19 November 2010

Living separate after marriage..

இது நல்லதா நல்லதில்லையா.. தேவையா தேவையில்லையா.. ஒத்து வருமா வராதா.. நன்மை அதிகமா.. பக்க விளைவு அதிகமா.. பின் விளைவு அதிகமா.. ரிஸ்க் பெனிபிட் ரேஷியோ என்ன...

அறிஞர் பெருமக்கள் பல பேரு பலவாறாகப் பேசுவது கண்டு, அது பற்றி ஆராய்ச்சி செய்யலாம் என்று, நெட்டில் விஷயங்களைத்  தேடியலைந்து கொண்டிருந்த கண்ணம்மாவின் லேப்டாப்பில், கிட்டத்தட்ட ஐம்பது வலைப்பக்கங்கள் திறந்து கிடந்தன.. அருகில் ஒரு கிழிந்திருக்காத (அதுவரை) காகிதமும், உடைந்திருக்காத  (இதுவும் அதுவரை) பேனாவும்..

ஒரு முடிவுக்கும் வர முடியாமல் மண்டையைப் பிய்த்துக் கொண்டிருந்த கண்ணம்மா, அதற்கு மேல் பிய்ப்பதற்கு ஏதும் மிச்சமில்லை என்ற நிலை வந்ததும், லேப்டாப்பை அணைத்து விட்டு, தூங்கலாம் என்று ஒரு இறுதி முடிவெடுத்தாள்.

இரண்டு மணி நேரமாகப் படுக்கையில் புரண்டு கொண்டு தூங்க முயற்சித்தாலும் தூக்கம் வர மறுத்தது.. எப்படியோ அதனுடன் போராடி அவள் தூங்க ஆரம்பிக்கும் பொழுது, புதிதாக நூறு பேர், விஷயத்தின் சார்பாகவும் எதிராகவும், போர்க்கொடி ஏந்தி களம் இறங்கியிருந்தனர்.. நல்ல வேளை, அவர்கள் இறங்கிய சத்தம் அவளது காதுகளுக்கு எட்டவில்லை..

நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்த போது தான் அந்தக் கனவு வந்தது அவளுக்கு..

முகம் நிறைய ஏக்கங்களுடன் பலர் அவள் முன்னே நின்று கொண்டிருக்கின்றனர்.. எங்களுக்காக யாரும் பேச மாட்டீர்களா என்று இறைஞ்சிக் கொண்டிருக்கின்றனர்.. ஆனால் யாரும் அவர்களைச் செவிமடுத்ததாகவே தெரியவில்லை.. தத்தம் போக்கில் சென்று கொண்டிருக்கின்றனர்.. அந்த வழியாக வந்த கண்ணம்மா நிற்கிறாள்.. பார்க்கிறாள்.. அவர்களை நோக்கிப் போகிறாள்.. அவர்களுடன் பேசுகிறாள்.. இனி தன் வாழ்வு முழுவதும் அவர்களுக்காகவே அர்ப்பணிப்போம் என்று முடிவு செய்கிறாள்..

யார் அவர்கள்? அவர்கள் அப்பாவிகள்.. ஒரு பாவமும் செய்திடாதவர்கள்.. ஒரு புள்ளியில் ஆரம்பித்த அவர்களது வாழ்க்கையை, காலமெனும் பெயர் கொண்ட ஏதோவொன்று, கோலம் போடுகிறேன் பேர்வழியென்று, சுற்றிச் சுழற்றி சூறாவளியாக்கி, தனக்குப் பிடித்த மாதிரி வரைந்து கொண்டிருந்தது..

அவர்களுடன் பேசி, அவர்களது வலியினை அறிந்து, அதனைப் போக்குவதற்குண்டான மருந்தினைத் தருவதே தமது முதற்பணி என்று நினைக்கும் கண்ணம்மாவின் கைகளில், உடனே தோன்றுகின்றன, ஒரு மைக்கும் ஒரு ஓட்டை டேப் ரிக்கார்டரும்.. உடனே ஆரம்பிக்கிறாள்..

முதல் தம்பதி..  திரு மற்றும் திருமதி குமரன்..

என்ன தான் மறக்க நினைத்து தூங்கியிருந்தாலும், அவளது கனவிலும் அந்தக் கேள்வியே முதலில் வந்து விழுந்து தொலைக்கிறது.. "நீங்க இந்த Living together before marriage, followed by living together with or without marriage பத்தி என்ன நினைக்கறீங்க?"

"ஐயோ மேடம்.. வெந்த புண்ணுல வேலைப் பாய்ச்சினாப்ல இப்படிக் கேக்கறீங்களே.." கண்ணில் நீர் தளும்புகிறது குமரனுக்கு..

"ஓ.. மன்னிக்கணும்.." சட்டெனச் சுதாரித்து உடனே கேள்வியை மாத்திப் போட்டாள்.. "நீங்க ஏன் Living separate after marriage"?

"அதையேன் மேடம் கேட்கறீங்க?  ஆசைப்பட்டு கட்டிகிட்டோம் மேடம்.. விதி அமெரிக்கா ரூபத்துல வந்துடுச்சு.. முதல்ல கொஞ்ச நாள் இங்க வீட்டுல அழுதுகிட்டு கெடந்தா..  அப்புறம் வேலைக்குப் போயே ஆவனும்ன்னு கட்டை விரல்ல நின்னா.. ரெண்டு பேருக்கும் ஒரே இடத்துல வேலை கிடைக்கல.. அதான்... ஒரே இடத்துல கிடைக்கற வரைக்கும், இப்படி பக்கதூருல வேலை.. வெள்ளிக்கிழமையானா பொறுப்பா இவ வீட்டுக்கு வந்துடறேன்.. ஆனாலும் கஷ்டமா இருக்கு.. வேலை முடிஞ்சு வீடு வந்தா சண்டை போடக் கூட ஆளில்ல.. வாரக்கடைசியில லொங்கு லொங்குன்னு வண்டி ஓட்டி வர்றேன்.. ஒரு வாரமா போட வேண்டிய சண்டையெல்லாம் ரெண்டே நாளுல போட வேண்டியிருக்குது மேடம்.. எங்க கஷ்டம் எங்களுக்குத் தான் புரியும்.."

அடுத்த தம்பதி.. மிஸ்டர் அண்ட் மிசஸ் மாடச்சாமி.. இவர்கள் இருவரும் அமெரிக்கர்கள் என்பதால், ஆங்கிலத்துலயே உரையாடல்..

"He is my best buddy.. We are married for so many years.. We lived in Alaska for a long time.. But due to economic situations, he had to move out for a better place to work.. I joined him for 6 months initially.. But our son could not like the new place.. He was missing his school, his friends, and was feeling very sad..  So finally I decided to move back to Alaska with my son, and be with him till he finishes his school, while leaving my husband in the new job.. He comes here by flight every weekend.. But still.. I miss him a lot.. I grow some tomato plants at home and I talk to them every evening after I return home from work.. They grew not with water, but with my tears.."

உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்குகிறார் மிசஸ் மாடசாமி.. ஒரு டிஷ்யூ எடுத்துக்  கொடுத்துவிட்டு அடுத்த தம்பதியிடம் நகர்கிறார் கண்ணம்மா..

மூன்றாவது தம்பதி.. திரு உசிலைமணி மற்றும் திருமதி உசிலைமணி..

"மேடம்.. இன்னா மேடம் செய்ய.. இந்தாளு இந்தக் குறட்டை விடுறாரே.. நானும் முதல்ல காதுல பஞ்சு வச்சு தூங்கிப் பாத்தேன்.. வேலைக்காவுல... பக்கத்து ரூம்ல தூங்கிப் பாத்தேன்.. முடியல்ல... அப்புறம் மேல் மாடியில தூங்கிப் பாத்தேன்.. படுக்கையெல்லாம் ஒரே அதிர்வா இருக்குது.. தெருவுல இருக்கரவுங்க கூட காலி பண்ணிட்டு போயிட்டாங்க மேடம்.. அதான்.. நானும் ரெண்டு தெரு தள்ளி தனியா வீடு எடுத்துட்டு இங்க வேலையெல்லாம் முடிஞ்சதும் அந்த வீட்டுக்கு ஓடிப் போயிடறேன் தூங்கறதுக்கு.."

"ஹாவ்.. எனக்கு தூக்கமா வருது.." திரு உசிலைமணியின் கொட்டாவி கொடுத்த புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து விலகி வந்தாள் கண்ணம்மா..

அடுத்து திரு குழந்தையப்பன் தம்பதி..

"நானு எங்கப்பா வாங்குன கடனைக் கட்ட, அதுக்கப்புறம் வீடு கட்ட அப்படின்னு துபாய்க்கு வந்து வேல பண்ணி சம்பாதிக்கறேன்.. எம் பொண்டாட்டிக்கு விசா கிடைக்கல.. குழந்த குட்டிகளோட வீட்டுல இருக்கா மேடம்.. ஒரு கம்ப்யூட்டர வாங்கிக் கொடுத்துட்டு வந்துட்டேன் நானும்.. தெனமும் ஸ்கைப்புல பாத்துக்கறோம்.. வருஷமொருக்கா வீட்டுக்குப் போறேன்.."

அடுத்து திரு அண்ட் திருமதி கிஷோர்..

"இவளுக்கு ஹெச் 1 விசா கிடைச்சிருந்தது மேடம்.. ஒரு மாசம் ஆகியிருக்கும்.. ஆறு மாசம் ஆன் சைட் வேல இருக்குன்னு, கம்பெனில கிளம்பச் சொல்லிட்டாங்க.. என்னையும் புள்ளையையும் விட்டுட்டு இப்ப ஒக்லஹோமால வாசம்.. முதல்ல ஆறு மாசம்னாங்க.. அப்புறம் ஆறேகால்.. அப்புறம் ஆறரை.. அப்புறம் திடீர்ன்னு எட்டு.. இப்போதைக்கு எட்டே முக்கால்ல நிக்குது.."

அடுத்து திரு அண்ட் திருமதி செல்வா..

"படிப்புக்காக பிரிஞ்சிருக்கிறோம் மேடம்.."

அடுத்து திரு அண்ட் திருமதி கண்ணன்..

அடுத்து திரு அண்ட் திருமதி ஜான்சன்..

அடுத்து திரு அண்ட் திருமதி குப்புச்சாமி..

அடுத்து திரு அண்ட் திருமதி பூவாத்தா..

க்யூ தொடர்ந்து கொண்டே இருக்க, மயக்கமே வந்து விட்டது கண்ணம்மாவுக்கு.. அங்கே மயங்கி விழுகையில், இங்கே வியர்த்து முழித்திருந்தாள்..

பிறகென்ன.. மறுபடியும் தூங்கி.. கனவு கண்டு.. முழிச்சு.. காலையில ஆபிஸ்க்கு லேட்டாப் போயி, பாஸ் கண்ணுல படாம எப்பிடியோ எஸ்கேப் ஆயிட்டா..



JUST FOR FUN MAKKALS.. NOTHING SERIOUS.. பெரும்பாலும் நான் கேள்விப்பட்ட பார்த்த மனிதர்களைக் கொண்டே எழுதியிருக்கிறேன்.. THANKS FOR UNDERSTANDING..

16 November 2010

குடிக்கறவங்களெல்லாம் கெட்டவங்களா?

குடி நல்ல பழக்கமா? இல்ல..

அளவு மீறிப் போனா புத்தி மாறுமா? ஆமாம்

அளவு மீறிப் போனா குற்றம் செய்யத் தூண்டி விடுமா? அப்படித் தான் நினைக்கறேன்..

உடம்புக்கு உகந்ததா? இல்ல.. ஆனா விதிவிலக்கு இருக்கலாம்.. 

உடம்புக்கு என்ன ஆவும்? அல்சர்ல இருந்து கல்லீரல் புத்துநோய் வரைக்கும் வரலாம்..

குடி அடிக்ட் பண்ணுமா? ஆமாம்

எல்லாரையும் அடிக்ட் பண்ணுமா? இல்ல..

குறிப்பிட்டு இவங்களைத் தான் செய்யும், இவங்களைச் செய்யாதுன்னு சொல்ல முடியாது.. ஆனா, கொஞ்சம் பேருக்கு இயல்பாவே எதுக்கும் அடிமையாகிடும் பழக்கம் இருக்கு.. அவங்க அடிக்ட் ஆகறது எளிது.. இப்ப, நானே வீட்டு வேலைய கொஞ்சம் தள்ளி வச்சுட்டு ப்ளாக் எழுத உட்கார்ந்திருக்கேன்.. வேலைய முடிச்சிட்டு எழுதலாம்னா, இல்ல எழுதிட்டு செய்யலாம்ன்னு மனசு சொல்லுது.. அதே, பக்கத்து வீட்டு ருக்மணி, வேலைய எல்லாம் செஞ்சு முடிச்சிட்டு சும்மா இருக்கற நேரத்துல மட்டும் தான் ப்ளாக் பக்கம் வருவா..

குடிக்கறவங்க எல்லாரும் குடிகாரங்க ஆயிடுவாங்களா? மேல சொன்னதே தான்.. யாரும் குடிகாரர் ஆகணும்ன்னு விரும்பி குடிக்க ஆரம்பிக்கறதில்ல.. ஆனா குடிக்காம இருக்கறவன விட குடிக்க ஆரம்பிச்சிட்டவனுக்கு குடிகாரர் ஆகறதுக்கான ரிஸ்க் கண்டிப்பா அதிகம் :)

குடும்பத்துக்கு உகந்ததா? இதுவும் ஒருத்தருக்கொருத்தர் வேறுபடும். கட்டுப்பாட்டுல உறுதியா இருக்கறவங்க குடும்பத்துக்கு பாதிப்பு இல்ல.. தனது விருப்பங்களை கட்டுப்படுத்திக்கத் தெரியாதவனோட குடும்பம் நாசம் தான்..

குடிச்சிட்டு காரோட்டறது நல்லதா? கண்டிப்பா இல்ல.. குடியால வரக் கூடிய போதை ஆளாளுக்கு வேறுபடும்.. ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல ரத்தத்துல அல்கஹால் அளவு இருந்தா வண்டி ஓட்டி வரக் கூடாதுன்னு சட்டமே இருக்கு.. கைது, லைசென்ஸ் ரத்து, பைன், ஜெயிலு எல்லாம் உண்டு..

எதிரில் வரும் வாகனத்தின் வேகத்தை சட்டென அனுமானித்து தனது வாகனத்தை கண்ட்ரோல் செய்யும் நேரம் அதிகமாகும்.. அதிகமா குடிச்சிட்டு வீடு திரும்பறதா இருந்தா குடிக்காத ஒருத்தரை ஓட்டச் சொல்லி திரும்பி வரலாம்..

நீ குடிப்பியா? ச்சே.. கருமம்..

உன் தம்பி குடிச்சா ஒத்துப்பியா? அவனுக்கு வேலை கிடைச்சப்பவே சொன்னேன், பாத்து சூதானமா இருந்துக்கப்பான்னு..

நம்ம நாட்டுல இவ்வளவு மக்கள் ஏழ்மையில இருக்கும் போது, டாஸ்மாக் ரொம்ப அவசியமா? இதுக்கு எனக்கு தெளிவான பதில் சொல்லத் தெரியல.. ஆனா அவசியம்ன்னு நினைக்கல

குடிக்கறவங்களெல்லாம் கெட்டவங்களா? இல்ல..

உன் ஆபிசுல பக்கத்து டேபிள்ல வேல பண்ற குமாரு குடிப்பான் தானே? அப்பப்ப குடிப்பான்.. ஆனா குடிச்சிட்டு யாருக்கும் எந்தப் பிரச்சனையும் கொடுத்ததில்ல.. நேரங்காலமா வேலையை செஞ்சு முடிச்சடறான்.. எங்க கிட்ட மரியாதையா நடந்துக்கறான்.. அது அவன் விருப்பம்ன்னு விட்டுடறேன்..

அவன் உனக்கு நண்பன் தான? உடம்பு கெட்டுப் போயிரும்ன்னு எடுத்துச் சொல்ல மாட்டியா? அது அவனுக்குத் தெரியாதா? அதுவுமில்லாம அவனுக்கு உபதேசம் பண்ண என் உடம்ப நான் முதல்ல ஒழுங்கா வச்சிருக்கறனா? எண்ணையும் வெண்ணையுமா திங்கறேன்.. உடற் பயிற்சி எதுவும் பண்றதில்ல.. நான் எப்படி அவனுக்குச் சொல்ல? அப்புறம், பதிலுக்கு அவன் என்னைப் பாத்து, "நீ தெனமும் ரெண்டு தடவ நல்லா ஸ்ட்ராங்கா காப்பி குடிக்கற, குடிக்கலைன்னா தலை வலிக்க ஆரம்பிச்சுடுதுன்னு சொல்லற.. நீயும் காப்பி அடிக்ட் தான்.. காப்பி குடிச்சா இதயத்துக்கு கெடுதல்" அப்படின்னு பேச ஆரம்பிச்சுட்டா?

அப்ப அளவோட குடிச்சா தப்பில்லங்கற? அது குமாரோட விருப்பம்.. அரசாங்கமே மது விற்பனைய அனுமதிக்கும் போது நான் எப்படி தடை சொல்ல?

குடிக்கறதப் பத்தி உங்கம்மா என்ன சொல்லிருக்காங்க? குடிக்கறவன் எல்லாம் கெட்டவன்னு சொல்லி வளர்த்துனாங்க..

நீ அது உண்மைன்னு ஒத்துக்கறியா? அது தம்பிக்கும் எனக்கும் மனசுல அழுத்தமா பதியறதுக்காக அப்படிச் சொன்னது.. காரணமில்லாம இல்ல.. ஊருல ரெண்டு மூணு பேரு குடிச்சுக் குடிச்சே குடல் வெந்து போயிச் சேந்துட்டாங்க..

ஆனா, நான் செய்யாத, செய்ய விரும்பாத ஒரு விஷயத்த இன்னொருத்தர் செய்யறதாலயே அவரைக் கெட்டவர்னு சொல்ல விரும்பல. என்னைப் பொறுத்தவரைக்கும் அது ஒரு பழக்கம்.. அதை வச்சே ஒருத்தன முழுசா எடை போடக் கூடாது.. இன்னைக்கு நான் ஏறுன ரயிலுல வாழ்க்கைல ஒரு வாட்டி கூடக் குடிக்காதவங்கள விரல் விட்டு எண்ணிடலாம். ஆனா யாரும் எம்மேல வந்து உரசல.. தப்பான பார்வை பார்க்கல.. எனக்கு அது தான் முக்கியம்..

ஆனா அதுவே குடிச்சிட்டு போதைல வம்பு பண்ணுனா, வண்டி ஓட்டுனா கண்டிப்பா தப்பு..
ஒரு கொள்கைக்காக குடிக்கவே வேண்டாம்ன்னு நினைச்சிருக்கற ஒருத்தனுக்கு ஜூஸ் ல அவனுக்கே தெரியாம வீம்புக்குன்னு கலக்கிக் கொடுத்து குடிக்க வச்சா தப்பு..
குடிப்பழக்கத்தோட பின் விளைவுகளைப் பத்தி சரியாத் தெரியாதவனுக்கு பழக்கி விட்டா தப்பு..
அதென்ன இவன் மட்டும் குடிக்க மாட்டேன்றான்னு வயித்தெரிச்சல்ல மெண்டல் ப்ரெஷர் கொடுத்து குடிக்க வச்சா தப்பு..
குடிக்காதவனெல்லாம் ஆம்பளையே இல்லன்னு பேசிட்டு சுத்துனா அதுவும் தப்பு..
வெவரந் தெரியாத பத்து வயசுப் பையனுக்கு ஊத்திக் கொடுத்தா தப்பு..

குடியைப் பற்றின கருத்துகள் நாட்டுக்கு நாடு வேறுபடுமா? ஆமாம்.. 

குடிக்காதவங்க எல்லாரும் நல்லவங்களா? எதிர் டேபிள் வைஷு குடிக்கறதில்ல தான்.. ஆனா, வேலையெல்லாம் நைசா மத்தவங்க தலையில கட்டிடறா.. மத்தவங்களப் பத்தி இல்லாத புரளி பேசிட்டு சுத்தறா.. அதை என்னன்னு சொல்ல?

அப்ப நீ குடிய சரியான விஷயம் தான்னு ஆமோதிக்கற? அப்படி நான் சொன்னனா? மறுபடியும் படிங்க மேல இருந்து..

நீ உனக்கானமட்டில் என்ன நினைக்கற? என்னைப் பொருத்தவரைக்கும் எனக்கு அது தேவையில்லாத பழக்கம்.. அப்புறம், மனசுல ஆழமா தப்புன்னு பதிஞ்சிருக்கறதால என்னால அப்படிச் செய்ய முடியாது..

மேல சொன்னதெல்லாம் "குடி" யப் பத்தி இன்னைக்கு எனக்கு இருக்கற புரிதல் மற்றும் கருத்துகள்.. நாளைக்கு மாறலாம்.. இதுல நான் சொல்லியிருக்கறது தவறாகயிருந்தா இல்லை யாருக்கும் தவறாகப்பட்டா, மன்னிக்கனும்.. எதிர் கருத்து இருக்கறவங்க கண்டிப்பா பின்னூட்டம் போடணும்.. பேசலாம்.. விவாதம் நன்று.. விதண்டாவாதம் வேண்டாம்.. நன்றி.. 

12 November 2010

ஓர் எல்போர்ட் வண்டியோட்டுகிறது.. 2

முதல் பாகம் படிச்சு அசந்து (தூங்கிப்) போன எல்லாரையும் எழுப்ப, ஹாரன்.. ஹாங்.. ஹாங்.. ஹாங்..

எப்பிடியோ அடிச்சுப்பிடிச்சு, ஒரு learners permit வாங்கி, வண்டிக்கு வெளிய ஒரு எல் போர்ட மாட்டிட்டு, வண்டி ஓட்டப் பழகியாச்சு.. அடுத்தது, லைசென்ஸ்.. இங்க நம்ம ஊரு மாதிரி இல்ல.. அதுவும் நான் வசிக்கும் மாநிலம் இதற்கான பரிட்சைகள்ல கண்டிப்புக்குப் பெயர் போனது.. காரணம், நம்ம ஊர்ல இரண்டு சக்கர வாகனங்கள் மாதிரி, இங்க கார்கள் தான் முக்கியமான தரை வழிப் போக்குவரத்து.. பைக், சைக்கிள் - இதெல்லாம் இங்க ரொம்பவும் குறைவு.. அது மட்டுமில்லாம, இங்க சாலையில் கார்கள் போகும் வேகமும் மிக அதிகம்.. சாலை விதிகளுக்கு மிக முக்கியத்துவம் கொடுக்கும் நாடு இது.. எல்லாரும் விதிகளைப் பின்பற்றி ஓட்டிச் செல்லும் போது, ஒருத்தர் தவறு செய்தா, மற்றவருக்கு ஏற்படும் பாதிப்பு ரொம்பவே அதிகம்.. ஒரு நபருக்கு லைசென்ஸ் கொடுக்கும் போதே அவரது திறனை நன்றாகப் பரிசோதனை செய்து தான் கொடுக்கறாங்க.. அப்பிடியும், குடி, மித மிஞ்சிய வேகம், கவனக்குறைவு மற்றும் இன்னும் பிற காரணங்களால விபத்து நடந்துட்டுத் தான் இருக்குது.. :((

லைசென்ஸ் பரிட்சைக்கு ஆதிரேயனே தேதி எடுத்துக் கொடுத்துட்டார்.. அதுலயும், நாங்க விவரமா, எளிதான சாலைகள் இருக்கும் பகுதியில நடக்கற மாதிரி வேணும்ன்னு கேட்டிருந்தோம்.. பரிட்சை அன்னைக்கு, நானும் ஆதியும் கிளம்பிப் போனோம்.. பரிட்சைக்கு முன்னாடி, பக்கத்துல ஒரு இடத்துல, ஒரு மணி நேரம் கூடுதல் பயிற்சி வேற.. ஆதி கூட வந்தது, மன ரீதியா நல்ல தெம்பா இருந்தது..

கிட்டத்தட்ட ஒரு மாசத்துக்கு மேல பயிற்சி எடுத்திருந்தாலும், மனசளவில, எனக்கு என்னமோ நம்பிக்கை குறைச்சலாவே இருந்தது.. அதுக்கு பல பல காரணங்கள்.. எதைச் சொல்ல எதை விட.. ஆனா, வாங்கியே ஆகணும்ன்ற கட்டாயம் இருந்தது.. ஏன்னா, அடுத்த ரெண்டு மாசத்துல என்னோட வேலை/கல்வி தொடங்கறதா இருந்தது.. வண்டி இல்லாட்டி கஷ்டமாப் போயிடும்..

இங்க பரீட்சைக்குன்னு தனி மைதானம் இல்ல.. எல்லாரும் உபயோகிக்கும் சாலை தான்.. பத்து-பதினைந்து நிமிஷம் தான் சோதனை நடக்கும்.. அதுக்குள்ள அவங்க சொல்ற மாதிரி நிறுத்தி, திருப்பி, சரியா ஓட்டிக் காமிக்கணும்.. ஒரே நாளைல நிறைய பேர் பரீட்சை எடுக்கறதால, பரிசோதகர்களும் சட்டுன்னு முடிவு பண்ணிடுவாங்க..  என்னோட முறை வந்தது.. என்னைப் பரிசோதிக்க வந்த அம்மா, வண்டியில ஏறும் போதே உர்ருன்னு இருந்தாங்க.. வண்டிய எடுத்தவுடனே முதல் குட்டு விழுந்தது.. வேகமாப் போ, பின்னாடி வர்ற வண்டிகளுக்கு இடைஞ்சலா இருக்கேன்னு.. அதுக்கப்புறம் அவங்க சொன்ன மாதிரி சரியாகத் தான் செஞ்சேன்.. ஆனா அவங்களோட ஆட்டிட்யூட் என்னை உதற வச்சிட்டே இருந்தது.. ஒவ்வொரு கட்டளைக்கும் உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் தான்.. கடைசியா, parallel parking.. இதை ஆதி மற்றும் ஆதிரேயன் கூட நல்லாத் தான் பழகியிருந்தேன்.. ஆனா, அந்த இடத்துல, பதற்றத்துல தப்பா செய்துட்டேன்.. உடனே தலைய இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் ஆட்டி, முகத்த சுளிச்சு, உதட்டப் பிதுக்கி (மறுபடியும், ஆட்டிட்யூட்), நீ தேறாத கேஸ் அப்பிடின்னு சொல்லாம சொல்லிக் காமிச்சாங்க..

எனக்காக ஆதி காத்திருந்தார் - என்ன பாஸா ன்னு சந்தோஷமான முகத்தோட.. அவரப் பாத்ததும் தான் கண் கலங்க ஆரம்பிச்சது.. தேறாம போனதுக்காக இல்ல.. நீயெல்லாம் தேறவே மாட்டே அப்பிடின்னு அந்தம்மா சொன்ன மாதிரி இருந்தது.. எம் முகத்தைப் பாத்துட்டு ஒண்ணும் சொல்லாம வண்டியைக் கிளப்பினார் ஆதி.. என்னால கட்டுப்படுத்தவே முடியல.. கண்ணுல இருந்து கொட்டுது.. அவரும் பாத்துட்டு, என்ன ஏதுன்னு கேக்காம, ஒரு டிஷ்யூ மட்டும் எடுத்துக் கொடுத்தார்... துடைச்சிட்டு, ரங்ஸ் க்கு போனப் போட்டு, மறுபடியும், ஹிஹி.. இப்ப நினைச்சா சிப்பு சிப்பா வருது.. :))

திரும்பிப் போகும் போது, ஆதி தன்னோட மனைவியோட கதையச் சொன்னார்.. அவங்களுக்கு சின்ன வயசுல ஏற்பட்ட ஒரு விபத்து மனசுல ஆழமா பதிஞ்சிருந்ததால ஓட்ட முடியாம சிரமப்பட்டதச் சொன்னார்.. அப்பத் தான் நானும் வாயத் திறந்து என்னோட கஷ்டங்களைச் சொன்னேன்.. அதை அவர் புரிஞ்சுகிட்டதே அந்த நேரத்துக்கு மிகப் பெரிய ஆறுதலா இருந்தது..

........................................  Intermission ......................................

அடுத்த பரீட்சைக்கு தேதி உடனடியா கிடைக்காததால, ரயில்வே ஸ்டேஷனுக்கு எதிராவே வீடு எடுத்துட்டோம்.. எல்போர்டுக்கு கண்டபடி ரோஷம் வந்துடுச்சு.. அதனால சுமார் ஆறேழு மாசம் மாதிரி, வண்டிய ஒரு வாட்டி கூட ஓட்டிப் பாக்கல.. ஒரு வழியா சமாதானம் ஆகி, ஒரு கிறிஸ்மஸ் விடுமுறைல (ஒரு வாரம் கிடைத்தது) தேதி எடுக்கச் சொல்லி, ரங்ஸ் கிட்டச் சொல்லியிருந்தேன்.. விடுமுறைக்கு முன்னால வேற ஊர்ல இருந்து வந்து, ஓட்டிப் பழகனும்.. நான் சனிக்கிழமை மாதிரி வந்து இறங்கி, வியாழக்கிழமை மாதிரி பரிட்சைக்கு தேதி எடுத்தா, அஞ்சு நாளு இருக்கும் நடுவுல, மறுபடியும் பழகிக்கலாம்ன்னு யோசிச்சு வச்சிருந்தேன்.. ரங்ஸ் போன் பண்ணி, திங்கக் கிழமை தான் தேதி கிடைச்சது, எடுத்துட்டேன்னார்.. அவ்வ்வ்வ்வ்வ்வ்.. மறுபடியும் கொட்டுது.. எதுக்கா? எனக்கெதிரா எல்லாருமாச் சேர்ந்து சதி பண்றீங்கன்னு :)) இந்த வாட்டி யாரும் பக்கத்துல இல்ல டிஷ்யூ தர.. வீட்டுல டிஷ்யூவும் இல்ல.. நானே கையால தொடச்சிகிட்டேன்.. ஒரு மாசமா ஓட்டு ஓட்டுன்னு ஓட்டியே ஆப்பு தான் கிடைச்சது, ரெண்டே நாள்ல என்னத்தக் கிழிக்க?

சனிக்கிழமை காலை, நான் வரல, மறுபடியும் அவமானப்பட என்னால முடியாதுன்னுட்டேன்..  எப்பிடியோ தேறி, மதியம் மாதிரி ஓட்ட ஆரம்பிச்சா, பனித்தூறல் வேற கூடவே ஆரம்பிக்குது.. எனக்குச் சுத்தமா நம்பிக்கை இல்ல.. இருந்தாலும் பரவாயில்லன்னு ரங்ஸ் கூட்டிட்டுப் போனார்.. அதே cemetry.. வேண்டா வெறுப்பா அங்க சுமார் ஒரு நிமிஷம் ஓட்டினேன்.. என்னத்தச் சொல்ல? பழைய மாதிரி ஓட்ட வந்துட்டது.. மறுபடியும் அங்க வச்சே நம்பிக்கை வந்தது.. ரொம்ப நேரம் ஓட்டினோம்..  ஞாயிறும் தொடர்ந்து பயிற்சி.. இந்த வாட்டி parallel parking பண்ணும் போது, அடுத்தடுத்த sequential steps சை சரியாக நினைவில் வைக்க, ஒரு சுலபமான வரிசையை நானே மனசுல உருவாக்கிட்டேன்.. இப்படிச் செய்தது, ஒவ்வொரு முறையும் மிகவும் உதவியாக இருந்தது..

திங்கக்கிழமை.. இந்த வாட்டி ஆதிரேயன் கூடப் போனேன்.. அதே ஒரு மணி நேரப் பயிற்சி.. அதே இடத்துக்குப் போனோம்.. இந்த வாட்டி ஒரு இளம் கறுப்பினப் பெண் வந்தார்.. சிரித்த முகம்.. ஒரு பட்சி உள்ள பறந்தது.. முயற்சித்துத் தான் பார்ப்போமேன்னு.. சரியாக வந்தது எல்லாமே.. ஒரு இடத்துல திருத்தம் சொல்லும் போது கூட, குண இனமாகச் (ஊர்ப் பதம்.. in gentle tone ன்ற மாதிரி) சொன்னார்.. இப்பிடிச் செய்திருக்கனும்ன்னு.. மறுபடியும் parallel parking.. ஏற்கனவே மனசுல வரிசைப் படுத்தி இருந்த மாதிரி சரியாகச் செய்தேன்.. என்ன, கொஞ்சம் தள்ளி வந்தது.. சரி, மறுபடியும் பண்ணிப் பார்க்கலாமேன்னு சொன்னார் (மறுபடியும்.. in gentle tone).. செய்தாச்சு..

ஒரு மாசமா ஓட்டிக் கிடைக்காத லைசென்ஸ், ரெண்டே நாள்ல கிடைத்து விட்டது.. என்னத்தச் சொல்ல? அந்தப் பெண் இல்லாட்டி கிடைத்திருக்காதுன்னு நினைக்கறேன்.. அவங்களுக்கு, அவங்களோட மென்மையான அணுகுமுறைக்கு, மானசீகமா ஒரு நன்றி.. ஆதிரேயன் கூடத் தான் வந்திருந்தேன்..  திரும்பிப் போகும் போது, அந்த இடத்துல ஆதியும் நின்றிருந்தார்.. வேறொரு ஆளைக் கூட்டி வந்திருந்தார்.. அவர்கிட்ட ஓடிப் போயி சந்தோஷத்தப் பகிர்ந்துகிட்டு வந்தேன்..

என்ன, ரங்ஸ்சால தான் நம்பவே முடியல.. ஹாஹ்ஹா..

 ........................................  சுபம் ......................................

இதைத் தொடர இலாவையும் (வானதி கிட்ட இவங்களும் அடம் பண்ணினாங்க), ஹூசைனம்மாவையும் (தனக்கும் ஒரு இனிய எல்போர்ட் காலம் இருந்ததாகச் சொன்னாங்க) அழைக்கிறேன்.. நேரம் இருக்கும் போது தொடருங்க.. நன்றி.. 

10 November 2010

தோழியிருவர்..




தோற்றம் கண்டேன்
தென் மாநிலத்தவள்..

தமிழரென்றாள்..
உடனே ஒட்டினேன்..

உன் நாட்டில் பிறந்து
வெளி மாநிலமொன்றில் 
வளர்ந்தேன் என்றாள்
கொஞ்சம் விலகினேன்..

தமிழில் பேச விருப்பமென்றாள்
தட்டுத் தடுமாறிப் பேசினாள்
பிழை கண்டு சுளித்தேன்..
ஆங்கிலத்தில் பதிலுரைத்தேன்..
இன்னும் விலகினேன்..

புரிதல் தொடங்கிய நாளொன்றில்
அதுவரை நான் இட்டிருந்த 
மனவேலிகளைத் தாண்டி
பூத்தது எங்கள் நட்பு.. 


2

தோற்றம் கண்டேன்
தென் மாநிலத்தவள்..

தமிழரென்றாள்
உடனே ஒட்டினேன்..

"நீங்க எந்த ஊரு?
அட, ..... ஆ?
நானும் பக்கத்துல தான்" என்றாள்
இன்னும் ஒட்டினேன்..

வட்டார வழக்கில் பேசினாள்
நட்பை இறுக்கினேன்..

அடையாளங்கள் மெல்ல 
சுவாரசியமிழந்து,
உணர்வுத்திரை விலகி,
அவள் முகம் 
தெரியத் துவங்கிய
நாளொன்றில்..
துடித்து விலகினேன்..


இன்று

முதலாமானவளிடம்
அவளது தமிழில் பேசுகிறேன்..

இரண்டாம் ஆளிடம்..
பேசுவதேயில்லை.....

07 November 2010

ஆ vs நா

மு vs கோ மாதிரி முடிவில்லாத இன்னொரு விவாதம் இந்த ஆ vs நா!

எனக்கு ஒரு விஷயம் புரியவேயில்ல.. ஆ களுக்கு சுயமரியாதை இல்லையா? அப்ப, வீட்டுல நாட்டுல பெரியவங்கள ஒருத்தன் மதிச்சா, அவனுக்கு சுயமரியாதை இல்லாம போயிடுமா? 

அப்புறம், இந்த சிந்தனை.. ஆ மக்களெல்லாம் சிந்திக்கத் தெரியாதவங்களா? மக்களா.. ஆ களுக்கும் கேள்வி கேக்கத் தெரியும்.. சிந்திக்கத் தெரியும்.. ஆனா, அந்த விஷயத்துல மட்டும் கேட்டுக்க மாட்டாங்க.. அப்படியேக் கேட்டுகிட்டாலும், அவங்களுக்கு கிடைக்கற பதில் லயும் அவங்க க வ எப்பிடியாச்சும் உணர்ந்துப்பாங்க..  

அடுத்து தன்னம்பிக்கை.. ஆ களுக்கு இதுவும் இல்லைன்னு சொல்றாங்க.. மறுபடியும் புரியல.. வாழ்க்கை முழுசா நம்ம கையில இல்லையே? நிறைய நிச்சயமற்றதன்மை உடையதா இருக்கு பொழப்பு.. நிலையில்லாத உலகில் நிலைக்கும் என்ற கனவில் ன்னு வாழும் போது, தன்னையும் மீறின அந்த தற்செயல் நிகழ்வுகளைத் தாங்கிக் கொள்ள ஒரு பிடிப்பு, தன்னம்பிக்கையைத் தாண்டின ஒரு நம்பிக்கை கொஞ்சம் பேருக்குத் தேவைப்படுதே.. 

நான் இங்க சொல்லியிருக்கறது, நல்லபடியான ஆ கள் பத்தி தான்.. இந்த அங்காடித் தெருவுல வருவாரே.. கடை ஊழியர்கள மனுஷனாக் கூட மதிக்காம, நுழையும் போது வலது காலை உள்ள வச்சு வருவாரே, அவர மாதிரி ஆட்களை இல்ல.. அப்புறம், எதுத்தாப்ல ஒருத்தன் பசியோட இருந்தா, அவனைக் கடந்து போறப்ப, க ளே, நீ தான் இவனப் பாத்துக்கனும்ன்னு தன்னோட கடமையில இருந்து எஸ்கேப் ஆகிட்டு ஓடற ஆட்களை இல்ல.. நிதர்சனங்களை ஏத்துக்காம, க பத்தின ஒரு fantasy ல மூழ்கி, இத்துனூண்டு பிரச்சனைக்கும் க வ எதிர்பாத்துட்டு இருக்கற ஆட்கள இல்ல.. 

சரி, ஆ ஆ வாவே இருந்துட்டுப் போகட்டுமே? இதில நா களுக்கு என்ன கஷ்டம்? அவங்கங்க விருப்பம்... வாழ்க்கை.. அடுத்தவன் தலையில க பேரைச் சொல்லி மிளகாய் அரைக்காத வரைக்கும், ஆ களுக்கு, ஆ சிந்தனை நல்ல விஷயந்தான்.. அவங்களப் பொருத்தவரைக்கும், க ஒரு ஆத்மார்த்தமான தோழன்/தோழி.. மனம் விட்டுப் பேச, புலம்ப, பகிர, அழுக.. இப்பிடி..

அப்புறம், நா கள் எங்க தன்னோட கருத்துகளைச் சொன்னாலும் இந்த ஆ மக்களும் அங்க போயி சண்டை போடறது ஏன்? விவாதம் பண்ணலாம்.. சில விஷயங்களை ஏத்துக்கப் பிடிக்கலைன்னா தாண்டிப் போறது?.. நா களுக்கு அவங்க பார்வை.. 

இத்தன பேசறியே? நீ ஆ or நா வான்னு கேட்டா.. Its however I want.. :)