சகுந்தலா தனது சைக்கிளை தெரிந்தவர்கள் யாருக்காவது கொடுத்துச் செல்லலாம் என்று முடிவு செய்த போது, ஜான் அங்கிள்க்கு அடுத்ததாக நினைவுக்கு வந்தவன் பாஸ்கரன்.. கூடவே, லிண்டாவும் இருப்பதால், பெண்களுக்கான சைக்கிள் என்ற குறையிருக்காது.. இதை மனதில் கொண்டு தான் பாஸ்கரனை முன்பே கேட்டிருந்தாள்..இரண்டு வாரங்களுக்கு முன்பு ஆர்வத்தோடு சரியென்றவன், பின்னர் தொடர்பு கொள்ள முயற்சித்தபோது, போன் சரியாக எடுக்காமல் இருந்தான்.. சரியென்று லிண்டாவுக்கு மெயில் அனுப்பிப் பார்த்தால், அவளும் பதிலளிக்கவில்லை.. சகுந்தலாவுக்கு இது மனதை நெருடிக்கொண்டிருந்தது.. கிளம்பும் நாளுக்கு முந்தின நாள் மறுபடியும் போன் செய்த போது, பாஸ்கரன் சகுந்தலாவை சந்திக்க விரும்புவதாகச் சொன்னான்.. அதற்காகத் தான் லைப்ரரி வந்திருந்தாள் சகுந்தலா..
படித்துக் கொண்டிருந்த பாஸின் முன்னால் சகுந்தலா ப்ரசன்னமானதும், சகீஈஈஈஈ என்று அவன் விளித்து புன்னகைக்க, இருவரும் வெளியே வந்தார்கள்..
“எங்கயாச்சும் உக்காந்து கொஞ்ச நேரம் பேசலாம்.. எங்க போலாம் சகி?”
”பக்கத்துல தான் ஸ்டார்பக்ஸ் இருக்கு.. இந்த நேரத்துக்கு அவ்வளவா கூட்டம் இருக்காது... நடக்கற தூரம் தான்.. “
ஸ்டார்பக்ஸில் அவனுக்கு ஒரு ஐஸ் டீயும், இவளுக்கு ஒரு ஸ்ட்ராபெர்ரி ஸ்மூத்தியும் வாங்கிவிட்டு, அருகிலிருந்த சோஃபாக்களில் அமர்ந்தார்கள்.. இவர்கள் நினைத்தது போலவே கூட்டம் குறைவாகயிருந்தது...
”நீயும் ஒன்னும் சொல்ல மாட்டேங்கற.. அவளும் ஒன்னும் பதில் போடமாட்டேங்கறா.. நாளைக்கு நான் கிளம்பனும்.. சைக்கிள என்ன பண்ண?”
“அவ இன்னும் கொஞ்சம் நாள்ல கலிஃபோர்னியா கிளம்பப் போறா”
”சரி, அதுக்கென்ன இப்ப.. அவங்கப்பாம்மா அங்க தான இருக்காங்க.. போயிட்டு வரட்டும்.. எனக்கு பதில் சொல்றதுக்கு என்ன?”
”இல்ல.. நிரந்தரமா போகப் போறா..” இறுக்கமான முகத்துடன் பதிலளித்தான் பாஸ்கரன்..
”ம்ம்....” இது போன்ற சமயங்களில், எதிரில் இருப்பவர் தன்னை சற்று ஆசுவாசப்படுத்திக்கொள்ள மவுனம் காப்பதே நல்லதாயிருக்கிறது.. மீண்டும் தொடர விருப்பமிருந்தால், அவர்களே சொல்வார்கள்.. இல்லையென்றால், சற்று நேரம் கழித்து, பேச்சை வேறு திசைக்கு மாற்றலாம்.. சகுந்தலா காத்திருந்தாள்..
”கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு சொல்றா..” சில நொடிகள் டீயை உறிஞ்சிய பின் பேச ஆரம்பித்தான் பாஸ்கரன்...
”பண்ணிக்கோங்க.. ரெண்டு பேருக்கும் பிடிச்சிருக்கு தான?”
”ம்ம்.. பிடிச்சிருக்கு.. ஆனா, எனக்கு கல்யாணத்துல விருப்பமில்ல.. ”
”ஏன்..”
”தெரியல.. பொறுப்புகள், எதிர்பார்ப்புகள் அதிகமாகிடும்ன்னு தோனுது.. ”
”ஹும்.. ” பெருமூச்செறிந்தாள் சகி.. ”ஒன்னு வேனும்னா இன்னொன்ன இழக்கத் தான் வேனும்.. இதுக்கு பயந்தா எப்படி? உலகத்துல இத்தன பேரு பண்ணிக்கலையா?”
”இல்ல.. எனக்கான விருப்பங்கள் வேற.. எனக்கு அவள பிடிச்சிருக்கு.. அவளோட தோழமை பிடிச்சிருக்கு.. எனக்காக ரொம்ப கேர் பண்ணிக்கறா.. எல்லாம் சரி தான்.. ஆனா..”
”ம்ம்.. சொல்லு..”
”நான் எதிர்பார்க்கறது ஒரு நல்ல தோழிய.. இப்ப இருக்கற மாதிரியே நான் நானாவும், அவ அவளாவும் இருக்கனும்.. தனித் தனி வீடுகள்ல.. விரும்பும் போது சந்திச்சுக்கலாம்.. ஒருத்தருக்கொருத்தர் உதவி பண்ணிக்கலாம்.. கேர் பண்ணிக்கலாம்..”
”அத ஒன்னாயிருந்தும் செய்யலாமே?”
”இல்ல.. எனக்குன்னு நண்பர்கள் இருக்காங்க.. அவங்க வந்தா தங்கறதுக்கு வீடு வேனும்... அவங்களோடவும் நான் நேரத்தக் கழிக்கனும்.. ஒன்னாயிருந்தா சரி வரும்ன்னு தோனல.. ”
சகுந்தலாவுக்கு புரிந்தது.. அந்தப் பெண்ணை அவன் விரும்பினாலும், தன் வீட்டை, தன் வாழ்க்கையின் பாதியை அவள் ஆக்கிரமிக்கப் போவதை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை..
”உன் விருப்பம் புரியுது பாஸ்.. சரி, இந்த நண்பர்களே நாளைக்கு கல்யாணம் பண்ணிட்டுப் போயிடறாங்கன்னு வச்சுக்குவோம்.. அப்புறம் உனக்குன்னு யார் இருப்பா?”
”ம்ம்.. சரி தான்.. ”
”எல்லாப் பொண்ணுங்களுக்கும் ஏற்படற இன்செக்யூர் ஃபீலிங் அவளுக்கும் இருக்கு போல.. அதனாலத் தான் கல்யாணத்துக்கு கேக்கறா.. ”
”நான் அவளுக்கு கமிட் ஆகறேன்னு உறுதி கொடுத்துட்டேன்.. அப்புறம் என்ன பயம்?”
சிரித்தாள் சகுந்தலா.. ”உன் வார்த்தைக்கு என்ன உத்ரவாதம்? நாளைக்கே நீ மனசு மாறிட்டா?”
”இந்த நம்பிக்க கூட இல்லாம எப்படி? நான் நல்லவந்தான்..”
”நீ நல்லவனாவே இருந்துக்கோ.. சூழ்நிலை காரணமா மாற நேரிடலாம் இல்லையா? உங்கூட வேலை செய்யற, உன்னோட ஃபீல்ட்ல இருக்கற பொண்ண இன்னும் சில வருஷங்கள் கழிச்சுப் பிடிச்சுப் போகலாம் இல்லையா?”
:”அந்த மாதிரி அவளுக்கும் கூட ஆகலாம்.. ஆனா நான் அப்படி நினைக்கலையே?”
”சரி, இதுக்கு என்ன தான் முடிவு அப்போ?”
”அவ கலிஃபோர்னியாவுக்கு கிளம்பறா.. அடுத்த வாரம்.. ”
”சரி, போகட்டும் விடு.. ”
”எனக்கு ரொம்ப கஷ்டமாயிருக்கு.. எனக்குன்னு யாரும் இல்லாத மாதிரி இருக்கு”..
”அவ எப்படி ஃபீல் பண்றா?”
”அவளுக்கும் கஷ்டமாயிருக்கு.. அதையெல்லாம் என் மேல கோபமாக் காட்டிட்டு இருக்கா...”
அந்தத் தோழியை முழுமையாய் ஏற்கவோ இழக்கவோ அவனது மனம் விரும்பவில்லை..
”உன்னுடைய விருப்பம் இதுதான்னு சொல்லிட்டுப் பழக வேண்டியது தானே? ”
”அவளுக்கும் தெரியும்.. ஆரம்பத்துல சரின்னு சொன்னவ, இப்ப ரொம்ப அட்டாச் ஆயிட்டா.. ரெண்டு பேரும் சேர்ந்து வாழனும், குழந்த பெத்துக்கனும்.. இப்படியிருக்கு அவளோட ஆசைகள்..”
பெண் மனம்.. சகுந்தலாவுக்குப் புரிந்தது.. என்ன தான் வளர்ப்பு முறை, நடை, உடை, பேச்சு, லட்சியங்கள் வேறுபட்டாலும், இங்குக்கும் அங்குக்கும் பெண் மனசு ஒன்றைத் தான் விரும்புகிறது..
”நியாயமான ஆசைகள் தான்.. ” என்றாள் மெல்லிய குரலில், தனது ஸ்மூத்தியைப் பார்த்தவாறே...
சூழலை இலகுவாக மாற்ற வேண்டி,
”எனக்கென்னமோ, நம்ம சினிமால வர்ற மாதிரி, அவ ஏர்போர்ட் வரைக்கும் போவா.. நீ வெளிய கண்ணத் தொடச்சிட்டு நிப்ப.. ப்ளேன் கெளம்புனதும், அவ வந்து உன்னோட தோளத் தொட்டு திரும்பிப் பாக்க வைப்பான்னு தோனுது”
மேலோட்டமாக புன்னகைத்தவாறே எழுந்தான் பாஸ்கரன்..
“என் கதையையே சொல்லி போரடிச்சுட்டேன்.. வா... சைக்கிளப் பாக்கலாம்”
இருவருமாக அவனது காரில் அமர்ந்து வீடு சென்று சைக்கிளைப் பார்த்தபின்..... “என்னை விட வேற யார்கிட்டயாவது இருந்தா நல்லா உபயோகப்படுத்துவாங்கன்னு தோனுது” என்றான் கூலாக..
எதிர்பார்த்த பதில் தான்... சகுந்தலாவுக்கு பெரிய ஆச்சரியமில்லை...
“இத ரெண்டு வாரத்துக்கு முன்னாடியே சொல்லியிருந்தா என்ன குறைஞ்சா போயிருப்ப?” சகுந்தலா முறைக்க, அவன் குற்றச்சாட்டிலிருந்து நழுவி, “நாளைக்கு வழியனுப்ப வரட்டுமா?” என்றான்..
“கிழிஞ்சது போ.. உன்ன எதிர்பார்த்து உக்காந்திருந்தா, நான் இன்னும் ரெண்டு வாரத்துக்கு இங்கயே கிடக்க வேண்டியது தான்..” சிரிக்காமல் சொன்ன சகுந்தலாவைப் பார்த்து சிரித்தவாறே பை சொல்லி கிளம்பினான்..
அவனை வழியனுப்பி வைத்துவிட்டு மேலே வந்து தனது இன்னொரு தோழியை அழைக்கலானாள்..
முடிந்தது..