18 March 2011

இன்னும் இருக்கா??


ஜூன் 12 2007
சென்னை

நீ அமெரிக்கா கிளம்பிச் சென்று பதினைந்து நாட்கள் ஆகியும் இன்னும் என்னுடன் தொலைபேசாமல் இருப்பது என்னை மிகவும் ஆச்சர்யப்படுத்துகிறது. என்னைப் பற்றி துளியளவும் அக்கறை இல்லாத ஒருவருக்காக நான் எனது பொழுதை வீணடிக்கிறேனோ என்று கூட நினைக்கிறேன். நான் இங்கே ஒரு நாளைக்கு பன்னிரண்டு மணி நேரம் வேலை செய்து ஆறுமணி நேரம் தூங்கி எழுந்து உழைத்துக் கொண்டிருக்கிறேன். இருந்தும் தினமும் வந்து செக் செய்கிறேன் - உன்னிடம் இருந்து மெயில் வந்திருக்கிறதா என்று. ஒன்றையும் காணோம்..

நீ உனது பெற்றோரை அழைத்துப் பேசாமல் இருந்திருந்தால், உனக்கு தொலைபேசுவதில் ஏதோ பிரச்சனை என்று தான் நினைத்திருப்பேன். என்னைத் தவறாக நினைத்து விடாதே - அவர்களிடம் பேசியதற்காக உன்னைக் குறை சொல்லவில்லை. அவர்களிடம் பேசிவிட்டு ஏன் என்னிடம் பேசாமல் போனாய் என்று தான் கேள்வி. 

ஒரு ஐந்து நிமிடமும் சிறிதளவு பணமும் கூடவா உன்னால் செலவழிக்க முடியாது, என்னிடம் தொலை பேசுவதற்கு? இந்தப் பதினைந்து நாட்களாக நீ என்னைப் பற்றி நினைத்துக் கூட பாத்திருக்க மாட்டாய் என்று தான் நினைக்கிறேன். உடன் வேலை செய்யும் சங்கர் கூட, இன்று, ஏன் சோர்வாக இருக்கிறாய், உடம்பு சரியில்லையா என்று கேட்டான். அவனிடம் எப்படிச் சொல்வேன், உண்மையில் எனது பிரச்சனை வேறு என்று. 

உன்னுடைய இந்த பாராமுகம் என்னை மிகவும் வருத்துகிறது. எனது வேலையை பாதிக்கிறது. காதலனாக இருக்க வேண்டாம், ஒரு நண்பராகவாவது உன்னால் இருக்க முடியாதா? 

கடுமையான வேலைப் பளுவுக்கிடையிலும் இவ்வளவு பெரிய மெயில் எழுதுகிறேன். இதற்கு ஒரு வரி பதில் கூட எழுத மாட்டாய் என்று தெரியும். கடந்த ஒரு வாரமாக அடிக்கடி அழுது கொண்டிருக்கிறேன் - குறிப்பிட்டுச் சொல்ல வேறெந்த காரணமும் இல்லாமல்.. வேலை காரணமாக மனச் சோர்வும் அழுத்தமும் அடைந்திருக்கிறேன், அடிக்கடி உணர்வுவயப் படுகிறேன்.. அதனால் தான் அழுகிறேனோ.. இந்த மாதத்துடன் இந்த வேலை முடிந்தவுடன் சரியாகிவிடுவேனோ? தெரியவில்லை.. 

இதைப் படித்ததும் கொஞ்சம் நேரம் எடுத்து யோசித்துப் பார்.. நீ அடுத்த முறை என்னிடம் பேசும் போது இது குறித்து அலசி முடிவெடுக்கலாம். இப்படித் தான் இனியும் உனது நடவடிக்கை இருக்குமென்றால் - இத்துடன் விட்டு விடுவோம்.. நீ இன்னொரு பெண்ணைக் காதலித்து அவளை மணந்து சந்தோஷமாக இருந்து கொள். 

பை

கோபமும் அழுகையும் ஒரு சேர்ந்து பொங்கி வர, கடிதத்துக்கு காதலனின் முகவரியிட்டு, ஜி மெயிலின் சென்ட் பட்டனைத் தட்டி விட்டு, எழுந்து சென்று படுக்கையில் விழுந்து, அழ ஆரம்பித்தாள் ராதா. 

*****************************

ஆகஸ்ட் 20, 2010
கலிபோர்னியா 

கணினியில் தனது மெயில்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த ராதா, சோம்பல் முறித்து எழுந்தாள். காப்பி தயாரித்து, கணவன் சிவாவுக்கு கொடுத்து விட்டு, குளிக்கச் சென்றாள்.  அவள் மெயிலிலிருந்து லாக் அவுட் செய்ய மறந்ததை சிவா கவனித்து இருந்தான். ராதா குளியலறைக் கதவைத் தாளிட்டு, ஷவரைத் திறந்து விட்டதும், சட்டென எழுந்து வந்தான். அவளது லேப்டாப்பைக் கையில் எடுத்து, மிக வேகமாக இயங்கினான். 

அவர்களுடைய மெயில்கள் தனித் தனியாகத் தான் இயங்கி வந்தன. ஒருவரது பாஸ்வர்ட் இன்னொருவருக்குத் தெரிய வேண்டாம் என்று முன்கூட்டியே முடிவு செய்திருந்தார்கள். என்ன தான் கணவன் மனைவி என்றாலும், ஒருவரது தனிப்பட்ட வட்டத்தை இன்னொருவர் மதித்து நடக்க வேண்டும் என்பது தான் இருவரது விருப்பமும். ஆனால் கடந்த சில நாட்களாக சிவாவுக்கு என்னவோ ஒரு குறுகுறுப்பு..  இருப்பு கொள்ளவில்லை. எப்படியாவது அவளது மெயிலை எட்டிப்பார்த்து விடுவது என்று கங்கணம் கட்டியிருந்தான். 

காலத்தில் பின்னோக்கிச் சென்று வேகமாகத் தேடியவன், தனக்குத் தேவையானது கிடைத்தவுடன், உடனே பார்வர்ட் செய்தான். பின், ஒன்றும் தெரியாதவன் போல தன்னிடத்தில் வந்து அமர்ந்து கொண்டான். 

ராதா தலையைத் துவட்டிக் கொண்டே வந்தவள், காப்பிக் கோப்பையைச் சூடு செய்து, கணினியை மடியில் எடுத்துக் கொண்டு, சோபாவில் அமர்ந்தாள்.  புதியதாக ஒரு மெயில் வந்திருப்பதைக் கண்டதும், படிப்பதற்காக கிளிக்கினாள். 

****************

மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் மெயில், அவளுக்கே பார்வர்ட் செய்யப்பட்டிருந்தது. கூடவே ஒரு வரிக் கேள்வியும்..

"இந்த இன்னொரு பொண்ணக் கல்யாணம் பண்ணிக்கிற ஆபர் இன்னும் எனக்கு வேலிட் ஆ இருக்கா?"

அடுத்த நொடி அங்கே "ஐயோ அம்மா.. அடிக்காத.. கிள்ளாத.." என்ற அலறல் கேட்டது.. யார் யாரை அடித்திருப்பார்கள் என்பதை படிப்பவர்கள் யூகத்துக்கே விட்டு விடுகிறேன்.. :)

19 comments:

  1. லாஜிக் சரிகட்டல் - சிவாவுக்கு பழைய மெயில்களை உடனுக்குடன் அழிக்கும் பழக்கம்.. அதான் அதை ராதாவோட மெயில்ல இருந்து தேடியிருக்கார்..

    ReplyDelete
  2. ஹலோ இதெல்லாம் அநியாயம் ..பதிவு போட்டுட்டு கீழேயே கமெண்டும் போடறது ...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete
  3. //லாஜிக் சரிகட்டல் - சிவாவுக்கு பழைய மெயில்களை உடனுக்குடன் அழிக்கும் பழக்கம்.. அதான் அதை ராதாவோட மெயில்ல இருந்து தேடியிருக்கார்..//


    //Labels: காதல், சிறுகதை, ஹி ஹி //

    எங்கேயோ இடிக்குதே லாஜிக் :-)))))))))))))))

    ReplyDelete
  4. /சிவாவுக்கு பழைய மெயில்களை உடனுக்குடன் அழிக்கும் பழக்கம்.. அதான் அதை ராதாவோட மெயில்ல இருந்து தேடியிருக்கார்.. / இன்னும் லாஜிக் இடிக்குதே!?! எனக்குத்தெரிந்து எந்த சிவாவும் பொறுப்பா மெய்ல்களை(அதும் மனைவியான காதலியோட மெய்லை) டெலிட் பண்ண மாட்டாங்க! :) ;)

    நல்ல கதை சந்தனா!

    ReplyDelete
  5. ///எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...
    லாஜிக் சரிகட்டல் - சிவாவுக்கு பழைய மெயில்களை உடனுக்குடன் அழிக்கும் பழக்கம்.. அதான் அதை ராதாவோட மெயில்ல இருந்து தேடியிருக்கார்..
    //

    ஆஹா... கூட்டமா வந்து கும்மி எடுக்கப்போயினமே என, குப்புறக்கிடந்து கிட்னியை யூஸ் பண்ணி, ஓடிவந்து பின்னூட்டம்???? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..:)) நான் வடைக்குச் சொன்னேன்.

    என்னவோ எழுதப்போறீங்க என்று பார்க்க சட்டென திருமணமாகிட்டுது... தி.மு எழுதியதை உணர்வுபூர்வமாக ரசித்தேன்.

    ReplyDelete
  6. Wow!! What a suspense-filled thrilling story!!

    (he.. he.. just kidding)

    ReplyDelete
  7. :-))

    super!

    //ஐயோ அம்மா.. அடிக்காத.. கிள்ளாத..//

    வடிவேலூஊ

    ReplyDelete
  8. @ஜெய்லானி


    ஜெய்யி... எழுதிட்டு மறுபடியும் படிச்சுப் பார்த்தேன்.. இப்படி ஒரு ஆங்கிள்ள யாரும் யோசிச்சு கேள்வி கேட்டுரக் கூடாதேன்னு பின்னூட்டத்துல போட்டுட்டேன்..

    இதிலென்ன இடிக்குது? இது நகைச்சுவையான காதல் சிறுகதை.. வேறென்ன லேபில் போடறதுன்னு தெரியல..

    ReplyDelete
  9. சில பொறுப்பற்ற சிவாக்கள் இருக்கலாம் மகி.. பொறுப்பா, அதுவும் அழிக்கக் கூடாத மெயிலை அழித்துக் கொண்டு இருப்பாங்க.. :) இல்லாட்டினா எப்படி சஸ்பென்ஸ் கொண்டு வர்றது?

    நான் சொல்லாம இருந்திருந்தா யாருக்கும் இந்தக் கேள்வியே தோனியிருக்காதோ? :))

    ReplyDelete
  10. கிட்னி திடீர்னு இயங்க ஆரம்பிச்சுட்டது அதீஸ்.. எப்படி நிறுத்தறதுன்னே தெரியல... அதான் :)

    ரெண்டு பேரும் அதுக்கப்புறம் சண்டையெல்லாம் போட்டு கொஞ்சம் நாள் பிரியற மாதிரி காட்டியிருந்தா இன்னும் சுவாரசியமாக இருந்திருக்குமோ? ம்ம்..

    ReplyDelete
  11. //Wow!! What a suspense-filled thrilling story!!//

    நன்றி ஹூசைனம்மா.. ஹி ஹி.. இதுக்கு கீழ நான் படிக்கவேயில்ல..

    ReplyDelete
  12. நன்றி வசந்த்.. வடிவேலு கத்தற மாதிரியா இருக்கு :))

    ReplyDelete
  13. செம கியூட் lov's ஸ்டோரி....:))))

    (சொந்த அனுபவமா? அடிக்கடி என் ப்ளாக்'ல இந்த கேள்வி வரும்... யார்கிட்டயும் கேக்கற சான்ஸ் கிடைக்கல...அதான் இப்ப கேக்கறேன்...ஹா ஹா...ஜஸ்ட் கிட்டிங்...:))

    ReplyDelete
  14. யார் அந்த ராதா? ஹி ஹி :))

    ReplyDelete
  15. நன்றி தங்ஸ்..

    //சொந்த அனுபவமா? //

    இருந்தா நல்லா தான் இருக்கும்.. அவ்வவ்வ்வ்..

    ReplyDelete
  16. நன்றி கவி.. ராதா கற்பனைக் கதாப்பாத்திரம் தான்..

    ReplyDelete

பழைய வரிய மாத்தச் சொல்லீட்டாங்க.. இப்ப புதுசு “என்ன சொல்லனும்னாலும் தெகிரியமா சொல்லிட்டுப் போங்க” :)