருக்கும் ஏற்கனவே தெரிஞ்சதத் தான் செய்தியில சொல்லிக்கிட்டு இருந்தாங்களோ? :)) 

அதே மாதிரி இன்னொரு விஷயமும் தெரிஞ்சது, இன்னைக்கு அளவுல, தமிழகத்துல, நிஜவுலகத்தோட சேர்த்துப் பாக்குறப்போ இந்தப் பதிவுலகமெல்லாம் ஒரு புள்ளி மாதிரி தான், இங்க பேசப்படும் நிறைய விஷயங்கள இந்தளவுக்கு அவங்கள்லாம் யோசிச்சிருப்பாங்களான்னே தெரியல.. உதாரணத்துக்குச் சொல்லனும்னா திருமணப் பத்திரிக்கைகள்ல சாதிப் பேரெல்லாம் சாதாரணமாப் புழங்குது, அதை அவங்க பெருமைக்காகவோ சிறுமைக்காகவோன்னு இல்லாம சாதாரணமா ஒரு லாஸ்ட் நேம் மாதிரி அடையாளத்துக்குத் தான் போட்டிருக்காங்க.. அந்தப் பத்திரிக்கையத் தான் அங்க இருக்கிற எல்லாருக்கும் தருவாங்க, ஆனா அநேகம் பேருக்கு அது உறுத்தியிருக்காதுன்னு தான் நினைக்கிறேன்.. அதே மாதிரி கடைப் பேர்களும்..

பள்ளிக்கூடம் போற குழந்தைங்க இருந்த பெற்றோர் நிறையப் பேரு குழம்பிப் போய் இருந்தாங்க.. சமச்சீர் கல்வி கொண்டு வர்றதா முந்தைய ஆட்சியில சொல்லிருந்ததால, இனிமே பணம் கறக்கறது குறைஞ்சிடும்ன்னு தனியார் பள்ளிகள் எல்லாம் உஷாராயிட்டாங்க.. அதனால மெட்ரிகுலேஷன் பள்ளி நடத்திட்டு இருந்தவங்கல்லாம் அப்படியே ஒரு பக்கம் சி பி எஸ் சி பள்ளிகள் கட்ட ஆரம்பிச்சுட்டாங்க.. நான் கேள்விப்பட்ட வரைக்கும் வருஷத்துக்கு அறுவதாயிரத்துல இருந்து ஒரு லட்சம் வரைக்கும் கட்டணமாம்.. ஓரளவுக்கு வசதியாயிருக்கிற பெற்றோர்களுக்கு என்ன நெனப்புன்னா, சமச்சீர் கல்வின்னா படிப்புத்தரம் குறைஞ்சு போயிடும், அதனால வாயக் கட்டி வயித்தக் கட்டியாவது சி பி எஸ் சி பள்ளிக்கூடத்துல படிக்க வச்சிரலாம்ன்னு அங்க சேத்திட்டதா சொல்லிக்கிட்டு இருந்தாங்க.. வசதியில்லாதவங்க கொஞ்சம் பேரு குட்டிக் குட்டி மெட்ரிக் பள்ளிகள்ல கைய மீறிச் செலவு செய்து படிக்க வச்சிட்டு இருந்தாங்க, அவங்களெல்லாம் அதுலயே இருந்துக்கலாம் முடிவு பண்ணியிருந்தாங்க..  இப்ப அம்மா சமச்சீர் கல்விக்கு ஆப்பு வைக்கப் போறதால சி பி எஸ் சி க்கு மாறினவங்களுக்கு எல்லாம் வீண் செலவு.. ஆட்சி மாறினா இந்தளவுக்கா படிப்புல குழப்படி நடக்கணும்? எல்லாருக்கும் ஒரே சிஸ்டம் ன்னு கொண்டுவந்து அதோட  கல்வித் தரத்த மேம்படுத்துறதுல தானே கவனம் செலுத்தனும்?

உறவினர் ஒருத்தர்.. தேர்தல் முடிவு வந்ததுக்கப்புறம் தான் அவரப் பாத்தோம்.. அவர் சொன்னதுல இருந்து.. அவர் இப்போ வேலை செய்து கொண்டிருக்கும், வணிக ரீதியா நல்லபடியாகப் போய்க்  கொண்டிருக்கும் ஒரு பிரபல தனியார் firm அ வாரிசுத் தரப்புல இருந்து ப்ரெஷர் கொடுத்து வாங்க முயற்சி செய்திருக்காங்க... அவருக்குத் தெரிஞ்ச வரைக்கும் அனேகமா அது பெண் வாரிசு.. ஆட்சி கவுந்ததால அந்த நிறுவனர் இப்போ பெரிய ரிலீஃப் ல இருக்காரு.. பழம் நழுவிப் பால்ல விழுந்த கதையா, தோழி தரப்பு அடுத்த முயற்சிய மேற்கொள்ளாம இருந்தா சரி தான்.. :)
 
இன்னொரு உறவினர் மருத்துவர்.. கார்டியாலஜிஸ்ட்.. அவர்கிட்டப் பேசிக்கிட்டு இருந்ததுல இருந்து..  இப்ப குறைந்த வயசுலேயே நெஞ்சு வலின்னு வர்றவங்க எண்ணிக்கை அதிகம் ஆகியிருக்கு.. சமீபத்துல பாத்தவருக்கு 25 வயசு தான்.. மரபுரீதியான குறைபாடுகள் ஒரு பக்கம் இருந்தாலும், ஸ்மோகிங் மற்றும் ஸ்ட்ரெஸ் இது இரண்டும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை அப்படின்னாரு..  

ஒரு உறவுக்காரப் பொண்ணு வீட்டுக்கு வந்து ரெண்டு நாள் தங்கியிருந்தது.. இருந்து பொழைக்கறது  பட்டிக்காட்டுல.. எளிய குடும்பம்.. படிக்கிறது ஆங்கில வழிப் பாடத்திட்டத்தைக் கொண்ட மெட்ரிக் பள்ளில.. இரண்டாவது மொழியா இந்தி.. அது அவங்கவங்க விருப்பம், இன்னொரு மொழி அதுவும் இந்தி கத்துக்கறது நல்லது தான்.. ஆனா ஆறாவது படிக்கிற புள்ளைக்கு தமிழ் தினசரியக் கையில கொடுத்தா கடகடன்னு வாசிக்கத் தெரிய மாட்டேங்குது.. எழுத்துக்கூட்டிப் படிக்கிறா.. தினமும் வாசிச்சுப் பழகுன்னு சொன்னேன்.. ஆனா அவங்க வீட்டுல நாளிதழ் வாங்கற பழக்கம் எல்லாம் இல்லையாம்.. ஹூம்.. 

நாங்க அங்க இருந்தப்பத் தான் இந்த வருஷத்துக்கான சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டன.. தமிழ்நாட்டுல இருந்து மூணு பேர் மொத அஞ்சு ராங்க்குள்ள வந்திருந்தாங்க.. நல்ல விஷயம்.. ஏன்னா தில்லிக்குப் போனாத் தான் பெஸ்ட் கோச்சிங் அப்படிங்கற நிலை மாறினா இங்க இருந்தே நிறைய பேரால படிக்க முடியும்.. கலெக்டர் வேலையா, அதெல்லாம் விமான நிலையத்துக்குப் போயி மந்திரிங்களக் கூட்டி வரணும், அரசியல்வாதிங்களுக்குச்  சலாம் போடணும், நிறைய ஊழல்களுக்குத் துணை போனாத் தான் நெலச்சி நிக்க முடியும்.. இப்படியெல்லாம் நெனச்சிருக்கோம்.. அதுவுமில்லாம அந்தளவுக்கு மனத்திடமும் இருந்ததில்ல.. இப்போ நாம பாத்துக்கிட்டு இருக்கற வேலைல நமக்குன்னு ஒரு வாழ்க்கைய உருவாக்கிக்க முடியுமே தவிர, அதுக்குமேல சிறிய அளவு மாற்றத்தைக் கூடக் கொண்டு வர முடியாது.. உறவுக்காரப் பையன் ஒருத்தன் பி எஸ் சி முடிச்சிட்டு ஒரு வேலை பாத்துகிட்டே இதுக்காகப் படிக்கப் போறேன்னு சொன்னான்.. லேசா பீலிங்க்ஸ் கிளம்புச்சு, ஆனா இனிமே எங்க படிச்சு, பரிச்சை எழுதி.. அதனால அவன ஊக்கப்படுத்தி விட்டோம்.. 

அவனோட பேசிகிட்டு இருந்தப்போ இன்னொரு விஷயமும் நினைவுக்கு வந்தது.. எங்க கல்லூரி சீனியர் ஒருத்தர் கலெக்டரா இருக்கார்.. நான் கல்லூரிக்குள்ள நுழையறப்போ அவர் முடிச்சிட்டுக் கிளம்பிட்டார்.. அவர் முகம் கூடத் தெரியாது,.. ஆனா சீனியர்ஸ்ட்ட இருந்து கேள்விப்பட்டிருக்கேன், அவர் எப்படித் திறமையா வெற்றிகரமா ஒரு ஸ்ட்ரைக்கை நடத்துனாருன்னு, அவரோட தலைமைப் பண்புகள், அறிவுக் கூர்மை பத்தியெல்லாம்.. அவரப் பத்தி செய்தியில நல்லவிதமாப் படிச்சதும் சந்தோஷமா இருந்தது.. இந்த முகம் மற்றும் பெயரில்லா ஜூனியர் அவரை வாழ்த்திக்கிறேன்.. வணங்கிக்கிறேன்.. 

இங்க refrigerator அ fridge ன்னு சொல்லுற வாய் எங்க ஊருக்குப் போனதும் ப்ரிட்ஜ் ன்னு சொல்லுது :) ஃபோன், போன் ஆகிடும் :) அப்படித் தான் ஊர்ப் பேச்சும், ஊருக்குப் போனா, ஊர்க்காரங்கள எங்கயாவது பாத்தா தானா அதே மாதிரி பேச வந்துடும்.. ஆனா இங்க அப்படிப் பேச விரும்பல :((((((((((( 
 
இன்னொரு பகுதி இருக்கு மக்கா.. ரெண்டு வாரம் இருந்து வந்ததுக்கு இத்தன அலம்பலான்னு எனக்கே தோணுது.. இருங்க ஒரு சோடா குடிச்சிட்டு வந்துர்றேன்..