ஜூன் 12 2007
சென்னை
நீ அமெரிக்கா கிளம்பிச் சென்று பதினைந்து நாட்கள் ஆகியும் இன்னும் என்னுடன் தொலைபேசாமல் இருப்பது என்னை மிகவும் ஆச்சர்யப்படுத்துகிறது. என்னைப் பற்றி துளியளவும் அக்கறை இல்லாத ஒருவருக்காக நான் எனது பொழுதை வீணடிக்கிறேனோ என்று கூட நினைக்கிறேன். நான் இங்கே ஒரு நாளைக்கு பன்னிரண்டு மணி நேரம் வேலை செய்து ஆறுமணி நேரம் தூங்கி எழுந்து உழைத்துக் கொண்டிருக்கிறேன். இருந்தும் தினமும் வந்து செக் செய்கிறேன் - உன்னிடம் இருந்து மெயில் வந்திருக்கிறதா என்று. ஒன்றையும் காணோம்..
நீ உனது பெற்றோரை அழைத்துப் பேசாமல் இருந்திருந்தால், உனக்கு தொலைபேசுவதில் ஏதோ பிரச்சனை என்று தான் நினைத்திருப்பேன். என்னைத் தவறாக நினைத்து விடாதே - அவர்களிடம் பேசியதற்காக உன்னைக் குறை சொல்லவில்லை. அவர்களிடம் பேசிவிட்டு ஏன் என்னிடம் பேசாமல் போனாய் என்று தான் கேள்வி.
ஒரு ஐந்து நிமிடமும் சிறிதளவு பணமும் கூடவா உன்னால் செலவழிக்க முடியாது, என்னிடம் தொலை பேசுவதற்கு? இந்தப் பதினைந்து நாட்களாக நீ என்னைப் பற்றி நினைத்துக் கூட பாத்திருக்க மாட்டாய் என்று தான் நினைக்கிறேன். உடன் வேலை செய்யும் சங்கர் கூட, இன்று, ஏன் சோர்வாக இருக்கிறாய், உடம்பு சரியில்லையா என்று கேட்டான். அவனிடம் எப்படிச் சொல்வேன், உண்மையில் எனது பிரச்சனை வேறு என்று.
உன்னுடைய இந்த பாராமுகம் என்னை மிகவும் வருத்துகிறது. எனது வேலையை பாதிக்கிறது. காதலனாக இருக்க வேண்டாம், ஒரு நண்பராகவாவது உன்னால் இருக்க முடியாதா?
கடுமையான வேலைப் பளுவுக்கிடையிலும் இவ்வளவு பெரிய மெயில் எழுதுகிறேன். இதற்கு ஒரு வரி பதில் கூட எழுத மாட்டாய் என்று தெரியும். கடந்த ஒரு வாரமாக அடிக்கடி அழுது கொண்டிருக்கிறேன் - குறிப்பிட்டுச் சொல்ல வேறெந்த காரணமும் இல்லாமல்.. வேலை காரணமாக மனச் சோர்வும் அழுத்தமும் அடைந்திருக்கிறேன், அடிக்கடி உணர்வுவயப் படுகிறேன்.. அதனால் தான் அழுகிறேனோ.. இந்த மாதத்துடன் இந்த வேலை முடிந்தவுடன் சரியாகிவிடுவேனோ? தெரியவில்லை..
இதைப் படித்ததும் கொஞ்சம் நேரம் எடுத்து யோசித்துப் பார்.. நீ அடுத்த முறை என்னிடம் பேசும் போது இது குறித்து அலசி முடிவெடுக்கலாம். இப்படித் தான் இனியும் உனது நடவடிக்கை இருக்குமென்றால் - இத்துடன் விட்டு விடுவோம்.. நீ இன்னொரு பெண்ணைக் காதலித்து அவளை மணந்து சந்தோஷமாக இருந்து கொள்.
பை
கோபமும் அழுகையும் ஒரு சேர்ந்து பொங்கி வர, கடிதத்துக்கு காதலனின் முகவரியிட்டு, ஜி மெயிலின் சென்ட் பட்டனைத் தட்டி விட்டு, எழுந்து சென்று படுக்கையில் விழுந்து, அழ ஆரம்பித்தாள் ராதா.
*****************************
ஆகஸ்ட் 20, 2010
கலிபோர்னியா
கணினியில் தனது மெயில்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த ராதா, சோம்பல் முறித்து எழுந்தாள். காப்பி தயாரித்து, கணவன் சிவாவுக்கு கொடுத்து விட்டு, குளிக்கச் சென்றாள். அவள் மெயிலிலிருந்து லாக் அவுட் செய்ய மறந்ததை சிவா கவனித்து இருந்தான். ராதா குளியலறைக் கதவைத் தாளிட்டு, ஷவரைத் திறந்து விட்டதும், சட்டென எழுந்து வந்தான். அவளது லேப்டாப்பைக் கையில் எடுத்து, மிக வேகமாக இயங்கினான்.
அவர்களுடைய மெயில்கள் தனித் தனியாகத் தான் இயங்கி வந்தன. ஒருவரது பாஸ்வர்ட் இன்னொருவருக்குத் தெரிய வேண்டாம் என்று முன்கூட்டியே முடிவு செய்திருந்தார்கள். என்ன தான் கணவன் மனைவி என்றாலும், ஒருவரது தனிப்பட்ட வட்டத்தை இன்னொருவர் மதித்து நடக்க வேண்டும் என்பது தான் இருவரது விருப்பமும். ஆனால் கடந்த சில நாட்களாக சிவாவுக்கு என்னவோ ஒரு குறுகுறுப்பு.. இருப்பு கொள்ளவில்லை. எப்படியாவது அவளது மெயிலை எட்டிப்பார்த்து விடுவது என்று கங்கணம் கட்டியிருந்தான்.
காலத்தில் பின்னோக்கிச் சென்று வேகமாகத் தேடியவன், தனக்குத் தேவையானது கிடைத்தவுடன், உடனே பார்வர்ட் செய்தான். பின், ஒன்றும் தெரியாதவன் போல தன்னிடத்தில் வந்து அமர்ந்து கொண்டான்.
ராதா தலையைத் துவட்டிக் கொண்டே வந்தவள், காப்பிக் கோப்பையைச் சூடு செய்து, கணினியை மடியில் எடுத்துக் கொண்டு, சோபாவில் அமர்ந்தாள். புதியதாக ஒரு மெயில் வந்திருப்பதைக் கண்டதும், படிப்பதற்காக கிளிக்கினாள்.
****************
மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் மெயில், அவளுக்கே பார்வர்ட் செய்யப்பட்டிருந்தது. கூடவே ஒரு வரிக் கேள்வியும்..
"இந்த இன்னொரு பொண்ணக் கல்யாணம் பண்ணிக்கிற ஆபர் இன்னும் எனக்கு வேலிட் ஆ இருக்கா?"
அடுத்த நொடி அங்கே "ஐயோ அம்மா.. அடிக்காத.. கிள்ளாத.." என்ற அலறல் கேட்டது.. யார் யாரை அடித்திருப்பார்கள் என்பதை படிப்பவர்கள் யூகத்துக்கே விட்டு விடுகிறேன்.. :)