04 April 2011

கிராமத்து ஓவியங்கள்..

ஆனந்தவிகடனின் கவிதைப்பக்கத்தில் இளையராஜா அவர்களின் ஓவியங்களைப் பார்த்திருக்கிறேன்.. பார்த்து விட்டு தாண்டிச் சென்றுவிடுவது உண்டு.. கொஞ்சம் நாள் முன்பு கதிர் அவர்களின் பக்கத்தில் இதைக் காண நேர்ந்தது.. புகைப்படமா இல்லை ஓவியமா என்று குழம்பும் அளவுக்கு நேர்த்தியாக இருந்தது.. 



இதற்கிடையில் அவரது கேலரியைப் பார்க்கும் வாய்ப்பு, பிலாசபி பிரபாகரன் 
அவர்களது பக்கத்தில் இருந்து கிடைத்தது.. எனக்குப் பிடித்தவை சில, அதிலிருந்து.. 

மேலே சொன்ன மாதிரி, புகைப்படமா இல்லை ஓவியமா என்று குழப்பும் இந்தப் படைப்பும் ஒரு உயிரோவியம்... பொண்ணு கருப்பா இருந்தாலும் களையா இருக்கு ம்பாங்களே.. அது இது தானோ?


அவரது ஓவியங்களில் இருக்கும் நேர்த்தியும் அந்த கிராமத்துப் பின்னணியும் ரொம்பவே ஈர்த்தன.. உதாரணத்துக்கு இதைப் பாருங்க.. இதிலே இந்தப் பெண் ஒரு விறகடுப்புல சமையல் செய்து கொண்டு இருக்கா.. இந்தத் தலைமுறைக்கு முன்னாடி நம்ம எல்லோர் வீட்டுலயும் விறகடுப்பு தான் சமையலுக்கு.. நம்ம தலைமுறைல கேஸ் வந்தாச்சு.. எங்க பாட்டி (அப்பாவோட அம்மா) இன்னும் இதிலயும் மற்றும் மண்ணெண்ணெய் ஸ்டவ் அடுப்புலயும் தான் சமைக்கறாங்க.. அடித்தட்டு மக்கள் வீட்டுல இந்த அடுப்பு தான் இன்னிக்கும் சோறு பொங்க வைக்குது.. 

அந்தப் பாத்திரத்தைப் பாருங்களேன்.. ஒன்னு சைடுல லேசா ஒடுங்கி இருக்குது.. இப்படியான அலுமினியப் பாத்திரங்கள் தான் பெரும்பாலும் சமையலுக்கு... வாங்கறப்ப வெள்ளை வெளேர்ன்னு இருக்கறது, நாளடைவுல கீழாப்ல தீ படும் பாகம் மட்டும் கருப்பாகிடும்.. அந்தப் பொண்ணு கையில ஒரு ஊதுகுழலும், மூச்சுத் திணற வைக்கும் புகையும், தணலும் சாம்பலும்,  கொழுந்துவிட்டு எரியும் நெருப்பும் மட்டுந்தான் மிஸ்ஸிங்..


அடுத்தடுத்த படங்கள பார்க்க ஆரம்பிச்சா இதுல மிஸ்ஸானது எல்லாமே இருக்கு :) சுவத்துல கரித்திட்டு படிஞ்சிருக்கு பாருங்க.. 


இதுல இந்தப் பொண்ணு என்னமோ நெரிச்சுகிட்டு இருக்கா..  பொது வழக்குல   உரல்ன்னு சொல்லுவது இதையத் தானே? ஊர்ல இதுக்கு வேற பேரு.. பக்கத்துல கருப்பா இருக்கறது அளக்குற படி.. அது போக சாணி முறம்.. பித்தளை அண்டா.. மட்டை உரிக்கப்படாத முழுத் தேங்கா.. கூடவே மேயும் கோழி.. 

அந்தச் சுவற்றைப் பாருங்க.. அதுல திட்டு திட்டா விட்டுப் போன பெய்ன்ட்.. என்னைக்கோ ஒரு விசேஷத்தப்பயோ இல்ல நல்ல மகசூல் தந்த ஒரு சாகுபடி அப்பவோ பூசப்பட்ட சுவராக இருக்கணும்.. அடுத்து இந்தப் பொண்ணு கல்யாணத்தப்ப தான் அதுக்கு மேல் பூச்சு பூசி கலரேத்துவாங்க.. 


பூ கட்டும் இந்தப் பொண்ணு.. அதோட பாவாடையைப் பாருங்க.. சின்னப் புள்ளைகளுக்கு பாவாட தைக்கும் போது மடிப்பு வச்சுத் தச்சுப்பாங்க.. வளர வளர பிரிச்சு விட்டுக்கலாம்ன்னு .. அதையக் கூட விட்டுவைக்கல இந்த மனுஷன்.. ஒருவேளை புகைப்படமா எடுத்து அதுல முகத்த மட்டும் வரைஞ்சிருப்பாரோ??


ஒரு குறை என்னன்னா இதில எல்லாப் பெண்களுமே பட்டுடை உடுத்தி இருக்காங்க.. அது கொஞ்சம் உறுத்துது.. வீட்டுல இருக்கிற மாதிரி சாதாரண உடையில இருந்திருந்தா இன்னும் பொருத்தமா இருந்திருக்கும்..

கேலரிக்கான வழி.. 

*********************************************

எனக்கு திடீர்ன்னு பூ படத்துல வர்ற சூ சூ மாரி கேட்கணும் போல இருந்ததுன்னு யூ ட்யூப் ல கேட்டுகிட்டு இருந்தேன்.. அப்போ அதுக்கு கீழ இந்தப் பாட்டும் இருந்தது.. கேள்விப்பட்ட மாதிரி இருக்கேன்னு நினைச்சுப் போட்டேன்.. ரொம்ப பிடிச்சுப் போச்சு.. அருமையான கிராமிய வாடை.. 

இந்தப் புள்ளைகளப் பாருங்க.. என்னா ஆட்டம் என்னா ஆட்டம்.. கேரளால எதோ கல்லூரி போல... ஒரு கட்டத்துல இதுகளோட ஆட்டம் தாங்க முடியாம பாடறவங்க கீழ குதிச்சு வந்துருவாங்க :) நாம காலேசு படிக்கும் போது இந்தப் பாட்டு வராம போயிடுச்சேன்னு கொஞ்சமா ஏங்க வச்சிடுச்சு.. 

இதோட ஒரிஜினல் பாட்டை யூ ட்யூப் ல ரொம்ப நேரம் தேடி கிடைக்கவே இல்ல.. சரின்னு நம்ம தமிழ்ப்பதிவுலகத்துல தேடினப்போ தான் தெரிஞ்சது, இந்தப் படம் வெளி வரவே இல்லைன்னு.. பாதி தயாரிக்கப்பட்டு முடியாம கிடப்புல போட்டாச்சு.. படம் பேரு "இரண்டு பேர்".. ராம்கி, குஷ்பூ, சங்கவி நடிச்சதாம்.. இசை, சுனில் வர்மா (?சர்மா) ன்னு புது ஆளு.. பாடியது ஆபாவாணன் (இணைந்த கைகள், ஊமை விழிகள் படமெல்லாம் நினைவுல இருக்கா?, அதோட தயாரிப்பாளராம்.. இந்தப் படத்துக்கும் அவரே தயாரிப்பாளர்.. ) மற்றும் இசையமைப்பாளர்ன்னு போட்டிருந்தது..  மேலும், ஊமைவிழிகள் இசையமைப்பாளர்கள் மனோஜ்-க்யான் ல க்யானோட பையன் தான் இந்த சுனில் வர்மா (?சர்மா) ன்னு ஒரு உபரித் தகவல் வேற.. 



இது குட்டீஸ் வெர்சன்..  மடகாஸ்கர் எஸ்கேப் டூ ஆப்ரிகா படத்துல வர்ற பாட்டைப் போட்டு ரீ மிக்ஸ் பண்ணிவிட்டுட்டாங்க.. 

26 comments:

  1. இந்த ஓவியங்களை நானும் விகடன்ல பாத்து பிரம்மிச்சிருக்கேன்..அவரோட கேலரி லிங்குக்கு நன்றி! மத்த வீடியோவெல்லாம் பாக்கவிடாம லேப்டாப் மக்கர் பண்ணுது.சரியானப்புறம் பார்க்கறேன்.

    ReplyDelete
  2. ஆனந்தவிகடன்ல பார்க்கும் போது பெரியதாக ஈர்க்கப்படல மகி.. ஆனா முதலில் இருப்பதைப் பார்த்த பின்னே தான் இன்னும் பார்க்கனும்ன்னு தோனுச்சு.. உங்க லேப்டாப்பும் மக்கர் பண்ணுதா? :) வைரஸ் எப்பூடிஎல்லாம் பரவுது பாருங்க.. :)

    ReplyDelete
  3. புகைப்படமா? ஓவியமா?
    ஓவியம் என்றால் 'ஓவியம் பேசுகிறது'

    ReplyDelete
  4. ரத்னவேல் அங்கிள்.. நன்றிங்க.. எல்லாம் ஓவியங்கள் தான்.. ஆயில் பெயிண்டிங்.. அவ்வளவு தத்ரூபமாக இருக்கு..

    ReplyDelete
  5. அவரது தத்ரூபமான ஓவியங்களுக்கு, நானும் பெரிய அபிமானி. Mind blowing creations..... awesome!

    ReplyDelete
  6. ஆமாம் சித்ரா.. இன்னும் கொஞ்சம் வெளிப் பகுதி கிராமத்தையும் காட்டியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.. வயல்.. குடிசைகள்.. இப்படி..

    ReplyDelete
  7. எனக்கு ஓவியங்கள் மீது ஈடுபாடு அதிகம். இவை எல்லாமே புகைப்படங்கள் போல அவ்வளவு தத்ரூபமா இருக்கு. பட்டு பாவாடை கட்டியிருந்தாலும் பெரிய குறை போல தெரியவில்லை. ஒவ்வொரு பெண்ணின் முகமும் மிகவும் அழகோ அழகு.

    ReplyDelete
  8. அடுப்பூதும் காட்சிகளைக் கண்டாலே, எனக்கு காலமாகிச் சென்ற என் சின்னம்மா நினைவுதாங்க வரும்... ப்ச்...

    ReplyDelete
  9. ஓவியங்கள் அழகாய் இருக்கு ..சில இது போட்டோ காப்பியா இருக்குமான்னு சொல்ற மாதிரி இருக்கு :-)

    அந்த பாட்டு அனிமேஷன் வீடியோதான் இருக்கு .ஒரிஜினல் நான் முன்பே தேடினேன் கிடைக்க வில்லை . என் குட்டீஸுக்கு மொபைலில் மெமரி கார்ட் தேய்ந்து போகும் அளவிறகு பிடிக்கும் . பாட்டுக்கேத்த வீடியோவா இல்லை வீடியோவுக்காக பாட்டான்னு சொல்ல முடியாத அளவுக்கு குழம்பி இருக்கிறேன் பிரமாதம் :-))

    ReplyDelete
  10. முன்பு ஒன்றிரண்டு ஓவியங்கள் பார்த்து இருக்கிறேன். ஒன்றாகப் பார்க்கக் கிடைத்தமை மகிழ்ச்சியாக இருக்கிறது. நன்றி சந்தூஸ்.

    மனதுக்கு மகிழச்சி கொடுத்த இடுகை. ;)

    ReplyDelete
  11. சூப்பரோ சூப்பர், இதெல்லாம் வரைந்த ஓவியங்களா... நம்பவே முடியவில்லை, அந்தக் கண், பின்னல்... நிழல்.... போட்டோ எடுத்தாலும் இவ்வளவு துலக்கமாக வராது.... எனக்கேனோ தெரியாது வரைவதில் இதுவரை ஆர்வம் வந்ததில்லை, ஆனால் பாஅர்க்கப் பிடிக்கும்...

    இங்கு ரீவியில் பெயிண்டிங் போகும் பார்த்துக்கொண்டே இருப்பேன் சூப்பராக வரைவார்... குறுகிய நேரத்தினுள்.

    ReplyDelete
  12. வரான் வரான் பூச்சாண்டி சூப்பராக இருக்கு.... கிட்டத்தட்ட வாழை மீனுக்கும் விலங்கு மீனுக்கும் போல கேட்க நல்லா இருக்கு...

    இந்தக்காலத்துப் பூச்சாண்டி எல்லாம் ரெயினிலயா வாறாங்க?:)))) பி.....னில எல்லோ?:)))) பூஸ் எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.

    ReplyDelete
  13. //பூ கட்டும் இந்தப் பொண்ணு.. அதோட பாவாடையைப் பாருங்க.. சின்னப் புள்ளைகளுக்கு பாவாட தைக்கும் போது மடிப்பு வச்சுத் தச்சுப்பாங்க.. வளர வளர பிரிச்சு விட்டுக்கலாம்ன்னு .. அதையக் கூட விட்டுவைக்கல இந்த மனுஷன்.. ஒருவேளை புகைப்படமா எடுத்து அதுல முகத்த மட்டும் வரைஞ்சிருப்பாரோ??//

    சந்தனா நான் சொல்றது மிகையா தெரிஞ்சாலும் பரவாயில்ல அந்த ஓவியங்களை விட அதைய உன்னிப்பா கவனித்து பாத்திரங்கள், உரல் , மடிப்பு வைத்த பாவாடை , சுவர்ன்னு விவரித்த விதம் மிகப்பிடித்தது...! இதுபோல நீங்க நிறைய கவனித்திருக்க வேண்டும் அல்லது வாழ்ந்திருக்கவேண்டும் ..!

    ReplyDelete
  14. வான்ஸ்.. நீங்களும் ஒரு நாள் பெரிய பெரிய பெயிண்டிங் எல்லாம் வரையனும்.. முறையாக கத்துக்க முடியுமான்னு தேடித் பாருங்க.. ஆமாம் வான்ஸ்.. எல்லாம் நம்ம தமிழ்ப் பொண்ணுங்க முகம் மாதிரி இருக்கு..

    ReplyDelete
  15. நன்றிண்ணே.. இல்லாதப்பத் தான் நினைவுகள் இன்னமும் அழுத்தும்..

    ReplyDelete
  16. ஆமாம் ஜெய்.. அதுலயும் முதல் இரண்டைப் பார்த்து குழம்பிப் போயிட்டேன்.. ஒருவேளை போட்டோ புடிச்சு அதைய மாதிரியா வச்சு வரைந்திருப்பாரோ? இவர் இத்தனையும் வரைஞ்சு முடிக்கற வரைக்கும் அந்தப் பொண்ணுங்களால போஸ் கொடுத்திட்டு இருந்திருக்க முடியாது..

    அந்தப் பாட்டுக்கு ஒரிஜினல் வீடியோவே இல்ல போல.. பாட்ட மட்டும் கம்போஸ் பண்ணிட்டு எடுக்காம விட்டுட்டாங்களோ என்னமோ.. குட்டீஸ் க்கு ரொம்ப பிடிக்கும்ன்னு தான் தோணுது..

    ReplyDelete
  17. நன்றி இமா..

    //மனதுக்கு மகிழச்சி கொடுத்த இடுகை. ;)//

    அப்போ அழ வச்ச இடுகை ஏதாச்சும் இருந்தா சொல்லிப் போடுங்க.. இலவச இணைப்பா ஒரு டிஷூ படம் போட்டுவிட்டுடறேன்..

    ReplyDelete
  18. ஓம் அதீஸ்.. வரைந்ததுன்னு தான்னு அவரோட பக்கத்துல சொல்றாங்க..

    வரைவது ஒரு காலத்தில பிடிச்சிருந்தது அதிரா.. இந்தப் வாரப் பத்திரிக்கையில எல்லாம் கதைக்கு படம் போட்டிருப்பாங்க.. அதைப் பார்த்து செய்ததுண்டு.. ஆனா என் கையால வரைந்து முடித்த படத்தப் பாத்ததும் பிடிக்காம போயிடுச்சு :)

    எனக்கும் அந்தப் பாட்டு ரொம்ப பிடிச்சுப் போச்சு அதிரா.. அதிலயும் அந்த மாணவர்களோட உற்சாகத்தைப் பார்ப்பதற்குன்னே கேட்பது உண்டு :)

    சின்னச் சின்ன ஊருக்கெல்லாம் ரெயினில வருவாங்க.. பிரித்தானியபுரத்துக்கு மட்டும் பி...ன் ல வருவாங்களாம் :)

    ReplyDelete
  19. நன்றி வசந்த்.. இப்படியெல்லாம் நேர்த்தியாக வந்திருக்கேன்னு நினைத்ததை எழுதினேன்.. முதல் படத்தைக் குறித்து, கதிர், அந்தப் பெண்ணோட சேலை மடிப்பு, அவர் சூடியிருக்கும் பூ எல்லாமே நல்லா வந்திருக்குன்னு எழுதியிருந்தார்.. அதற்கப்புறம் தான் நானும் கவனிக்க ஆரம்பிச்சேன்..

    பொதுவாக கதைக்குன்னு போடும் படங்கள் எல்லாம் மேலோட்டமான பேக் கிரவுண்டிலே வரையப்பட்ட படங்களாக இருக்கும்.. இது கிராமியப் பின்னணியில் கிராமத்துப் பெண்களை அடிப்படையாகக் கொண்டு வித்தியாசப்பட்டுத் தெரிஞ்சது.. அதிலும் காட்சியமைப்பில் இருக்கும் நேர்த்தி, அப்படியே புகைப்படத்தைக் காண்பது போலவே இருந்தது.. எனக்கென்னமோ புகைப்படத்தை முதலில் எடுத்து அதைப் பார்த்து வரைந்திருக்கலாம்ன்னு தான் தோணுது..

    ReplyDelete
  20. ;) இப்பதான் பார்க்கிறன்... ஒரு குத்து மிஸ்ஸிங். ;( அதையும் சேர்த்து வாசியுங்கோ எல்லாரும்.

    இமாவுக்கு ஒரு டிஷ்யூ ப்ளீஸ். ;((

    ReplyDelete
  21. தமிழச்சி மாதிரி மகிழச்சி ன்னு ஒரு சொல்லு இருக்கும் போலன்னு நினைச்சிட்டோம் இமா.. :)) ஒன்னு என்ன எவ்வளவு வேணுமோ எடுத்துக்கோங்க.. ஒரு டிஷூ பாக்சே தாறேன்.. :))

    ReplyDelete
  22. வாவ்.. ஓவியங்களா இது...?!!! ஃபோட்டோஸ்னே நினைத்தேன். சூப்பர்ப்! ஃபோட்டோ எடுத்து, பிறகு அதை வைத்து வரைந்தாதான் இவ்வளவும் விட்டுப்போகாம வரையமுடியும். நீங்க நினைத்த மாதிரிதான் எனக்கும் தோணுது.

    சரி சந்தனா.. ரொம்ப நாள் சந்தேகம் ஒண்ணு. நீங்க அறுசுவை தோழி சந்தனாவா? பலமுறை கேட்க முயற்சித்து வாய்ப்பு கிடைக்காம இப்போ கேட்கிறேன் :) சொல்லுங்களேன்.

    ReplyDelete
  23. வாங்க அஸ்மா.. அதே பிரமிப்பு தான் எல்லோருக்கும்..

    நான் அதே சந்தனா தான் :)

    ReplyDelete
  24. அ..அ...அதே சந்தனாவா..? இன்ப அதிர்ச்சியால்ல இருக்கு..? :‍-) "எல் போர்ட்.. பீ சீரியஸ்.." னு பார்த்த ஆரம்பத்தில் யாரோ ஒரு ஆண் பதிவர்னு நினைத்தேன் :) பிறகு பெண் பதிவர்னு புரிந்தாலும், ரொம்ப நாளா "எல் போர்ட்" உடைய ஒரிஜினல் பெயர் தெரியாமலே இருந்தேன் :-) அப்புறமா அங்கங்க பின்னூட்டங்களில் 'சந்தனா'ன்னு பெயரைப் பார்த்துட்டுதான் இது (அறுசுவை பட்டிமன்றத்துல)நம்ம எதிர்க்கட்சி ;)) சந்தனாவா இருக்குமோன்னு சந்தேகம் வந்துச்சு :)

    எப்படியோ.. நீங்க கண்டுக்காம போனாலும் நானாவது உங்களைத் தேடி கண்டுபிடிச்சுட்டேன். இனியும் எங்க பக்கம் வராமலே எஸ்கேப் ஆகிடமுடியுமா? :)))

    ReplyDelete
  25. நன்றி அஸ்மா.. வேறென்ன.. எதிர்க்கட்சி ஆள்ன்னு எனக்கு லேசா பயம்.. :) அதான் :) இனிமே வரேன்..

    ReplyDelete

பழைய வரிய மாத்தச் சொல்லீட்டாங்க.. இப்ப புதுசு “என்ன சொல்லனும்னாலும் தெகிரியமா சொல்லிட்டுப் போங்க” :)