Showing posts with label பார்த்ததில் பிடித்தது. Show all posts
Showing posts with label பார்த்ததில் பிடித்தது. Show all posts

04 April 2011

கிராமத்து ஓவியங்கள்..

ஆனந்தவிகடனின் கவிதைப்பக்கத்தில் இளையராஜா அவர்களின் ஓவியங்களைப் பார்த்திருக்கிறேன்.. பார்த்து விட்டு தாண்டிச் சென்றுவிடுவது உண்டு.. கொஞ்சம் நாள் முன்பு கதிர் அவர்களின் பக்கத்தில் இதைக் காண நேர்ந்தது.. புகைப்படமா இல்லை ஓவியமா என்று குழம்பும் அளவுக்கு நேர்த்தியாக இருந்தது.. 



இதற்கிடையில் அவரது கேலரியைப் பார்க்கும் வாய்ப்பு, பிலாசபி பிரபாகரன் 
அவர்களது பக்கத்தில் இருந்து கிடைத்தது.. எனக்குப் பிடித்தவை சில, அதிலிருந்து.. 

மேலே சொன்ன மாதிரி, புகைப்படமா இல்லை ஓவியமா என்று குழப்பும் இந்தப் படைப்பும் ஒரு உயிரோவியம்... பொண்ணு கருப்பா இருந்தாலும் களையா இருக்கு ம்பாங்களே.. அது இது தானோ?


அவரது ஓவியங்களில் இருக்கும் நேர்த்தியும் அந்த கிராமத்துப் பின்னணியும் ரொம்பவே ஈர்த்தன.. உதாரணத்துக்கு இதைப் பாருங்க.. இதிலே இந்தப் பெண் ஒரு விறகடுப்புல சமையல் செய்து கொண்டு இருக்கா.. இந்தத் தலைமுறைக்கு முன்னாடி நம்ம எல்லோர் வீட்டுலயும் விறகடுப்பு தான் சமையலுக்கு.. நம்ம தலைமுறைல கேஸ் வந்தாச்சு.. எங்க பாட்டி (அப்பாவோட அம்மா) இன்னும் இதிலயும் மற்றும் மண்ணெண்ணெய் ஸ்டவ் அடுப்புலயும் தான் சமைக்கறாங்க.. அடித்தட்டு மக்கள் வீட்டுல இந்த அடுப்பு தான் இன்னிக்கும் சோறு பொங்க வைக்குது.. 

அந்தப் பாத்திரத்தைப் பாருங்களேன்.. ஒன்னு சைடுல லேசா ஒடுங்கி இருக்குது.. இப்படியான அலுமினியப் பாத்திரங்கள் தான் பெரும்பாலும் சமையலுக்கு... வாங்கறப்ப வெள்ளை வெளேர்ன்னு இருக்கறது, நாளடைவுல கீழாப்ல தீ படும் பாகம் மட்டும் கருப்பாகிடும்.. அந்தப் பொண்ணு கையில ஒரு ஊதுகுழலும், மூச்சுத் திணற வைக்கும் புகையும், தணலும் சாம்பலும்,  கொழுந்துவிட்டு எரியும் நெருப்பும் மட்டுந்தான் மிஸ்ஸிங்..


அடுத்தடுத்த படங்கள பார்க்க ஆரம்பிச்சா இதுல மிஸ்ஸானது எல்லாமே இருக்கு :) சுவத்துல கரித்திட்டு படிஞ்சிருக்கு பாருங்க.. 


இதுல இந்தப் பொண்ணு என்னமோ நெரிச்சுகிட்டு இருக்கா..  பொது வழக்குல   உரல்ன்னு சொல்லுவது இதையத் தானே? ஊர்ல இதுக்கு வேற பேரு.. பக்கத்துல கருப்பா இருக்கறது அளக்குற படி.. அது போக சாணி முறம்.. பித்தளை அண்டா.. மட்டை உரிக்கப்படாத முழுத் தேங்கா.. கூடவே மேயும் கோழி.. 

அந்தச் சுவற்றைப் பாருங்க.. அதுல திட்டு திட்டா விட்டுப் போன பெய்ன்ட்.. என்னைக்கோ ஒரு விசேஷத்தப்பயோ இல்ல நல்ல மகசூல் தந்த ஒரு சாகுபடி அப்பவோ பூசப்பட்ட சுவராக இருக்கணும்.. அடுத்து இந்தப் பொண்ணு கல்யாணத்தப்ப தான் அதுக்கு மேல் பூச்சு பூசி கலரேத்துவாங்க.. 


பூ கட்டும் இந்தப் பொண்ணு.. அதோட பாவாடையைப் பாருங்க.. சின்னப் புள்ளைகளுக்கு பாவாட தைக்கும் போது மடிப்பு வச்சுத் தச்சுப்பாங்க.. வளர வளர பிரிச்சு விட்டுக்கலாம்ன்னு .. அதையக் கூட விட்டுவைக்கல இந்த மனுஷன்.. ஒருவேளை புகைப்படமா எடுத்து அதுல முகத்த மட்டும் வரைஞ்சிருப்பாரோ??


ஒரு குறை என்னன்னா இதில எல்லாப் பெண்களுமே பட்டுடை உடுத்தி இருக்காங்க.. அது கொஞ்சம் உறுத்துது.. வீட்டுல இருக்கிற மாதிரி சாதாரண உடையில இருந்திருந்தா இன்னும் பொருத்தமா இருந்திருக்கும்..

கேலரிக்கான வழி.. 

*********************************************

எனக்கு திடீர்ன்னு பூ படத்துல வர்ற சூ சூ மாரி கேட்கணும் போல இருந்ததுன்னு யூ ட்யூப் ல கேட்டுகிட்டு இருந்தேன்.. அப்போ அதுக்கு கீழ இந்தப் பாட்டும் இருந்தது.. கேள்விப்பட்ட மாதிரி இருக்கேன்னு நினைச்சுப் போட்டேன்.. ரொம்ப பிடிச்சுப் போச்சு.. அருமையான கிராமிய வாடை.. 

இந்தப் புள்ளைகளப் பாருங்க.. என்னா ஆட்டம் என்னா ஆட்டம்.. கேரளால எதோ கல்லூரி போல... ஒரு கட்டத்துல இதுகளோட ஆட்டம் தாங்க முடியாம பாடறவங்க கீழ குதிச்சு வந்துருவாங்க :) நாம காலேசு படிக்கும் போது இந்தப் பாட்டு வராம போயிடுச்சேன்னு கொஞ்சமா ஏங்க வச்சிடுச்சு.. 

இதோட ஒரிஜினல் பாட்டை யூ ட்யூப் ல ரொம்ப நேரம் தேடி கிடைக்கவே இல்ல.. சரின்னு நம்ம தமிழ்ப்பதிவுலகத்துல தேடினப்போ தான் தெரிஞ்சது, இந்தப் படம் வெளி வரவே இல்லைன்னு.. பாதி தயாரிக்கப்பட்டு முடியாம கிடப்புல போட்டாச்சு.. படம் பேரு "இரண்டு பேர்".. ராம்கி, குஷ்பூ, சங்கவி நடிச்சதாம்.. இசை, சுனில் வர்மா (?சர்மா) ன்னு புது ஆளு.. பாடியது ஆபாவாணன் (இணைந்த கைகள், ஊமை விழிகள் படமெல்லாம் நினைவுல இருக்கா?, அதோட தயாரிப்பாளராம்.. இந்தப் படத்துக்கும் அவரே தயாரிப்பாளர்.. ) மற்றும் இசையமைப்பாளர்ன்னு போட்டிருந்தது..  மேலும், ஊமைவிழிகள் இசையமைப்பாளர்கள் மனோஜ்-க்யான் ல க்யானோட பையன் தான் இந்த சுனில் வர்மா (?சர்மா) ன்னு ஒரு உபரித் தகவல் வேற.. 



இது குட்டீஸ் வெர்சன்..  மடகாஸ்கர் எஸ்கேப் டூ ஆப்ரிகா படத்துல வர்ற பாட்டைப் போட்டு ரீ மிக்ஸ் பண்ணிவிட்டுட்டாங்க.. 

16 January 2011

தீக்குள் விரலை வைத்தால்.. நந்தலாலா..

நான் பொதுவா படம் பார்க்கறதுக்கு முன்னாடி கதை தெரிஞ்சுக்க மாட்டேன்.. இத்துனூண்டு கூடத் தெரிஞ்சுக்கக் கூடாதுன்னு ஒரு அல்ப ஆசை.. படம் நல்லாயிருக்கா இல்லையா - இது தெரிஞ்சிருந்தா போதும். இதையும் அப்படித் தான் பார்க்க ஆரம்பிச்சேன்.. ஒரு படத்த நிறைய பேரு நல்லாயிருக்குன்னு சொல்லியிருந்தாலே ஏகப்பட்ட எதிர்பார்ப்போட பார்க்க ஆரம்பிச்சு அந்தப் படம் எனக்கு அவ்வளவா பிடிக்காம போயிடும்.. இதுவும் அப்படி ஆயிடுமோன்னு கொஞ்சம் பயம் இருந்தது.. ஆனா படத்தோட முதல் சில காட்சிகளிலேயே அது காணாம போயிடுச்சு..

எனக்கு எதைச் சொல்லுறது எதை விடறதுன்னு தெரியல! ரொம்ப நல்லாயிருந்தது.. "தீதும்" "நன்றும்" சிறு சிறு கவிதைகளாக படம் முழுக்கத் தூவி விட்டிருக்காங்க.. நாமும் வாழ்க்கையில இப்படி பல நல்ல நேரங்களை நல்ல மனிதர்களைக் கடந்து வந்திருப்போம்.. ரயில் பயணத்திலோ இல்லை கல்லூரியிலோ.. சில சின்னச் சின்ன உதவிகள் கூட "காலத்தால் செய்யும் உதவி சிறிதெனினும்.." ன்ற மாதிரி நமக்கு அப்போதைக்கு பெருசா உதவியிருக்கும்.. அவங்களுக்கு இப்போ நம்ம நினைவு இல்லாட்டியும் நம்ம மனசுல அவங்க எப்பவுமே இருப்பாங்க. காட்சியமைப்புகள் சூப்பர்ப்!! நல்லா அழுதேன்.. :)) ஆனா இந்தளவுக்கு திக் திக் அனுபவங்கள் நமக்கு வாழ்க்கையில நேரடியா ஏற்பட்டிருக்காது (குறைந்தபட்சம் எனக்கு ஏற்பட்டதில்ல).

மிஷ்கினுக்கு பதிலா வேறொருத்தர் நடிச்சிருந்தா எப்படி இருந்திருக்கும்ன்னு தெரியல. ஒரு சில வசனங்கள் மட்டும் செயற்கையா இருந்தது. சில காட்சிகள் மிகைப்படுத்தப்பட்ட மாதிரி.. கொஞ்சம் ஓவர் டோசேஜ் மாதிரியும் தோனுச்சு.. இன்னும் கொஞ்சம் சுருக்கியிருக்கலாம். இயக்குனருக்கு சொந்தமாவே இப்படி ஒரு கதை தோனியிருந்தா இன்னும் சந்தோஷப்பட்டிருப்பேன்.  இன்னும் யாராவது பார்க்காம இருந்திருந்தா பாத்திடுங்க.. நானும் முடிஞ்சா இன்னொருக்கா பார்க்கனும்..

அதென்னமோ படம் பாத்துகிட்டு இருக்கும் போதே இந்தப் பாட்டு கேக்கனும்ன்னு ஆசையா இருந்தது..



எல்லாரும் பொங்க வச்சு முடிச்சுட்டீங்களா? மிச்சம் மீதி ஏதாவது இருந்தா ஒரு ஐஸ் பொட்டியில வச்சு எங்க வீட்டுக்கு அனுப்பி விடுங்க. புண்ணியமாப் போவும்.. பக்கத்துல இருக்கறவங்களா இருந்தா நானே வந்து டோர் பிக்கப் பண்ணிப்பேன் :)..

05 December 2010

பெண்.. மனம்.. பாட்டு..

//பெண் மனதை சொல்லும் பாட்டு


பெண்கள் மனசை வெளிபடுத்தும் பாட்டு, அதுவும் பெண் பாடிய பாட்டு, அதுவும் பெண் குரலிலேயே இருக்கிற பாட்டு//

இதை மஹி என்னை தொடர அழைத்திருக்கிறார்.. முதலில் அதற்கு ஒரு நன்றி.. எழுத விருப்பம் இருக்கும் தலைப்பு.. இந்த வரிகளை ஆசியா அவர்களின் பதிவில் இருந்து எடுத்துப் போட்டுள்ளேன்..

சில இயக்குனர்கள் தமது படங்களின் பெண் பாத்திரங்களை சரியாக உருவகப் படுத்துவதில்லை.. ஒன்று, த்ரிஷாவுக்கு பாவாடை தாவணி கட்டி பாந்தமான பெண்ணாக காட்ட முயற்சிப்பார்கள்.. இல்லை, ஸ்ரேயாவை அல்ட்ரா மாடர்ன்-அரை லூசு-அழகுப் பெண்ணாக வளைய விடுவார்கள் (நேற்று பார்த்த சிக்கு புக்கு என்ற படத்தை வைத்து சொல்கிறேன்.. அந்தப் பாத்திரம் செயற்கையாக இருந்தது.. ஜப் வீ மெட் படத்தின் கரீனாகபூர் பாத்திரத்தை கொண்டு வர முயற்சித்து தோல்வி கண்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.. ஜப் வீ மெட்டில் வரும் கரீனாவின் பாத்திரம் மிக நன்றாக இருக்கும்..).. அதுவும் இல்லையா, இருக்கவே இருக்கு ஈகோ பிடித்த பெண் :)) 

இதைத் தாண்டி சற்றேனும் பெண்களை இயல்பாக, நல்லவராகவோ இல்லை கெட்டவராகவோ, வெளிப்படுத்தும் படங்கள் உண்டு.. பெண்ணினது பாத்திரம் சரியாக வடிவமைக்கப்பட்டாலே எனக்கு அந்தப் படம் கொஞ்சமாவது பிடித்துப் போகும்.. கல்லூரி, பூ, அங்காடித் தெரு, வாரணம் ஆயிரம், பருத்தி வீரன், மொழி.. இப்படி..

சரி.. பாட்டுக்கு வருவோம்.. அந்தந்த பாத்திரம் (அடுப்பங்கரைப் பாத்திரம் இல்லீங்கோ :) ) பாடும் பாட்டு என்பதால் சில.. பாடல் இனிமையாக, பாடியிருக்கும் குரல் இனிமையாக இருப்பதால் சில.. பிடித்ததை பத்துக்குள் அடக்கி விட முடியாது.. நேற்று இரவு சட்டென நினைவுக்கு வந்தவை மட்டுமே இங்கு.. வரிசைப்படியும் தரவில்லை.. பெண்ணின் மனது இப்பாடல்களில் வெளிப்படுகிறது என்றெல்லாம் சொல்லிவிட முடியாது :) படங்களில் பாடலைப் பாடுபவர்கள் பெண் கதாப்பாத்திரங்கள்.. பாட்டு எனக்குப் பிடிக்கும்.. அவ்வளவே.. 

௧. பொதுவாக பெண்கள் தனது காதலை நேரடியாக வெளிப்படுத்த தயங்குவார்கள்.. இந்த நாட்டிலும் அப்படித் தான் என்று நினைக்கிறேன்.. ஆனால் அந்த வட்டத்தை தாண்டி, நான் உன்னை விரும்புகிறேன்.. உன்னை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்.. உன்னோடு வாழ விரும்புகிறேன்.. என்று மாயா தைரியமாக தனது காதலைச் சொல்கிறார்.. திருமணம் முடிந்து, தேனிலவுக்காக ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து, அங்கு அந்தப் பெண் பாடும் பாடல்.. தாமரையினது வரிகள்.. பாம்பே ஜெயஸ்ரீ குரல்.. 


இதில் வரும் "பெண்களை நிமிர்ந்தும் பார்த்திடா.. உன் இனிய கண்ணியம் பிடிக்குதே.." வரிகளின் மேல் எனது தோழியருக்கு விமர்சனங்கள் எழுந்ததுண்டு.. பெண்ணைப் பாத்திடவே விரும்பாதவன் கண்ணியமானவனா என்று :) ஆனால் அடுத்து வந்த "கண்களை நேராய் பார்த்து தான்.. நீ பேசும் தோரணை பிடிக்குதே.." என்ற வரிகள் பிடிக்கும்.. 

௨. ஒரு சைக்கோ கணவனை விவாகரத்து செய்து விட்டு வாழும் பெண்.. கொஞ்சம் நாள் கழித்து சகோதரனின் நண்பருடன் அறிமுகம் ஏற்பட்டு, கொஞ்சம் தயக்கத்துடன் பழகி.. பின் மெல்ல காதல் கனியும்.. இந்தச் சூழ்நிலையில் வரும் இந்தப் பாடல் அந்தப் பெண்ணின் மனதே பேசுவது போல இருக்கும்.. சத்தம் போடாதே எனும் இந்தப் படம் அவ்வளவாக வெற்றி பெறவில்லை.. பாடியவர் நேஹா பாஸின்.. 


௩. நண்பன்-நட்பு என்று நாயகி ஒருவனுடன் பழகுகிறார்.. அந்த ஆண் இவரை விரும்ப ஆரம்பிக்க, நாயகி இன்னொருவனைக் காதலிக்கிறார்.. முதலில் சொன்ன நண்பன் கொஞ்சம் சைக்கோ.. நாயகியை கடத்தி வந்து சிறை வைத்து விடுகிறார்.. இதை உணராத நாயகி நண்பன் சோகமாக இருப்பதைக் கண்டு ஒரு தோழியினது பரிவோடு பாடும் பாடல்.. (எனக்கு இந்தப் படம் அவ்வளவாகப் பிடிக்கவில்லை.. ஆனால் பாட்டு வரும் சூழ்நிலை அதன் இனிமை.. நன்றாகயிருக்கும்..) தான் செய்த தவறை உணர்ந்து அந்த நண்பன் அழுவான்.. பெண் குரல் யாருடையது என்று தெரியவில்லை.. யுவன் இசையில் இனிமையான பாடல்... 


௪. இந்தப் பெண் போல ஒரு தோழி கிடைத்தால் எவ்வளவு நல்லாயிருக்கும்? தோல்வியில் துவண்டு கொண்டிருக்கும் நண்பர்களுக்கு தம்மால் முடிந்த உதவிகள் செய்து அவர்களை ஒரு நிகழ்ச்சிக்கு அழைத்து அங்கு இவர் பாடும் இந்தப் பாடல்.. தெளிவான உறுதியான பெண்!! அந்த நண்பர்களுக்கு மட்டுமல்ல எனக்கும் சில நேரம் நல்லுணர்வு கொடுத்திருக்கும் பாடல்.. சித்ரா வின் இனிய குரலில்.. 


௫. ஒரு கலைஞனின் வாசகியாய், மேடையேறி, தான் கண்ட குறையைச் சொல்லும் பாடல்.. அந்தத் துணிவும் அவருக்கு தன் கருத்தில் இருக்கும் தெளிவும் பிடிக்கும்.. இசைக்கும் மொழிக்கும் கலைக்கும் வரம்புகள் இல்லை என்று தான் நானும் நினைப்பேன்.. ஆனால், கட்டமைக்கப்பட்ட ஒழுங்கினை மிக ஒட்டி இசையோ அல்லது மொழியோ வெளிப்படும் போது, அந்த ஒழுங்கைப் புரிந்து கொண்டவர்களுக்கு பரவசம் ஏற்படுவதும் உண்மை.. இலக்கணங்களுக் குட்பட்டு அழகுத் தமிழில் ஒரு கவிதை படித்தால் நன்றாகத் தான் இருக்கும்.. ஆனால் அது மட்டுந்தான் தமிழ் என்றால் ஏற்றுக் கொள்ள முடியாது தானே? மறுபடியும் சித்ராவின் குரலில்.. இது அவங்களோட முதல் பாட்டுன்னு நினைக்கறேன்..


௬. சில படத்துல ரெண்டு பொண்ணுங்களைக் காட்டினாலே ஒருத்தி நல்லவளாகவும் ஒருத்தி கெட்டவளாகவுந் தான் காமிப்பாங்க :) விதிவிலக்கா சில சமயம் ரெண்டு பேரையுமே வேறுபடுத்தி ஆனா நல்ல விதமா காட்டியிருப்பாங்க.. உதாரணத்துக்கு, பார்த்திபன் கனவு படத்தில் ரெண்டு சிநேஹா வருவாங்க.. ஒருத்தர் லட்சியப் பெண்.. இன்னொருத்தர் குடும்பத்தோட இருப்பதே போதும் ன்னு நினைப்பவர்..

இந்தப் படத்திலும் அப்படி ரெண்டு பேர்.. ஒருத்தர் நாயகனோட காதலி.. இன்னொருத்தர் மனைவி.. மனைவி, கணவனோட பழைய டைரிய படிச்சிட்டு, மொதல்ல கஷ்டப்பட்டு, பின்னர் அவன் ஒரு காலத்தில தன் காதலியை ரொம்ப விரும்பியிருக்கிறான்னு புரிஞ்சுகிட்டு, அந்தக் காதலிய தேடிக் கண்டுபிடிச்சு அழைத்து வருவாங்க..  "ஒரு நாள்னாலும் உன்கூட வாழ்ந்துட்டுப் போயிடனும்" ன்னு இருக்கும் டைரியில.. உன்னை மட்டுமில்ல, உன்னோட ஆசைகளையும் காதலிக்கிறேன்னு கணவன் கிட்ட சொல்லிட்டு இவங்க ரெண்டு பேரையும் தனியா விட்டுட்டு மனைவி கிளம்பிப் போயிடுவாங்க (பாதி மனசோட தான் :))) ).. காதலியோ, என் பொருள் இன்னொரு இடத்துல இருந்தாலும் பத்திரமா இருக்குன்னு சந்தோஷப்படறேன் ன்னு சொல்லிட்டு கிளம்பிடுவாங்க..

ப்ளாஷ் பேக்ல, கல்லூரியில, நாயகன் தன் காதலியோட பாடற இந்தப் பாட்டு பிடிக்கும்..  பாடகி? இனிய உணர்வுப்பூர்வமான குரலுக்குச் சொந்தக்காரரான ஸ்ரேயா கோஷல்.. பாட்டுல நாயகி முகத்துல தெரியற சந்தோசத்தை, பரவசத்தை, காதலைப் பாருங்க.. கூடவே நாயகனோட குறும்பும்.. இவங்க ரெண்டு பேரும் சேர்ந்திருந்தா ரொம்ப நல்லாயிருந்திருக்கும்ன்னு நினைக்க வைச்ச பாடல்..


௭. தத்துப் பெண்ணோட, அம்மா பாடற பாடல்.. சிம்ரனும் குழந்தையும் ரொம்ப நல்லாப் பண்ணியிருப்பாங்க.. சின்மயி யின் குரலில் பாட்டு.. உண்மையில இதை விட அப்பா பாடற பாடல் (இதே, ஆண் குரலில்) பிடிக்கும்.. இசை ரொம்ப நல்லாயிருக்கும்..

செல்ல மழையும் நீ.. சின்ன இடியும் நீ..

௮. ஜெஸ்ஸி யின் இனிமையான குரல்.. இவங்களோட பேட்டி கொஞ்சம் வருஷத்துக்கு முன்னாடி தான் படிச்சேன்.. ரொம்ப நல்லா வந்திருக்க வேண்டியவங்க.. கொஞ்சம் படங்களோட காணாம போயிட்டாங்க.. ம்ம்.. தெய்வீக ராகம்.. தெவிட்டாத பாடல்.. கேட்டிருக்கீங்க தானே? பாடியவர் அவரே..

இப்ப நான் சொல்லப் போற படத்துல நாயகி ஒரு பாடகி.. அவங்க பாடற பாடல் தான் இது.. ஒரு பாடகியா இசையை ரசிச்சுப் பாடியிருப்பாங்க..

ஒரு இனிய மனது இசையை அணைத்துச் செல்லும்..

௯. ஹரிணியின் குரலுக்காக இந்தப் பாட்டு.. இது கொஞ்சமாவது பெண் மனசைச் சொல்லுதோ இல்லையோ.. அந்த ஐஸ்கிரீம் குரலுக்காக கேட்கலாம் :)

நிலா காய்கிறது..

௰. புலியை முறத்தால் விரட்டின மூத்த குடியில் வந்த இளம் குடிகள் தானே நாமெல்லாம்??!! :))) மேலும், பெண் என்றாலே இள நடுத்தர வயதுப் பெண்கள் மட்டுந்தானா? பாட்டி எல்லாம் பாடப்படாதா? தனது பேராண்டியின் வீரத்தைப் போற்றி, தனது பெருமிதத்தை வெளிப்படுத்தி, ஒரு பாட்டி "போர்க்களத்திலே" ஆடிப் பாடும் இந்தப் பாடல் ரொம்பவே புடிக்குமுங்கோ!! :))



02 October 2010

எந்திரன் - காதுல வயர்

அழகு - இருக்குங்க (ஐஸ்க்கு வயசே ஆகாதா?)

பிரமிப்பு - இருக்குங்க

பிரமாண்டம் - இருக்குங்க

கற்பனை, உழைப்பு, கிராபிக்ஸ் - குறைச்சலே இல்லாம இருக்குங்க

கலர் - கிளிமஞ்சாரோ ன்னு ஒரு பாட்டு வருதுங்க. அதுல ஐஸ் கலர் கலரா வராங்க.

உணர்வு - தலீவரு பேரு வர்றப்வே, படம் பாக்கற மக்களுக்கெல்லாம் பொங்கி வந்துடுச்சுங்க. விசிலு, பேப்பரு, கைதட்டலுன்னு தூள் கெளம்புது. எழுந்து நின்னு சாமியாடாதா கொற ஒன்னு தான்..

இசை - காதடைக்கற அளவுக்கு இருக்குங்க


அட, உலோகம் கூட டன் கணக்குல இருக்குதுங்க..

கதை - இது கூட ஒரு வரில சொல்ற அளவுக்காவது இருக்குங்க 



லாஜிக் - புல் மீல்சுல ஓரமா இத்துனூண்டு ஊறுகா தொட்டுக்க வைப்பாங்களே, அந்தளவுக்காவது இருக்குங்க


உயிர் - அதையத் தானுங்க காணோம்.


நான் கூட எந்திரன் படத்துல ரஜினி நடிச்சிருக்காருன்னு நெனச்சு போனேங்க.. பொறவு தான் தெரிஞ்சது, ரஜினி படத்துல ரோபோட்டும் நடிச்சிருக்குன்னு.. அதுக்காகவே அந்த "ரோபோட்"ட பிடிச்சிருக்குங்க.

26 September 2010

எ கொ ச இ?



இப்போதான் இந்தக் குறும்படத்தப் பாத்தேன்.. Just for fun.. யாரும் அடிக்க வராதீங்க மக்கள்ஸ் :)

போன இடுகைக்கான தொடர்ச்சி இது.. புரிஞ்சுதா? பயப்படாம பாத்து, சிரிக்கோனும்.. சிரிச்சதப் பாத்து மத்தவங்க யாரும் பயந்தா அதுக்கு கம்பெனி பொறுப்பில்ல..

19 July 2010

Inception


வித்தியாசமான திரைப்படங்களை காண விரும்புபவரா நீங்கள்? உங்களுக்கு ஒரு படத்தை ரெண்டு மணி நேரம் உக்காந்து பாக்க பொறுமையும், அதுக்கப்புறம் ஒரு அரை நாள் உக்காந்து யோசிக்க நேரமும், தேவைப்பட்டால் இன்னொரு முறை பார்க்கும் வசதியும் இருக்கா? அப்படி என்றால் தாராளமாக இந்தப் படத்துக்கு போகலாம் :)

இதை பார்த்து விட்டு வெளியில் வரும் போது, இரண்டு வகையான எண்ணங்கள் தோன்றலாம் - என்னடா படம் இது? ஒரு மண்ணுமே புரியல.. என்னத்த தான் சொல்லியிருக்கான்? இல்லையென்றால், அட அட அட.. என்னமா எடுத்திருக்கான்.. அருமை அருமை... இப்படி ஒரு தெளிவான மனநிலையுடன் நீங்கள் வெளியே வந்தால், இதில் எது தோன்றினாலும், உங்களுக்கு படம் புரியவில்லை என்று தான் பொருள் :))

மாறாக, படம் முடிந்து வெளியே வரும் போது, படத்துக்கு போகும் போது எந்த வழியில் போனோம், அப்போது என்ன காலநிலை - இதெல்லாம் மறந்து போய், சென்றது, பார்த்தது எல்லாமே ஒரு கனவாக, குழப்பமாகத் தோன்றினால்,  படம் ஏதோ புரிந்திருக்கிறது என்று அர்த்தம்.. :)) எங்களுக்கும் இப்படித்தான் ஆயிற்று.. வீட்டில் இருந்து கிளம்பும் போதே வானம் மேகமூட்டமாய்த் தான் இருந்தது.. பின் கருக்கல் அதிகமாகி, இடி இடித்து, இருள் சூழ்ந்து, மழை துவங்கி, வெள்ளமாகப் பெருக்கெடுத்தது.. வானிலை பார்க்காமல், பொதுப் போக்குவரத்தில் சென்றதால், கிட்டத்தட்ட தெப்பமாக நனைந்து, டிஸ்யூ வைத்து துவட்டிக் கொண்டு சென்றோம் :)) பாதிவழியில் பஸ் ஐ நிறுத்தி விட்டார்கள்.. இதற்கு மேல் போக முடியாது, வழியெல்லாம் ஒரே தண்ணியென.. சிறிது நேரம் காத்திருந்த பின் நிலைமை சரியாயிற்று.. ஆனால், வீடு திரும்பும்போது, வானம் தெளிந்து, பாதைகளும் தெளிந்திருந்தன.. எல்லாமே ஏதோ ஒரு கனவாய்த் தோன்ற, வீடு வந்து சேர்ந்தோம்..

Inception எண்டால் ஆரம்பம் என்று பொருளாம்.. படத்தின் ஆரம்பமும் முடிவும் ஒரே மையப் புள்ளியில் வந்து முடிவது போல் இருக்கிறது.. அப்படி என்றால் ஆரம்பம் எங்கே?? முடிவுதான் எங்கே? எத்தனை பேர் deja vu  பார்த்திருப்பீர்கள் எனத் தெரியவில்லை.. ஆனால் sixth sense, அப்புறம் நம்மூரு 12 B நிறைய பேர் பார்த்திருப்பீர்கள்.. ஆனால், இவற்றையெல்லாம் தூசு என்று சொல்லும் அளவுக்கு complex கதையிது :)

படத்தின் கதையைச் சொல்ல, அதனை முழுமையாக அனுபவித்து விமர்சிக்க இப்போது எனக்கு தெம்பு கிடையாது.. (ஹி ஹி, இன்னும் ஒரு முறையாவது மறுபடியும் பார்த்தால் தான் நன்கு புரியும் :)) ).. இம்புட்டு பில்டப் கொடுத்து விட்டு, ஒன்னுமே சொல்லாம எஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஆவுறயே என்று திட்டுபவர்களுக்காக, மேம்போக்காக மட்டும் சொல்லிப் போகிறேன்..


ஹீரோ (லியோ... டி காப்ரியோ) ஓர் உள்ளங்கவர் கள்வன் :) அதாவது, எதிராளியின் மனதில் இருக்கும் ரகசியத்தை திருடுபவன்.. எப்படி தெரியுமா - எதிராளியும் இவனும் தூங்க, தூக்கத்தில் இருவருக்குமான ஒரு கனவினை சஞ்சரித்து, அந்தக் கனவுக்குள் ஓர் உலகத்தை, சம்பவங்களை உருவாக்கி, இவனும் எதிராளியும் அதில் பேசித்திரிந்து, அப்போது எதிராளியின் மனதில் இருப்பதை அறிந்து கொள்ளையடிப்பவன் :)))

குற்றவாளியான காரணத்தால், லியோ தன் குழந்தைகளிடம் இருந்து பிரிந்து வாழ வேண்டிய சூழ்நிலை.. தனக்கான ஒரு வேலையை லியோவால் நடத்திக்கொடுக்க முடிந்தால், லியோவை அவனது குழந்தைகளிடம் சேர்ப்பிக்கும் பொறுப்பை தான் ஏற்றுக்கொள்வதாக பெரும் புள்ளி ஒருவன் பேரம் பேசுகிறான்.. இது இன்னும் சற்று கடினமான வேலை.. அதாவது, லியோ, எதிராளி ஒருவனது ஆழ்மனதிற்குள் ஊடுருவி, அவனுள் அப்போதைக்கு உறுதியாக நிற்கும் ஓர் எண்ணத்தை மாற்றியமைக்க வேண்டும்!!

இந்த எதிராளியின் பெயர் ராபர்ட்.. இவனது அப்பா பெட்ரோலியத் துறையுலகில் பெரும் பணக்காரர்.. அப்பா மரணப்படுக்கையில் இருக்க, மகன் வாரிசாகப் போகும் நேரம்.. வில்லனுக்கும் இவர்களுக்கும் இடையேயான தொழிற் போட்டியின் காரணமாகவே லியோவுடன் இந்தப் பேரம் பேசப்படுகிறது... லியோவும் அதற்கு சம்மதிக்க, அதற்கான ஏற்பாடுகள், ஆட்கள் என தேவைகளை செய்து முடிக்கிறார்கள்.. கனவுக்குள் கனவு கண்டு, அதற்குள் இன்னோரு கனவு கண்டு என மெதுமெதுவாக எதிராளியின் மனதை கையகப்படுத்த வேண்டும்.. எல்லோருமாக இந்த விளையாட்டின் விதிமுறைகளை விவாதிக்கிறார்கள்.. கனவில் பயணிக்கும் சமயம், நனவுலக்குக்கும் கனவுலகுக்குமான  காலநிலைப்பாடு வெகுவாக வேறுபடுகிறது.. ஒரு மணி நேரக் கனவென்றால் வெளியே ஐந்து நிமிடம் மட்டுமே ஆகியிருக்கும்.. இதனால் ஏற்படும் விளைவுகள், கனவுலகில் இருந்து விழிக்க என்ன செய்ய வேண்டும், கனவிலே இறந்துபோனால் என்ன நடக்கும், இது கனவா நனவா எப்படி கண்டுபிடிக்க என பல விதிமுறைகள்!!!

அப்புறம் தான் படம் சூடு பிடிக்கிறது.. ராபர்ட் செல்லும் விமானத்தில் இவர்களும் பயணமாகி, அவனுக்கு மயக்க மருந்து கொடுத்து தூங்க வைத்து விட்டு, இவர்களும் தூங்க.. முதலில் ஒரு பொது கனவினை உண்டாக்கி - அதில் அனைவரும் பயணிக்க, அதற்குள்ளே இருந்து இன்னொரு கனவு, அதற்குள்ளே இருந்து இன்னொன்று என, கிட்டத்தட்ட ஐந்து கனவுலங்கள்.. அதே பாத்திரங்கள் தான், ஆனால் முற்றிலும் வேறுபட்ட சூழ்நிலைகளில்... கொஞ்சம் கொஞ்சமாக ராபர்ட்டின் அந்த எண்ணத்தை நெருங்க, அவனது மனமோ இது போன்ற திருட்டுகளிடம் இருந்து தப்பிக்க ஏற்கனவே பெற்ற பயிற்சியால் இவர்களைச் சுட்டு எதிர்க்க முயல.. இதற்கிடையே, லியோவின் ஆழ்மனதில் புதைந்து கிடக்கும் ஒரு வலி வேறு வந்து குறுக்கிட...




ஒரு வழியாக ராபர்ட்டின் மனதில் இவர்கள் விருப்பப்பட்ட அந்த எண்ணத்தை ஆழ விதைத்துவிட்ட பின், முடிவில், எல்லாரையும் ஹா என்று வாய் திறக்க வைத்ததோர் அழகான திருப்பத்துடன் முடிக்கிறார்கள்...

படத்தில் பிடித்த விஷயமே - மிகக் கடினமான திரைக்கதையை நமக்கும் புரியும் வண்ணம் வடிவமைத்திருப்பது.. அதாவது, படம் பார்க்கப் பார்க்க, ஒரு கடினமான புதிரை நாம் அவிழ்ப்பது போன்ற உற்சாகத்தை நமக்குள்ளே தோற்றுவிப்பது.. அப்புறம், இத்தனை கடினத்திலும், மிகத் தெளிவான திரைக்கதையை கொண்டிருப்பது.. கற்பனையுலகக் கான்செப்ட் கொஞ்சமாக Matrix படத்தை நினைவுபடுத்தியது.. இப்படத்தை உருவாக்க பத்தாண்டுகள் பிடித்ததாம்.. கனவிலேயே உருவாக்கியிருப்பார்களோ?

நேற்று இரவு, படத்தைப் பற்றிய தெளிவு பெற, இணையதளத்தில் கொஞ்சம் துழாவிப் பார்த்த போது தான் தெரிந்தது, படத்தின் முடிவு குறித்து ஒரு பட்டிமன்றமே நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.. அதாவது, முழுப் படமுமே ஒரு கனவு தான் என ஒரு சாராரும், இல்லை, நனவு தான் என ஒரு சாராரும்.. ஒவ்வொருவரும் தத்தம் பார்வையில் இதற்கான விளக்கங்களும் சொல்லியிருந்தார்கள்.. இதையெல்லாம் படித்து பார்த்தும், எந்தவொரு முடிவுக்குமே வர முடியாமல் போனதால், பொழப்பில்லாம இப்பிடி வெட்டியா இந்தப் படத்தப் பத்தி பேசிகிட்டு இருக்காங்களே என அவர்களைக் கொஞ்சம் திட்டி விட்டு, நானும் இப்போது வெட்டியாய் இந்தப் படத்தை பற்றிச் சொல்லி உங்களை குழப்பிக் கொண்டிருக்கிறேன்.. :)))


ஏதாச்சும் புரிஞ்சதா?? :)))))))))) இல்லாட்டி கனவுல வந்து புரிய வைக்கறேன்.. ஓக்கை?? நல்லிரவு!!

17 July 2010

ரங்கோலி



கவனிக்க: படத்தின் கதையேதும் சொல்லவில்லை :)

டாய் ஸ்டோரி 3, 3 டி யில் பார்த்தோம்.. இதற்கான நல்ல விமர்சனங்களை படித்திருந்ததால், மற்ற படங்களை விட்டுவிட்டு இதற்கே செல்வதென முடிவெடுக்கப்பட்டது.. எனக்கு இப்படம் காண விருப்பமிருந்தாலும், கொஞ்சம் நடுக்கமாகத்தானிருந்தது.. ஏற்கனவே ஒரு முறை கார்ட்டூன் கதாப்பாத்திரங்களைத் தெரியாமல் முழித்திருக்க, இப்போது இதில் வரக்கூடிய பொம்மைகளையும் யார் ஏதென்று தெரியாமல் முழிக்கப் போகிறோம் என்றெண்ணினேன்.. மேலும், இப்படத்தின் முதலிரண்டு பாகங்களை பார்த்திராததால், இது புரியாமல் போய் விடலாம் என்றும் தோன்றியது.. வேறெதுவும் உருப்படியாக இல்லாததால் இதற்கே செல்ல வேண்டிய நிலைமை.. இதையெல்லாம் தாண்டி, படம் பார்த்த பொழுது நன்றாகவே புரிந்தது.. படம் பிடித்தது.. ஆனால், ரொம்போப் பிடிச்சிருக்கு என்று உரக்கக் கத்திச் சொல்ல முடியவில்லை.. ஒரு வேளை, முந்தைய பாகங்களையும் பார்த்திருந்தால், கதையின் பாத்திரங்களோடு நன்றாகவே ஒன்றியிருந்திருக்கலாம்.. படத்தில், பாராட்ட வேண்டிய விஷயங்கள் நிறைய.. கதையின் போக்கு சீராக இருந்தது.. அனிமேஷன் மிக அருமை.. பொம்மைகளின் உணர்வுகளை அழகாக வடிவமைத்திருந்தார்கள்.. மனம் ஏங்குகிறது - இப்படியொரு கற்பனையுலக உருவாக்கப்பணியில் இருந்தால் நல்லாயிருக்குமென்று.. முடிவில், சுபமோ சுபமென்று செயற்கையாக முடிக்காமல், சுபமாக அதே சமயம், நடைமுறைக்கு ஏற்றவாறு படம் முடிக்கப்பட்டது நன்றாகயிருந்தது.. கிட்ஸ் மூவி என்ற உணர்வு இறுதியில் வந்தாலும், உண்மையில் அது குழந்தைகளுக்கான படந்தானே.. ம்ம்..

இந்தப் படத்தைப் பற்றி இவ்வளவு குறைவாக எழுதியிருப்பவள் நான் மட்டுந்தானென்று நினைக்கிறேன்.. :)) 

படம் பார்த்து விட்டு வீடு திரும்புகையில், வழியில் காண நேர்ந்த துணிக்கடையில் தென்பட்ட பொம்மைகளும், இப்படித் தான், மனிதர்களற்ற பொழுதுகளில் பேசிக்கொள்ளுகின்றனவோ என்ற எண்ணம் வந்து புன்னகைக்கச் செய்தது..

நீங்களும் பார்த்துட்டுச் சொல்லுங்க.....

********************

இப்போது தான்.. கொஞ்சம் நேரம் முன்பு, ஒரு தோழி லேப்டாப்பை தூக்கிக் கொண்டு பயங்கர உற்சாகமாய் வந்தார்.. அவர் லேப்டாப்பில் இந்த நிகழ்ச்சியை பார்க்க ஆரம்பித்தாராம்.. ஆனால், யாரோடாவது சேர்ந்து பார்த்தால் இன்னமும் நல்லாயிருக்குமென்று தோன்றியதால், அதை அப்படியே பாஸ் செய்து விட்டு, இங்கு வந்திருந்தார்..


வேறொன்றுமில்லை.. தோழி இன்னமும் கல்லூரி வயதை விட்டு நீங்காமல், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் பார்த்து குதூகலிப்பவர்.. எமக்கெல்லாம் பொழப்பே திண்டாட்டமாக இருக்கையில், இது போன்றவைகளைப் பார்த்து வெகு நாட்களாகிப் போயாச்சு.. இருந்தாலும், இந்த நிகழ்ச்சி பிடித்தது.. புதிதாக கற்பனையுடனும் திறமையுடனும் இருந்ததால்.. நீங்களும் பார்த்துட்டுச் சொல்லுங்க..

********************

மெயிலில் வந்தவை.. அரதப் பழசாயிருந்தா, கமுக்கமா கிழிச்சுப் போட்டுட்டுப் போயிட்டே இருங்க :)) புதுசா, முடிஞ்சா சிரிங்க.. கஷ்டமாயிருந்தா விட்டுடுங்க :))
















ஓக்கை.. நல்லிரவு

**************************************************************************


26 February 2010

தமிழ்ப்படம் :))))))))))))))))



நிறையத் தமிழ்ப் படம் பார்ப்பவரா நீங்கள்? நொந்து நூடுல்ஸாகியிருக்கீங்களா?? அப்படின்னா கண்டிப்பாக பார்த்து ரசிக்க வேண்டிய படம்..

ஹா ஹா.. வெகு நாட்கள் கழித்து மறுபடியும் என்னை வாய் விட்டு சிரிக்க வைத்தது... ஆங்கிலத்தில் ஸ்கேரி மூவிஸ் என்று புகழ்ப்பெற்ற படங்களைக் கிண்டலடித்து எடுப்பார்கள்.. அந்த விதத்தில் தமிழில் முதற் முயற்சி...  இயக்குனரின் தில் லை பாராட்டியாக வேண்டும்..

கதையென்று பெரிதாக ஒன்றுமில்லை.. வழக்கமான மசாலாப் படத்திலிருக்கும் கதையை விட குறைச்சலானதுமில்லை!!  நாட்டாமை சொல்லும் தண்டனைக்கு (சிம்பு படத்தை நூறு முறை டி வி யில் பார்ப்பது!!) பயந்து அவரது அப்பா அவரைக் கொல்ல முயல, பாட்டியால் (பரவை முனியம்மா) காப்பாற்றப்பட்டு, சென்னைக்கு வந்து (கிராமத்திலிருந்து செல்லும் எல்லா ரயிலும் சென்னைக்குத் தான் போகுதாம் :) )... சைக்கிள் பெடலைச் சுற்றியவாறே பெரியவராகிறார்.. காதல் மோதல்.. அடிதடி, அதிரடித் திருப்பங்கள் என்று கதை கண்டபடிக்கு பயணிக்கிறது..

கருத்தம்மாவில் தொடங்கி.. பல படங்களை கிண்டலடித்து.. எல்லா பெரிய நடிகர்களையும் இமிடேட் செய்து.. ஹா ஹா.. ஹீரோ எவ்வளவு பெரிய படையை எதிர்கொண்டாலும் அலட்சியமாக ஒரு புன்னகையை வீசுகிறார்.. கண்டபடி பஞ்ச் டயலாக் பேசுகிறார்.. பறந்து பறந்து அடிக்கிறார்.. ரொமாண்டிக் முகங்கொண்டு காதல் செய்கிறார்.. வெளிநாட்டில் ஹீரோயினுடன் தமிழ் வார்த்தைகளே இல்லாத ஒரு டூயட்டைப் பாடுகிறார்..

ரேடியோ மிர்ச்சி சிவா தான் ஹீரோ..  இவருடன் உடன் பயிலும் கல்லூரி நண்பர்கள் - வெண்ணிற ஆடை மூர்த்தி, பாஸ்கர், மற்றும் மனோ பாலா.. படத்தில் இவர்கள் பெயர் - நகுல், சித்தார்த்த், பரத் :)))) சிவா அருமையாக செய்திருக்கிறார். வில்லனை எட்டி உதைத்த ஷூ காலுடன் ஃப்ரீஸ் ஆகி நிற்கும் அவரது இண்ட்ரோ சீன் அருமை :))  தொடர்ந்து சிரிக்க வைத்துக் கொண்டே இருக்கிறார்..

ஒரு சாம்பிள் - கோடீஸ்வரராகி உங்கள் மகளைக் கைபிடிப்பேன் என்று ஹீரோயினின் தந்தையிடம் சவால் விட்டுச் சென்று, அந்தத் தந்தை ஒரு காப்பி குடித்து முடிப்பதற்குள், சிவா ஏர்போர்ட், சிவா ரயில்வே ஸ்டேஷன், சிவா எலக்ட்ரிக் போர்ட், என பலவற்றையும் சம்பாதித்து கட்டி விடுகிறார் :)) சொன்னால் சொல்லிக் கொண்டே போகலாம்.. அவ்வளவு நக்கல்..

நீளத்தைக் குறைத்து எடுத்திருக்கலாம்.. கதையை இன்னும் கொஞ்சம் சுவாரசியமாக செலுத்தியிருக்கலாம்..

பிடித்திருந்தது..

17 February 2010

காலண்டர் வாசகங்கள்....

தோழியொருவருடைய வீட்டில் இருந்த 2009 காலண்டரில் நான் கண்ட வாசகங்கள்.. ஆங்கிலத்தில் இருந்தன.. ஒவ்வொரு மாதத்துக்கும் ஒரு வாசகம்.. சிந்தனையாளர்களால் சொல்லப்பட்டவை.. அதற்கேற்றவாறே எடுத்திணைக்கப்பட்ட அழகான இயற்கைப் புகைப்படங்களுடன், ரசனையைத் தூண்டும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது...


பிடித்ததால் பகிர்ந்து கொள்கிறேன்..  
 
ஜனவரி:

Family is one of nature's masterpieces

(குடும்பமெனும் கட்டமைப்பில் நம்பிக்கையுண்டு.. வழிமொழிகிறேன்.. )

- George Bernard Shaw




ஃபிப்ரவரி:

கிழித்து உபயோகித்து விட்டார்கள்... :))


மார்ச்:

A man is not old until regrets take the place of dreams.

(வருத்தங்கள் கனவுகளின் இடத்தைப் பெறும் வரை மனிதனுக்கு வயதாவதில்லை. நான் எடுத்துக்கொண்டபடி - கனவிருக்கும் வரை மனிதனுக்கு வயதாவதில்லை. நல்லாயிருக்கே.. எனவே, ஸ்டார்ட் ட்ரீமிங்...)
- John Barrymore




ஏப்ரல்:

The price of greatness is responsibility 

(சரி தான்.. அதுக்கு பயந்துதானே க்ரேட் ஆக வேண்டாம்ன்னு முடிவுபண்ணியிருக்கோம்.. :))) )

- Winston Churchill


மே:

Adopt the pace of nature, her secret is patience

(பொறுத்தார் பூமியாள்வார்.. அதத் தானுங் சொல்றீங்... பிடிச்சிருக்கு)
 - Ralph Waldo Emerson






ஜூன்:

The purpose of life is not to be happy. It is to be useful, to be honorable, to be compassionate, to have it make some difference that you have lived and lived well

(என்னால் இதனை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை..)

  - Ralph Waldo Emerson







ஜூலை:

Everything has beauty, but not everyonse sees it..

(ரொம்ப பிடிச்சிருக்கு.. அப்ப எங்களையும் அழகுன்றீங்க.. ஏக மனதா ஒத்துக்கறோம்.. )

- Confuscius



ஆகஸ்ட்:

The first step toward success is taken when you refuse to be a captive of the environment in which you first find yourself

(யோசித்துப் பார்த்தால் சரியென்றே தோன்றுகிறது..)

- Mark Caine



செப்டெம்பர்:

True prosperity is the result of well-placed confidence in ourselves and our fellow man.

(சரிதான்..)

- Robert Burton




அக்டோபர்:

The only true wisdom is in knowing you know nothing

(ஹா ஹா.. சாக்ஸ் உண்மைய இப்படி போட்டு உடைச்சிட்டாரே..)

- Socrates





நவம்பர்:

Faith is to believe what you  do not see; the reward of faith is to see what you believe.

(பிடிச்சிருக்கு.. ஆனா எல்லாவாட்டியும் நடக்கறதில்லயே..)

- Saint Augustine




டிசம்பர்:
Courage is the ability to go from failure to failure without losing enthusiasm

(ஹா.. ஹா.. அதுக்கு இப்படியொரு அர்த்தம் இருக்குங்ளா? சரியாத் தான்ஞ் சொல்லியிருக்கீங்ணா)

- Winston Churchill






பி. கு: வாசகந்தேன் அவியளுது.. படமெல்லாம் எல்போர்ட் எடுத்ததுங்கோ..

23 January 2010

மூன்று முட்டாள்கள்

அடுத்ததாக எதை மெல்லுவது என்று, அவல் தேடி, வீட்டு அடுப்பங்கறை அஞ்சறைப்பெட்டி என எல்லாத்தையும் கொட்டிப் பார்த்ததில், எல் போர்டுக்கு வேறு ஒன்றும் தேறாததால், நேற்றுப் பார்த்த சினிமாவின்.. ஹி ஹி.. விமர்சனம் எல்லாம் இல்லீங்க.. ஃபீலிங்க் மட்டும்...



அமீர் (ரான்ச்சோ), மாதவன் (ஃபர்ஹான்), ஷர்மன் ஜோஷி (ராஜூ) - ரங்க் தே பஸந்தி யினுடைய அதே கூட்டணி.. இந்த முறையும் நல்ல ஆட்டம் போட்டு இருக்கிறார்கள்.. கூட போமன் இரானி, மற்றும் கரீனா கபூர்..

படத்தைப் பற்றி ஒரே வரியில் சொல்லுவதென்றால் - ”ஹா ஹா ஹா..” சென்றால் வாய் விட்டு வயிறு நோக சிரித்துவிட்டு வரலாம்.. கதை என்னவென்று எழுதப் போவதில்லை.. அதனால் மேற்கொண்டு தைரியமாக படிக்கலாம்..

மூவரும் காலேஜ் பாய்ஸ் மாதிரியே தான் இருக்கிறார்கள்.. நல்ல எக்ஸ்ப்ரெஷன்ஸ்.. சிறு வயது அமீர் செம க்யூட்டாக இருக்கிறார்.. போமன் சான்ஸே இல்லை.. அவசர அவசரமாக அடுத்தவனை முந்தி சைக்கிளை ஓட்டி வரும் அவருடைய இண்ட்ரோவே கலக்கலாக இருக்கிறது.. பறவைக்கூட்டைக் காட்டி அவர் கொடுக்கும் விளக்கத்தில் ஆரம்பித்து, மாணவர்களுக்கு கொடுக்கும் மெண்டல் டார்ச்சரில் தொடர்ந்து, கடைசி வரைக்கும் அருமை.. கரீனாவும் ஓகே.. அப்புறம் அந்த படிப்ஸ் சதுர்.. ம்ம்.. அவரைப் பற்றி கடைசியில் சொல்லுகிறேன்.. படத்தின் கதையும் போரடிக்காமல் செல்கிறது.. சின்னச் சின்ன திருப்புமுனைகளும் உண்டு..

நம் கல்வி முறையை நன்றாக  துவைத்து அலசி காயப் போட்டிருக்கிறார்கள்.. பிள்ளைகளை மனனம் செய்ய வைப்பதில் நாம் காட்டுகின்ற ஆர்வம் அவர்களது கற்பனையை, உருவாக்குத் திறனை வெளிக்கொண்டுவருவதில் காட்டுவதில்லை.. இது தான் கான்செப்ட்.. காமெடியாக இருப்பதற்காக கொஞ்சம் மிகைப்படுத்தி சொல்லியிருந்தாலும், உண்மை என்னவோ உறைக்கத் தான் செய்கிறது.. குதிரை ரேஸைப் போல, ஓடு ஓடிக்கொண்டேயிரு அடுத்தவனை முந்திச் செல், என்று தான் மக்களும் மாறி வருகிறார்கள்...


என்னுடைய அனுபவத்தில் - பள்ளியில் படித்ததை விட கல்லூரியில் எவ்வளவோ பரவாயில்லை.. ப்ராக்டிகல்லாகத் தான் இருந்தது.. இருந்தாலும், கல்லூரியை விட்டு வெளி வரும் போது, நிகழ் உலகம் நிறையவே வித்தியாசமாக இருந்தது.. ப்ரெஷர் கொடுத்து கொடுத்து என் பெர்ஃபார்மன்ஸே குறைஞ்சு போச்சு என்று ராஜூ சொல்லும் போது அவரது நிலை நன்றாகவே புரிகிறது..


நான் ரொம்ப நேரம் சிரித்த காட்சி - இண்டக்‌ஷன் மோட்டரை எப்படி ஸ்டார்ட் செய்வது என்று வைரஸ் கேட்க, அதுக்கு ராஜூ காட்டும் ப்ராக்டிகல் விளக்கம்.. அப்புறம், கரீனாவின் திருமணத்தை நிறுத்தி அவரை அழைத்து வரும் போது - ” உன் கல்யாணத்தை நிறுத்திட்டோம்.. ஆனா, ஒரு சின்னப் பிரச்சனை.. அவனுக்கு கல்யாணம் ஆயிடுச்சான்னு இன்னும் தெரியலியே..” ஹா ஹா.... அப்புறம் தேர்வு முடிவுகளைப் பார்த்து விட்டு இருவரும் சோகமாக அடிக்கும் டயலாக் - “நம்ம நண்பன் நம்மை விட குறைவா மார்க் வாங்குனா வருத்தமா இருக்கு.. நம்மை விட அதிகமா வாங்கினா ரொம்பவே வருத்தமா இருக்கு..”

குறைகளும் உண்டு... சில இடங்களில் நம்மை நெகிழ வைக்க முயற்சித்திருப்பதில் சினிமாத்தனம் தெரிகிறது.. பையன்கள் மூவரும் அடிக்கடி அழுகிறார்கள்.. மத்த கேரக்டர்ஸும்.. முன்னா பாய் எம்பிபிஸ் சம்பவங்களும் படத்தில் உண்டு.. ஜோக் சொல்லிச் சொல்லி நண்பருக்கு நினைவு வர வைத்தல்.. அப்புறம்.. அந்த ஆல் இஸ் வெல் சொல்லி பிறந்ததிலிருந்து மூச்சின்றி கிடக்கும் குழந்தையை அழ வைத்தல்.. (பசங்க படத்திலும் இது போன்றதொரு சீன் உண்டு).. கொஞ்சம் பூச் சுற்றல் தான்..

சதுர் ராமலிங்கம்.. இவர் தான் படத்தின் செந்தில்.. போட்டு உதை உதை என உதைக்கிறார்கள் இவரை... நகைச்சுவைக்காகத் தான் என்றாலும் இந்தப் பெயர் தான் நமக்கும் கொஞ்சம் உதைக்கிறது.. உகாண்டாவில் பிறந்து பாண்டிச்சேரியில் படித்ததால் ஹிந்தி தெரியவில்லை என்கிறார்.. மை ஹன்ஸ் ரஹா ஹூன் என்று ஹ வை அழுத்தமாக உச்சரித்து ஹிந்தி பேசுகிறார்.. தலைகீழாக மனப்பாடம் பண்ணுகிறார்.. தென்னாட்டவர்களை கிண்டல் அடித்திருக்கிறார்களோ என்று ஒரு எண்ணம் வருகிறது.. அடிக்கடி இவர்கள் ஹிந்தித் திரைப்படங்களில் கிண்டலடிக்கப் படுகின்றார்கள் என்பது போன்று தோன்றுகிறது.. ஓம் சாந்தி ஓம், கோல்மால் ரிடர்ன்ஸ், அப்புறம் இது..  ஒரு வாசகம் நினைவுக்கு வருகிறது.. “ஒருவருக்கு உன்னுடைய மொழியை சரியாக பேசத் தெரியவில்லை என்பதற்காக சிரிக்காதே.. அப்படியென்றால், அவருக்கு உன்னை விட இன்னும் ஒரு மொழி தெரிந்திருக்கிறது என்று அர்த்தம்”.... இதையும் இந்த இடியட்ஸ் புரிந்து கொண்டால் நல்லது..