26 February 2011

நடுநிசிப் பேய்கள்.. "விழிப்புணர்வு" விமர்சனம்..

இளகிய மனமுள்ளவர்கள் இதைப் படிக்க வேண்டாம்...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இதை எழுத வேண்டாம் என்று தான் நினைத்திருந்தேன்.. ஆனால் சிலர் இதற்கு வாங்கும் வக்காலத்தைப் பார்க்கும் போது, எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என்றே தோன்றுகிறது..

நேற்று இரவு, ஒன்பதிலிருந்து பதினொன்று வரை, நடுநிசி நாய்கள் என்ற உன்னத காவியத்தைக் காண நேர்ந்தது.. த்ரில்லர் என்று நினைத்துப் பார்க்க ஆரம்பித்தது, ஆனால் ஆரம்பத்திலேயே தெரிந்து விட்டது - இது வேட்டையாடு விளையாடு வகையறாவுக்கு அண்ணன் என.. சரி என்ன தான் நடக்கப் போகிறது பார்க்கலாம் என்று பார்த்து முடித்தோம்..

சிட்னி ஷெல்டன் "Tell me your dreams" நாவலை எழுதும் போது நினைத்தே பார்த்திருக்க மாட்டார், தனது நாவல் தமிழ் சினிமா இயக்குனர்களுக்கு இந்தளவுக்குப் பிடித்துப் போகுமென்று.. எதோ ஒரு தோழியின் அறையில் கிடைத்த இந்த நாவல், நாளொன்றை வெட்டியாகப் போக்க உதவியது.. கதையில்,  ஆரம்பத்தில் மூன்று பெண்கள் வருவார்கள்.. ஒருத்தி பயந்தாங்கொள்ளி யாகவும், ஒருத்தி காதலிப்பது போன்றும், இன்னொருத்தி - சரியாக நினைவில்லை, ஆனால் இவர் தான் அந்த ஆண்களை கொலை செய்பவர்.. இதிலே ரெண்டு பேருக்கு மற்றவரையும் தெரியும்.. பிறகு ஒரு புள்ளியில் இவர்கள் மூவருமே ஒரே பெண்ணின் வெவ்வேறு மனோநிலைகள் (alters) என்று காட்டி, கோர்ட்டில் அவளை மனநிலை பாதிக்கப்பட்டவள் (Dissociative Identity Disorder) என்று நிரூபிக்க நடக்கும் போராட்டங்களையும் சொல்லி, அதற்கு காரணம் சிறு வயதில் அந்தப் பெண்ணுக்கு அவளது தகப்பன் செய்த sexual abuse தான் என்று முடியும்.. இந்தக் கதையைப் படித்து அப்போது என்ன நினைத்தேன் என்று நினைவில்லை..

இந்தக் கதையை இப்படியே எடுக்க மனமில்லாமல் அல்லது தெகிரியமில்லாமல், ஷங்கர், தனது வழக்கமான தேசிய உணர்வை அடிப்படையாகக் கொண்டு, லஞ்சத்துக்கு எதிராக ஆக்ரோஷமான தண்டனைகளைத் தரும் படமாக எடுத்தார்.. விக்ரமின் நடிப்பு, ரெண்டக்க ரெண்டக்க பாட்டு என்று மசாலா நன்றாகவே இருந்தது.. படமும் வியாபார ரீதியாக நன்றாகவே செய்தது என்று நினைக்கிறேன்..

இப்போது மீண்டும்.. ஆனால் இதிலே அப்படியே தலைகீழாக, தகப்பனின் sexual abuse இல் ஆரம்பிப்பது, Dissociative Identity Disorder இல் முடிகிறது என்று கதை செல்கிறது.. இத்தோடு நிறுத்தி இருந்தால் சிட்னி ஷெல்டனை ஒரு தமிழ் சினிமா இயக்குனர் எப்படி மிஞ்சுவது? அதனால், இதிலே பெண்ணுக்கு பதிலாக ஆண், அவன் தொடர்ந்து செய்யும் பாலியல் வக்கிரங்கள்..

Incest, child sexual abuse, group sex, rape, murder, serial killing, sadism, மற்றும் இது போக, pyromania என்று பல வகையறாக்களை தனித் தனி சீட்டுகளில் எழுதி, ஒரு பாட்டிலில் போட்டு குலுக்கி, சீட்டுகள் வந்த வரிசையில் எல்லாவற்றையும் கோர்த்து கதையை உருவாக்கினார் போலும்.. இத்தனை விஷயங்களையும் அடுத்தடுத்து ஒரே படத்தில் காட்டுவது விழிப்புணர்வுக்காகவா? இல்லை, பார்ப்பவர்களை ஒவ்வொரு காட்சிக்கும் அதிர்ச்சியுடன் பதைபதைக்க வைத்து பரபரப்புக்கு வழி செய்து காசு பார்ப்பதற்கா??

விழிப்புணர்வாம் விழிப்புணர்வு.. வெங்காயம்.. child sexual abuse மற்றும் incest க்கு விழிப்புணர்வு வேண்டும் என்று நினைப்பவர்கள், precious என்று ஒரு ஆங்கிலப் படம் வந்தது.. உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் என்று நினைக்கிறேன்.. அதைப் பாருங்கள்.. அப்போ தெரியும் அந்த உயிரின் வலி.. நான் இன்னும் பார்க்கவில்லை, என் தோழி பார்த்துவிட்டு அழுதேன் என்று சொன்னதால் தெகிரியமில்லாமல் விட்டு வைத்திருக்கிறேன்.. மகாநதியில் காட்டியிருப்பார்கள், ஒரு பதின்ம வயதுக் குழந்தைக்கு ஏற்படும் அவலத்தை.. அதையெல்லாம் இப்படியா திட்டினார்கள்?

சரி, மனநோய்க்காவது விழிப்புணர்வு ஊட்டியிருக்கிறாரா? இப்படி ஒரு நோய் உள்ளவனுக்கு என்ன பாதிப்புகள் ஏற்படுகின்றன, அவனை மற்றவர்கள் எப்படி நடத்துகிறார்கள், அதற்கு என்ன காரணங்கள், சரி செய்வது எப்படி.. இதெல்லாம் சொன்னால் தான் விழிப்புணர்வு.. இந்தப் படத்தைப் பார்த்தவர்களுக்கு என்ன தோன்றும்? இந்த மாதிரி ஒரு மனநோய் பிடித்த நாய் இருந்தால் என்ன செத்தால் என்ன என்று தான் தோன்றும்.. Childhood sexual abuse இனால் பிற்காலத்தில் இப்படி மனநிலை பாதிக்கப்படலாம் என்பதைத் தவிர்த்து, Dissociative Identity Disorder குறித்த என்ன மாதிரியான சித்தரிப்பு இது?

இயக்குனரே இறுதியில் சொல்கிறார் - அப்படிச் செய்யப்பட்டவர்கள் எல்லோருக்கும் மனநிலை இந்தளவுக்கு பாதிக்கப்படாது,  இந்தமாதிரி மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் எல்லாரும் இப்படியான காரியங்களைச் செய்வதில்லை என்று.. பிறகு ஏன் இப்படி - மிக அரிதான ஒரு possibility ஐ படமாக எடுக்க வேண்டும்? தகப்பன் தான் சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் குடித்துவிட்டு வந்து பொண்டாட்டி பிள்ளைகளைப் போட்டு அடிப்பதும், அதுகளை பட்டினி போடுவதும், படிக்கவைக்காமல் வேலைக்கு அனுப்புவதும்.. ஒரு பெண் இயலாமையினாலும் புருஷன் மீது இருக்கும் கோபத்தினாலும் பிள்ளைகளைப் போட்டு அடிப்பதும் - இதெல்லாம் கூட child abuse தான்.. இதையெல்லாம் எடுத்தால் பரபரப்பு இருக்காதே..

இந்த மாதிரியான சம்பவங்கள் நடைபெறாமல் இல்லை.. இந்தியாவில் நொய்டா வில் நடந்த child sexual abuse மற்றும் serial killing எல்லோருக்கும் தெரியும்.. ஆஸ்திரியாவில் ஒன்றிரண்டு வருடங்களுக்கு முன் தெரிய வந்த 42 ஆண்டுகால incest மற்றும் sexual abuse குறித்து செய்தியில் படித்துவிட்டு உறைந்து போயிருக்கிறேன்.. இப்படியான சம்பவங்களைப் படமாக்கியிருந்தால் கூட பரவாயில்லை.. எந்த அடிப்படையில் இப்படி ஒரு தொடர் வக்கிரச் சித்தரிப்பை இதில் தந்திருக்கிறார்?

மேலும், இந்தப் படம் எடுக்கப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்ட சமூகத்தின் பின்புலம் என்ன? அதன் பாலியல் கட்டமைப்பு, நம்பிக்கை, இப்படியான அதிர்வுகளை எதிர்நோக்கும் திறன், படிப்பு மற்றும் பகுத்தறிவுத் திறன் என்ன? இதைப் பார்ப்பதால் அம்மக்களுக்கு என்ன தாக்கம் ஏற்படும் என்று யோசித்தாரா? பிள்ளைகள் வயதுக்கு வரும் வரை பெற்றோருடன் ஒரே அறையில் தூங்கி வளரும் வழக்கம் தான் பல குடும்பங்களில் இருக்கிறது.. இதெல்லாம் கூட பரவாயில்லை.. தத்துத் தாயை மகன் கற்பழிப்பது போன்ற காட்சிகள் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும்?

இயக்குனருக்கு சிலவற்றுக்காக நன்றி சொல்ல வேண்டும்.. படத்தில் காட்டியிருக்கும் அவலங்கள் ஒன்றுக்கொன்று தொடர்புள்ளன (for example, child sexual abuse leading to post traumatic stress disorder, sexual perversions, and dissociative identity disorder) என்று உண்மையாக விளக்கியிருக்கிறார்.. நான் தேடிப் படித்தவரைக்கும், இது உண்மை தான்.. though the possibility of all such things occurring together would be rare.. மேலும், வன்முறைகளை நேரடியாக காட்டவில்லை.. ஆனால் செயல்களின் கொடூரங்களும் கதாப்பாத்திரங்களின் முகபாவங்களும் நமக்கு அந்த வன்முறையை உணர்த்தி விடும்..

இறுதியாக, படம் எந்த மாதிரியான விழிப்புணர்வை ஊட்டியிருக்கிறது என்றால், நாளை ஒரு வக்கிரம் பிடித்த, கூட பண மற்றும் அரசியல்/அதிகார பலம் உள்ள ஒருவன், இப்படியான காரியத்தைச் செய்துவிட்டு பிடிபடும் நிலையில், நெஞ்சு வலி என்று அரசியல்வாதிகள் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆவதைப் போல, சிறு வயதில் நானும் abuse செய்யப்பட்டிருக்கிறேன், அதனால் மனநிலை பாதிக்கப்பட்டிருக்கிறேன் என்று சொல்லி தப்பிக்க வேண்டுமானால் உதவும்..

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இது சில ஆங்கிலப் படங்களின் காப்பி என்றும் சில விமர்சினங்களில் படித்தேன்.. அப்படியான படங்களை பார்த்திராததால், அது பற்றி நான் எதுவும் சொல்வதற்கில்லை.. மேலும், இயக்குனரின் திறமை குறித்துப் பேச எனக்கு எந்த அருகதையும் இல்லை, சொல்லப்பட்ட கருத்தைக் குறித்து மட்டுமே எனது பார்வை.. 

17 February 2011

Infidelity - மேலோட்டமான ஒரு உரையாடல்


சென்ற சனிக்கிழமை ஒரு தோழி வீட்டுக்குப் போயிருந்தோம்.. எங்களுடன் எங்கள் நண்பரும்.. அந்தப் பெண்ணை நான் சந்திக்கப் போவது அதுவே முதல் முறை.. என் கணவருடன் வேலை செய்பவர்.. தமிழ் வம்சாவெளி.. ஆனால் தாத்தன் காலத்தில் மைசூருக்கு குடி பெயர்ந்தவர்கள்.. அவரது அப்பா அம்மா இங்கே (அமெரிக்கா) சிறிது காலம் இருந்து பின் நாடு திரும்பியவர்கள்.. கன்சர்வேட்டிவான குடும்பம்.. இந்தப் பெண் மற்றும் இரு தங்கைகள்.. அதிலே இவர் குழந்தைப் பருவத்தை, அதாவது பன்னிரண்டு வயது வரை அமெரிக்காவிலும், பதின்ம வயதை பெங்களூரிலும் கழித்துவிட்டு இப்பொழுது மீதும் இங்கே வாசம்.. அமெரிக்கக் குடிமகள்..

சாப்பிட்டுவிட்டுப் பேசிக் கொண்டிருந்தோம்.. மற்றவர்கள் எழுந்து சென்றுவிட, நானும் அந்தத் தோழியும் மட்டும் இப்போ சமையலறையில்.. பொழுதுபோக்கைப் பற்றிய பேச்சில் ஆரம்பித்த எங்களது உரையாடல் எங்கெங்கோ சுற்றத் துவங்கியது.. என்னுடைய பிரதானமான பொழுதுபோக்கு சினிமா பார்ப்பது என்று நான் சொல்ல, உனக்குப் பிடித்த படங்களைச் சொல்லு என்றார்.. எனக்கு ஓரளவுக்கு இயல்பாக இருந்தாலே பிடிக்கும்.. சமீபத்தில் ரசித்தது ஆடுகளம்.. ஆனால் அவருக்கு நமது பிராந்திய மொழிப் படங்கள் ஏதும் தெரியாது.. எனவே ஆங்கிலப் படங்களைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தேன்..


நான் பொதுவாகப் பார்ப்பது, ஓரளவுக்காவது நல்ல ரெவ்யூ வந்த படங்களைத் தான்.. அது எந்தக் களமானாலும் சரி.. முடிவு சோகமாக இருக்கக் கூடாது :)  படம் பார்க்க ஆரம்பிக்கும் போது கதை தெரியக் கூடாது.. அதில் மட்டும் கொஞ்சம் பிடிவாதம்.. இப்படித் தான் நான் பார்த்த ஒரு படத்தின் பெயரைச் சொன்னேன்.. அவருக்குத் தெரிந்து தானிருந்தது அந்தப் படத்தைப் பற்றி.. இயக்குனர் பெயர் கூட அவரே சொன்னார்.. பிறகு என்ன கதை என்று என்னிடம் கேட்டார்.. நான் சுருக்கமாகச் சொன்னேன்..


கதையில், ஒரு கணவன் மனைவி.. மனைவிக்கு ஒரு குற்றவுணர்ச்சி மனதிலே எப்போதும் இருக்கிறது - திருமணத்துக்குப் பின்னர் ஏதோ ஒரு நாளில் எவனோ ஒருவனைக் கண்டு மையல் கொண்டுவிடுகிறார்.. மனதாலே தான் நினைத்தார் என்றாலும் கூட, கொஞ்சம் அதிகப்படியாகவே நினைத்துவிடுகிறார்.. ஆனால் கணவன் தன் மீது மிகவும் பிரியமாய் இருப்பதைக் கண்டு உடனே மனதை மாற்றிக் கொண்டு விடுகிறார்.. ஆனாலும் இது உறுத்திக்கொண்டு இருக்க, இதை ஒரு நாள் கணவனிடம் சொல்லப் போக, கணவன் கோபம் கொண்டு, ஒரு மாதிரி பித்துப் பிடித்த நிலையில், பழி வாங்குவதற்கென்றே  பதிலுக்கு தானும் ஏதோ செய்ய நினைத்து, இறுதியில் மனைவிடமே வந்து மன்னிப்பு கேட்கிறார்.. இனி தங்களது திருமண வாழ்வு என்னவாகப் போகுதோ என்று அவர் நினைக்கையில், மனைவி சொல்கிறார் - இந்த ஒரு நாளை மறந்து விட்டு இத்தனை நாள் வாழ்ந்த வாழ்க்கையை நினைவில் வைத்து உறவைத் தொடருவோம்..


இதைச் சொன்னதுமே தோழி  மிகுந்த சினம் கொண்டார்.. எப்படி நீ இப்படி ஒரு படத்தை நல்லாயிருக்கு என்கிறாய் என்று.. நான் சொன்னேன், நான் எனது நிலைபாட்டில் உறுதியாக இருக்கிறேன்.. (அதுவுமில்லாமல், நான் என்ன கதை தெரிந்து கொண்டா பார்த்தேன்?).. அதைப் பார்த்ததால் புதிதாக ஒன்றும் தோன்றவில்லை.. கதையில் அப்படி வருகிறது என்றால், உண்மையில் அப்படித் தானே ஊருக்குள்ளும் நடந்து கொண்டிருக்கிறது.. உண்மை நிகழ்வுகளையெல்லாம் கடந்து செல்லும் போது, இதுக்கென்ன என்றேன்.. சிறு வயதிலேயே நான் வாழ்ந்த ஊரில் வசித்த சில மனிதர்கள் இது போன்று தாவிச் சென்றதைக் கண்டிருக்கிறேன்.. 


இது என்ன தலைவலி என்று தோன்றியது எனக்கு.. அவர் என்னைத் தவறாக நினைக்கிறாரோ என்றும் சங்கடமாக இருந்தது..  இப்படி ஒரு படத்தைப் பார்த்ததாலோ அல்லது இது விஷயமாகத் தெரிந்து கொள்ளலாம் என்று நினைத்தாலோ, உடனே இவளும் இப்படித் தான் என்று எப்படி முடிவு செய்ய முடிகிறது?  நான் ஒரு நோயைக் குறித்து அறிந்து கொள்ள விரும்புகிறேன் என்றால் உடனே இவளுக்கு அது இருப்பதால் தான் என்று நினைத்தால் எப்படி? கேள்விப்பட்டதாலோ இல்லை அறிந்து கொள்ளும் ஆர்வத்திலோ இருக்கப்படாதா? யாரும் விவகாரமாகத் தான் யோசிக்கிறார்கள், அடுத்தவர்களைப் பற்றி..


அவர் சொன்னார் - என்னால் அப்படி ஒரு நிலையை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.. ஒருவருக்கொருவர் உண்மையாய் இருத்தலே திருமண வாழ்வு.. நான் என் கணவனை (இன்னும் திருமணமாகவில்லை.. காதலித்துக் கொண்டிருக்கிறார்கள்..) விட்டுப் பிரிந்தால் அதற்கு இரண்டே காரணங்கள் தான் இருக்க  முடியும் - அவன் என்னை அடித்திருப்பான் அல்லது வேறு ஒருத்தியை நாடியிருப்பான்..


அவரது உறுதியும் தெளிவும் எனக்குப் பிடித்து இருந்தது.. இரு வேறு கலாச்சாரங்களில் வாழ்ந்த பெண்.. இரண்டையும் கலந்து எடுத்துக் கொண்டிருப்பதாகவே நான் நினைக்கிறேன்.. அதாவது, கணவன் எப்படி இருந்தாலும் பொறுத்து சகித்து வாழ விரும்பவில்லை.. அதே நேரம், சண்டையா ஒத்து வரலையா, உடனே பிரிந்து விடலாம் என்றும் நினைக்கவில்லை.. "நான் உன்னைக் காதலிக்கிறேன்.. உனது நிறைகுறைகளை ஏற்று வாழ்வின் இக்கட்டான நேரங்களிலும் உன்னிடம் கமிட்டடாக இருப்பேன்.. உண்மையாக இருப்பேன், அதையே உன்னிடமும் எதிர்பார்க்கிறேன்.. நீ என்னை விட்டு வேறு ஒருத்தி பின்னால் சென்றாலோ இல்லை துன்புறுத்தினாலோ, நானும் உன்னை விட்டுப் பிரிந்துவிடுவேன்" என்கிற மாதிரி.. 


நான் சொன்னேன், அப்படி ஒரு நிகழ்வை நேரடியாகக் காண்கையில் (ஊர் உலகத்தில் நடப்பவற்றை எல்லாம் சொல்லவில்லை), நான் அதற்கான காரணங்களை அலச விரும்புவேன்.. இப்படி நடக்கவே நடக்காது அல்லது நடக்கவே கூடாது என்று நம்புவதிலோ நினைப்பதிலோ விருப்பமில்லை..  மனித மனம், எல்லாம் அமைந்திருந்தும் இருப்பதில் சலிப்புற்று புதியதாக எதையாவது தேடி அலையக் கூடியதா (is it all innate??), இப்படி அலைபாயும் தன்மை மனிதருக்கு மனிதர் மாறுபடுமா, கணவன் மனைவிக்குள்ளே ஏதேனும் பிணக்கு இருந்து அதன் காரணமாக இப்படி வேறு உறவில் நாட்டம் ஏற்பட்டதா, வேறு ஏதாவது ஸ்ட்ரெஸ் ஆ, ஏதோ ஒரு புள்ளியில் ஆரம்பிக்கும் பழக்கம் தொடர்ந்து நடந்து ஈர்ப்பாக மாறி பின் காதலாக மாறுவதாலா, வளர்ந்த இடத்தின் கலாச்சாரம் (இங்கே பெரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்களாக, பெற்றோர்கள், முக்கிய உறவினர்கள், ரோல் மாடல்ஸ் மற்றும் நண்பர்கள் - இவர்களின் வாழ்க்கையை மட்டும் கருத்தில் கொண்டு..) அதை உள்வாங்கியதன் விளைவாக சிலருக்கு வேறு  மனிதர்கள் மேல் நாட்டம் வருவதில்லையா, அப்படியே வந்தாலும் தவறு என்று உணர்ந்து உடனே முளையிலேயே கிள்ளி எரிந்து விடுவார்களா, குற்றவுணர்வுடன் அதைத் தொடருவார்களா, குற்ற உணர்ச்சியே இல்லாமல் ஏமாற்றுவார்களா இல்லை சொல்லிவிட்டுப் பிரிந்து விடுவார்களா.. இப்படியெல்லாம் இதை அணுகலாம் என்றேன்..

உண்மையில் அவரை விடவே நான் கன்சர்வேட்டிவ்.. இதை நான் விளக்க வேண்டியதாக இருந்தது.. புரிந்து கொண்ட பின்னர் நான் சொல்ல வந்ததையும் ஏற்றுக் கொண்டார்.. ஆனாலும், அவரால் இன்னொருவரிடத்தில் காதல் ஏற்படுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.. "நான் வேலையிடத்தில் நிறைய ஆண்களுடன் பழகுகிறேன்.. சிலரைப் பிடிக்கவும் செய்கிறது.. ஆனால் யாரையும் என் காதலன் இடத்தில் வைத்துப் பார்க்க மாட்டேன்.. அதுவே என்னைப் பொறுத்தவரை தவறு" என்றார்..


நீங்கள் conscientious personality ஆக இருக்கிறீர்கள்.. இது சரி இது தவறு என்ற தேடுதல் உங்களுக்கு இருக்கிறது என்றேன் (இவர் மற்றவர்களைப் பற்றி அவர்கள் இல்லாதபோது பேசுவதையும் விரும்பவில்லை என்பதையும் கண்டேன்).. ஒரு வேளை, அப்படிப்பட்ட புரிதல் இல்லாதவர்கள் இல்லை புரிந்தும் சுயநலத்துடன் சிந்திப்பவர்கள் பாதை மாறலாம் என்றேன்.. 


அவர் சொன்னார், இப்படிப்பட்ட மனிதர்களிடம் இருந்து நான் விலகி இருக்கவே விரும்புகிறேன்.. நான் சொன்னேன், என்னாலும் இப்படிப்பட்டவர்களிடம் (துணைக்குத் தெரியாமல் செய்பவர்கள்..  விவாகரத்து பெற்று வேறோருவரைக் காதலிப்பவர்கள் அல்ல) நட்பாக நெருங்க முடியாது.. ஆனால் வெறுத்து ஒதுக்கவும் மாட்டேன் என்று..


இப்படியாகத் தொடர்ந்த உரையாடல், வேறொரு விஷயத்தையும் மேலோட்டமாக அலசியது.. அதைப் பற்றி இப்போது எழுத மனமில்லை..அதற்குள் எங்களை வந்து எழுப்பிவிட்டார்கள்.. நாங்களும் விடைபெற்றுக் கிளம்பினோம்.. உரையாடியது நிறைவாகவே இருந்தது.. நான் என் கருத்து தான் சரி என்று சொல்லவும் இல்லை, அவரும் அதைச் செய்யவில்லை.. மாறாக மனதில் இருந்ததை அப்படியே பேசமுடிந்ததில், மற்றவரது கருத்தையும் அறிய முடிந்ததில் மகிழ்ச்சி.. பதிவுலகில் இப்படிப் பேச முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? முடிந்தால் இன்னொரு நாள் பேசலாம் என்றார்.. எங்கள் வீட்டுக்கு வந்து செல்லுமாறு அழைப்பு விடுத்தேன்.. 

16 February 2011

விழிப்புணர்வுக்காக..

இன்று நடந்த ஒரு சம்பவம்..

அலுவலகத்தில், எங்கள் வேலைகளை முடித்த பின், ஒரு மேற்பார்வையாளரிடம் காண்பித்து, அவர் சொல்லும் திருத்தங்களைச் செய்து முடித்த பின், கையெழுத்திட்டு, நிறைவு செய்வோம்.. 

இன்றும் அப்படித் தான் ராபர்ட் (வழக்கம் போல பெயர் மாற்றித் தான் சொல்லியிருக்கிறேன்) வந்திருந்தார் - மேற்பார்வை செய்ய.. எப்பவும் கொஞ்சம் வேலை பற்றிய பேச்சு கொஞ்சம் வெட்டிப் பேச்சு என்று கழியும் இந்த நேரம், இன்று ஏனோ ஒருவரும் பேசாமலே கழிந்து கொண்டிருந்தது..

இங்கு இடைச் செருகலாக, நேற்று நடந்த ஒரு குட்டி கலாட்டாவை சொல்லிவிடுகிறேன் - இந்த டீ காப்பி நிலையம் பற்றிச் சொல்லியிருக்கிறேன் இல்லையா.. அந்தப் பொருட்களைப் பூட்டி வைத்திருக்கும் கப் போர்டின் சாவி நேற்று தொலைந்து போய், எல்லோரும் தேடிக் கொண்டிருந்தனர்.. இறுதியாக, ராபர்டின் பான்ட் பாக்கெட்டில் இருந்ததைப் பார்த்துவிட்டு, இன்று காலையில் திருப்பித் தந்தார்.. இதை வைத்து அவரை ஓட்டுவதற்காக, என் சக அலுவலர் சாதியா எங்க மேசைக்கு வந்தார்.. உங்களால் நேற்று நான் டீ குடிக்கமுடியவில்லை, அதனால் எனக்கு தலைவலி வந்து சரியாக சாப்பிடவும் இல்ல.. அதனால, நீங்கதான் எங்களுக்கு இன்னைக்கு மதியச் சாப்பாடு வாங்கித் தரனும் என்று ஓட்டிக் கொண்டிருந்தார்.. இதற்கும் ராபர்ட் ஒன்றும் பதில் பேசவில்லை.. சிரித்துவிட்டு வேலையை சரிபார்க்கத் துவங்கினார்.. சாதியாவும் நகர்ந்து சென்றார்..

நானும் பார்க்கிறேன் - ராபர்ட் மவுசை ஸ்க்ரோல் செய்து கொண்டே இருக்கிறார்.. ஒருப்படியாக ஒரு குறிப்பும் சொல்லக் காணோம்.. எப்பவும் ஐந்து நிமிடத்தில் முடியக் கூடிய ஒரு வேலை, இருபது இருபத்தைந்து நிமிடங்கள் கடந்தும் ஒன்றும் ஆகக் காணோம்.. இது போன்று இன்னும் ஏழெட்டு சரிபார்த்தல்கள் மிஞ்சி இருந்தன.. இவ்வளவு நேரம் எடுக்கிறாரே என்று எனக்கு சலுப்பாக இருந்தது.. அப்படியே பக்கத்தில் இன்னொரு கணினியைத் திறந்து, மெயில்களைக் குப்பையில் தூக்கிக் கடாசும் வேலையைச் செய்து கொண்டிருந்தேன்.. 

திடீரென்று, இந்த இடம் சூடாக இருப்பது போல இருக்கு என்றார்.. எங்களுக்கு அவ்வளவாக வெப்பம் தெரியவில்லை.. பார்த்தால், அவரது நெற்றி வியர்த்திருப்பது போன்று இருந்தது.. 

இன்னும் முதல் வேலையே முடிக்கவில்லை.. மவுசை உருட்டிக்கொண்டே இருந்தவரிடம், எனக்கு இருந்த சில சந்தேகங்களைக் கேட்டேன்.. ஒரு நிமிடம் மாதிரி நான் பேசி முடித்து அவர் முகத்தைப் பார்த்தால், எந்த ரியாக்ஷனும் இல்லை.. கடுப்பாக இருந்தது.. "இப்போ நான் சொன்னதைப் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?" என்று தெளிவாக அவரிடம் கேட்டேன்.. திரும்பி, "வாட்?" என்றார்.. மீண்டும் நான் விளக்கினேன்.. மறுபடியும், "வாட்?" தான் பதிலாகக் கிடைத்தது!

"உங்க உடம்புக்கு ஏதும் சரியில்லையா? Are you okay?" என்று கொஞ்சம் பயந்தபடியே கேட்டேன்.. திரும்பி என்னை முப்பது நொடிகள் முறைப்பது மாதிரி பார்த்தார்.. பிறகு மீண்டும் மவுஸ் உருட்டல்.. எனக்குப் பொறுமையே போய் விட்டது..  "உங்களுக்கு வேர்த்திருக்கிறது.." என்று சொன்னேன்.. மீண்டும் திரும்பி முறைத்துவிட்டு, "யா.. யா.. I am fine.." என்று சொல்லிவிட்டு, தொடர் மவுஸ் உருட்டல்.. 

என்னமோ சரியில்லை.. எனக்கு விளங்கினார் போல இருந்தது.. நானே அவசரமாக அந்த வேலையை மூடிவிட்டு, அடுத்த பக்கத்தைத் திறந்தேன்.. அதுக்கும் இப்படியே தெளிவில்லாமல் உருட்டல்.. அதையும் நானே மூடிவிட்டு அவரை ஏறிட்டேன்.. அவருக்கு தான் குழப்பத்தில் இருக்கிறோம் என்பதே புரியவில்லை.. அதனால் அதை ஒப்புக்கொள்ளவும் முடியவில்லை..  "லஞ்ச் சாப்பிட்டுவிட்டுத் தொடரலாம்" என்று சொல்லி அவரை எழுப்பிவிட்டேன்.. திடமாக எழுந்து நடந்து போனார்.. அவர் போவதைப் பார்த்துக்கொண்டிருந்த நான் உடனே இன்னொரு ஆசிரியரிடம் சென்று நடந்ததைச் சொன்னேன்.. நான் நினைத்ததே தான்.. அவர், தலைவரிடம் போய்ச் சொல்லு என்றார்.. எனக்குத் தயக்கம் - மாட்டி விடுவது போன்று ஆகிவிடக் கூடாதில்லையா? அதற்குள் இன்னொருவர், "ராபர்டின் நலனுக்காகத் தான் சொல்கிறோம், உனக்குத் தயக்கமாக இருந்தால், நான் போய் சொல்கிறேன்" என்றார்.. 

நான் அதற்குள் கீழே சென்று ராபர்டைத் தேடினேன்.. சாப்பிடச் சென்று விட்டார்.. இடையில் சந்தித்த சாதியாவும், ராபர்ட் தன்னிடம் சரியாகப் பேசவில்லை என்றார்.. நான் நிலைமையை விளக்கிவிட்டு என் வேலையை கவனிக்கச் சென்றேன்..

லஞ்ச் நேரம் முடிந்து, ராபர்ட்டுக்கு போன் செய்தேன்.. கீழே இறங்கி வந்தார்.. தெளிவாகப் பேசினார் - எப்போதும் போல.. அதே பழைய ஆளாக மாறியிருந்தார்.. நீ கிளம்பு, நான் மீதியைக் கவனித்துக் கொள்கிறேன் என்று சொன்னார்..

உங்களுக்கு என்ன காரணமென்று புரிந்ததா? 

ராபர்ட்க்கு சர்க்கரை நோய்.. இள வயதிலேயே வந்துவிட்டது.. அதற்கான மருத்துவம் எடுத்துக் கொண்டிருக்கிறார்..  அதன் விளைவு தான் இது - மருந்தினால் ரத்தத்தில் குளுகோஸ் அளவு மிகவும் இறங்கிப் போனதால், யோசிக்கும் திறனில் வந்த குழப்பம்.. Hypoglycemia (மேலும் தகவல்களுக்கு லிங்க் கொடுத்திருக்கிறேன்) பொதுவாக, இப்படிப்பட்டவர்கள் மயங்கி கீழே விழுந்து விடுவார்கள்.. அவர்களைக் கண்டவர்கள் மருத்துவமனைக்கு கூட்டிச் சென்று ட்ரீட் செய்வார்கள்.. இல்லை, அவர்களே  தங்களுக்கு இப்படி இருக்கிறது என்று உணர்ந்து உடனே சர்க்கரை மாத்திரை (நோய்க்கான மாத்திரை அல்ல, சர்க்கரையே தான்) அல்லது ஜூஸ் எடுத்துக் கொள்ளுவார்கள்.. சர்க்கரை நோய்க்கான மருந்து உட்கொள்ளும் எனது பாட்டி கூட அடிக்கடி தலை கிறுகிறுப்பதாகச் சொல்லுவார்.. ஆனால் என்னுடன் வேலை செய்பவர் நான் பார்த்து கொண்டிருக்கக் கொண்டிருக்க இப்படியானது எனக்கும் திகைப்பு தான்.. 

உங்களுக்குத் தெரிந்தவரும் யாரேனும் இருக்கலாம், சர்க்கரை நோய்க்கான மருந்துகளை எடுத்துக் கொண்டு - ஒரு விழிப்புணர்வுக்காகவே இதைப் பகிர்ந்திருக்கிறேன்.. ராபர்டுக்காக அறையில் சர்க்கரை மாத்திரைகள் வாங்கி வைத்திருக்கிறார்கள் என்று இது முடிந்ததும் தான் தெரிந்து கொண்டேன்.. அவர் திடமாக இருந்ததால் மட்டுமே அவரை சாப்பிட அனுப்பி வைத்தேன்.. இல்லையென்றால், அவரை அங்கேயே இருத்திவிட்டு, உடனே  மற்றவர்களை உதவிக்கு அழைத்து, அவரை எமர்ஜென்சிக்கு அழைத்துப் போவது போன்று ஏதாவது செய்திருப்போம்.. (ஏற்கனவே ஒரு முறை இவ்வாறு செய்திருக்கிறார்கள், அப்போது நான் நேரிடையாக அவ்விடத்தில் இல்லை.. அதற்கப்புறம் தான் அவருடைய உடல்நிலை குறித்து ஆசிரியர்கள் தவிர்த்த ஏனையோருக்கும் (என்னைப் போன்று) தெரிய வந்தது..)

14 February 2011

தொலச்சுப்போடுவேன் தொலச்சு..!




இன்னைக்கு மதியம் ஒரு விமானப் பயணம் இருந்ததால, ஒரு கேப் (டாக்ஸி) நிறுவனத்தைக் கூப்பிட்டு, என் வீட்டு முகவரியத் தந்திருந்தேன். இவங்க எப்பவும் சொன்னா சொன்ன நேரத்துக்கு வந்துடுவாங்க, நல்ல நேர்த்தி.. அதனால, நான் எப்பவும் இந்த கேப்ல தான் போறது! 

குறிப்பிட்ட நேரத்துக்கு, எங்க வீட்டு ஜன்னல் வழியா எட்டிப் பார்த்த பொழுது, அங்க எனக்காக ஒரு கேப் காத்துக்கொண்டிருந்தது. நானும் தயாராக இருந்ததால, உடனே கீழ வந்துட்டேன். கேப்பை கிளப்பினதும், அந்த ஓட்டுனர் திரும்பி எங்கிட்ட, “இதுக்கு முன்னாடி நான் உங்களைக் கூப்பிட்டுப் போயிருக்கேனா?” ன்னு கேட்டார். எனக்கு அவரைப் பார்த்த மாதிரி நினைவு இல்லன்னு சொன்னேன். உடனே அவர், “உங்களுக்குத் தெரியுமா? நான் இந்த முகவரிக்கு வரக் கூடாதுன்னு நினைச்சிருந்திருக்கேன். தெரியாம இன்னைக்கு வந்துட்டேன்..” னார்.

ஏன் இப்படிச் சொல்றார்ன்னு நினைக்கும் போதே, அவர், “ஆமா.. உங்க வீட்டுல இருந்து யாராவது இந்தியப் பயல் விமான நிலையத்துக்கு எங்க கேப்ல போயிருக்காங்களா? குறிப்பிட்டுச் சொல்லணும்னா, சுமார் ஒரு மாசத்துக்கு முன்னாடி?” ன்னு கேட்டார். நான் யோசிச்சேன்.. எங்க வூட்டுக்காரர் சமீபத்துல விமானப் பயணம் ஏதும் போனதில்ல.. “எங்க வீட்டுல இருந்து யாரும் போயிருக்க வாய்ப்பில்ல.. கீழ் வீட்டுப் பையன் வேணும்னா போயிருக்கலாம்.. அவன் ஐரோப்பிய அமெரிக்கன்..” ன்னேன். “இல்ல.. நான் சொல்ற ஆளு இந்தியன்.. இள வயசுக்காரன்..” ன்னார்..

யாராயிருக்கும்ன்னு குழம்பினேன் நான்.. “அன்னைக்கு அந்தப் பையன் பெரிய கூத்து பண்ணினான்.. அவன் சொன்ன நேரத்துக்கு நான் எங்க நிறுவனத்திலிருந்து ஒரு கேப் அனுப்பியிருந்தேன்.. அந்த ஓட்டுனர், அவனுக்காக வெளிய காத்துட்டு இருந்திருக்கார்.. அவனைக் கூப்பிட்டுச் சொல்லுங்க ன்னு எனக்கு அலைபேசில சொன்னார்.. நானும் அவனோட அலைபேசிக்கு மணியடிச்சுப் பார்க்கறேன்.. எடுக்கவே மாட்டேன்றான்.. இப்படியே அரை மணி நேரத்துக்கு மேல ஆயிடுச்சு.. இதுக்கு மேல காத்திருந்து பயன் இல்லன்னு, அந்த ஓட்டுனர் திரும்பிவரப் போறதாச் சொன்னார்.. இல்ல, வர்றாதீங்க, அவன் அங்கதான் இருக்கறான், எப்படியும் கொஞ்ச நேரத்துல வந்திருவான்னு நான் அவரை சமாதானப்படுத்தி வச்சிருந்தேன்..”

“அந்தப் பையனை மறுபடியும் மறுபடியும் கூப்பிட்டுப் பார்த்தேன்.. பதிலே இல்ல.. அதுக்கப்புப்புறம் பதினஞ்சு நிமிஷம் கழிச்சு ஒரு வழியா போனை எடுத்து, எங்க இருக்கிறன்னு கேட்டா, விமான நிலையத்துல ன்னு சொல்றான்.. எப்படிப்பா வந்தன்னா, உங்க நிறுவனத்துக் கேப்ல தான்னு சொல்றான்.. நான் செம கடுப்பாயிட்டேன்.. அப்புறம் தான் தெரிஞ்சது, அவன் இன்டர்நெட் மூலமா எங்களுக்கு போன் செய்து, அவனுடைய செல் நம்பர் கொடுத்து முன்பதிவு செய்திருக்கான்.. அவனோட போனுக்கு அந்த வீட்டுல இருந்து சிக்னல் கிடைக்கல.. எப்படியோ அரைமணி நேரத்துக்கப்புறம், வெளிய கேப் நிற்கரதப் பாத்துட்டு அவனே இறங்கி வந்திருக்கான்.. எங்கள இப்படிக் காக்க வச்ச கடுப்பு எனக்கு இன்னமும் போகல..”

“இன்டர்நெட் போன்..” “அந்த வீட்டுல இருந்து சிக்னல் கிடைக்கல..” இந்த வரிகளக் கேட்டதும் எனக்குப் பொறி தட்டுச்சு.. கடந்த சில மாதங்களா நம்ம ஒடன்பொறப்பும் பக்கத்து மாநிலத்துல தான் குப்ப கொட்டிக்கிட்டு இருக்காப்ல.. ஒரு மாசத்துக்கு முன்னாடி, எங்க வீட்டுக்கு வந்துட்டு திரும்பிப் போகும் நேரம், நாந்தான் இந்தக் கேப் நிறுவனத்துல முன்பதிவு செய்துக்கோன்னு, இவங்க தொலைபேசி எண் கொடுத்திருந்தேன்.. அன்னைக்கு எனக்கு வேலை இருந்ததால நான் அலுவலகம் கிளம்பிப் போயிட்டேன்.. அவனோட போனுக்கு எங்க வீட்டுல சிக்னல் கிடைக்காது..

மெதுவா அவர் கிட்ட, இது என்னோட சகோதரனா இருக்கலாம்ன்னு சொன்னேன்.. அவரு திரும்பி ஒரு மொறை விட்டாரு.. எதுக்கும் உறுதி படுத்திக்கலாம்ன்னு அவனுக்கு போன் செய்து பார்க்கிறேன்னு சொன்னேன்.. சரின்னார்.. பையன் வேலையில இருந்தான்.. “என்ன இந்த நேரத்துல? சொல்லு..” ன்னான்.. நானும் தமிழ்ல, இங்கயிருந்து கிளம்பிப் போறப்போ கேப் சம்பந்தமா ஏதும் பிரச்சனையாச்சா ன்னு கேட்டேன்.. அவனும் கிட்டத்தட்ட இதே கதைய சுருக்கமா சொல்லிட்டு, இப்ப ஏன் அதைக் கேக்கற ன்னான்.. அந்த கேப் ஓட்டுனர் தான் கேட்கச் சொன்னார், அவரோட தான் இப்போ போயிட்டு இருக்கேன்னு சொல்லிட்டு சிரிக்க ஆரம்பிச்சேன்.. பையன் கடுப்பாகி, “இப்ப எனக்கு வேலை இருக்கு.. வை போனை..” ன்னு வச்சிட்டான் அவரு உடனே, “பாத்தியா.. நான் சொன்னன்ல..” ங்கற ரீதியில தொடர்ந்து கொஞ்சம் நேரம் திட்டினார்.. எனக்கு உள்ளூர சந்தோஷந்தான் J பயபுள்ள அடுத்த வாட்டி வீட்டுக்கு வரும் போது இத வச்சே ஓட்டி ஒழிச்சிட மாட்டோம்? J

அடுத்ததா ஒரு கதை சொன்னார்.. இது வேறொரு பையன் செய்ததைப் பத்தி.. அவன், அவசரமா விமான நிலையம் போகணும், பத்து நிமிஷத்துல கேப் வேணும்ன்னு கேட்டிருக்கான்.. நேரத்துக்கு வந்துடனும்ங்கறதுல உறுதியா இருக்கறதால, இவர் அடிச்சுப்புடிச்சு போயிச் சேர்ந்திருக்கார்.. பாத்தா, அவன் இன்னொரு கேப்ல ஏறிட்டு இருந்திருக்கான் (ஒரே நேரத்துல ரெண்டு கேப்கள கூப்பிட்டு இருக்கான்).. இவர் செம கடுப்பாயிட்டு, அவனோட தொலைபேசி எண்ணுக்கு ஒரு பெயர் கொடுத்து பாதுகாத்து வச்சிருந்திருக்கார்..

பின்னொரு நாள், அவன் மறுபடியும் இவங்களக் கூப்பிட்டப்போ, வர்றேன்னு சொல்லிட்டு, சொன்ன நேரத்துக்குப் போகாம, அஞ்சு நிமிஷம் கழிஞ்சதும், தோ வந்துகிட்டே இருக்கேன்னு சொல்லி, மறுபடியும் பத்து நிமிஷம் கழிச்சு, “மன்னிக்கணும், வர்ற வழியில எங்களுக்கு இன்னொரு ஆள் கிடைச்சுட்டார், அதனால நீங்க வேற கேப் கூப்பிட்டுக்கோங்க..” ன்னு சொல்லிட்டு, போகாமலே விட்டுட்டார்!!! அதுக்கப்புறம், அவனோட வாய்ஸ் மெயில்ல, வராததுக்கான உண்மையான காரணத்தையும் சொல்லி இருக்கார்!

அவர் செய்ததில எனக்கு உடன்பாடில்ல.. அந்தப் பையனுக்கு என்ன அவசரமோ, விமானத்தை தவற விட்டிருந்தான்னா, அவனுக்கு அது பெரிய பிரச்சனையாயிருக்கும்.. நான் சொன்னேன், “உங்க நிறுவனத்தப் பத்தி அவனுக்கு தெரிஞ்சிருக்காதா இருக்கும்.. எங்க வராம போயிடுவீங்களோன்னு தான் அவன் அவசரத்துக்கு ரெண்டு பேரைக் கூப்பிட்டிருப்பான்.. காத்திருந்து ஏமாந்த அனுபவம் எனக்கும் இருக்கு..” 

ஆனா அவர் ஒத்துக்கல.. “என்னோட கேப்பைப் பாருங்க.. எவ்வளவு சுத்தமா வைத்திருக்கேன்.. நேரந் தவறாமை எங்களோட குறிக்கோள்.. நாங்க ரொம்ப ப்ரோபஷனல்.. வாடிக்கையாளருக்காக நாங்க கொண்டிருக்கும் பொறுப்புணர்வை, அவங்களும் எங்களுக்காகக் கொண்டிருக்கணும்..” ன்னார்.. “ம்ம்..” ன்னேன்.. இறங்கும் பொழுது, “You too.. remember this.. If you mess with me, I will pay back..” ன்னார்.. நான் சிரிச்சுட்டேன் J.. நான் அப்படிச் செய்ய மாட்டேன்னு சொல்லிட்டுக் கிளம்பினேன்..

அந்தப் பையனுக்குச் செய்ததுல எனக்கு உடன்பாடு இல்லாட்டியும்,  அவரோட ஆட்டிட்யூட் பிடிச்சிருந்தது.. அவருக்கு தன்னை ஏமாத்திட்டாங்களே ன்னு சுயபச்சாதாபம் இல்ல. நான் பொறுப்பா இருக்கேன், அதை உங்க கிட்டையும் எதிர்பார்க்கிறேன், என்னை நீங்க ஏமாத்தினா அதைத் திருப்பிக் கொடுப்பேன் என்கிற அந்தக் கோபம், சுயகம்பீரம் பிடிச்சிருந்தது!!

(வெள்ளியன்று எழுத ஆரம்பித்தது.. அதனால இன்று என்று வருவதெல்லாம் இன்று முந்தாநேத்து ஆகி விட்டது J )



இந்தப் பாட்டுக்கும் இடுகைக்கும் என்ன சம்பந்தம்ன்னு கேட்டுட மாட்டீங்கன்னு நம்பறேன் :) 

08 February 2011

வணக்கம்!


எங்க அலுவலகத்துல நடக்கற சில விஷயங்களை அப்பப்போ இங்கே பகிர்ந்துக்கறேன்..

~~~~~~~~~~~

ஜனவரில ஆரம்பிக்கற வருடப் படிப்புக்காக ஒரு மாணவர் நேர்முகத் தேர்வுக்கு வந்திருந்தார்.. அவர் இங்கத்தவர்.. அதனால வேற எந்த பிக்கல் பிடுங்கலும் இல்ல.. அவரோட தகுதிகளும் நிறைவானவையாகவே இருந்தன.. நேர்முகத் தேர்வின் போது, அவர்கிட்ட தனித்தனியா கால் மணி நேரத்துல இருந்து அரை அணி நேரம் வரைக்கும் நாலஞ்சு பேர் பேசுவாங்க.. அரைநாள் வரைக்கும் இப்படிக் கழியறது, இறுதியா சாப்பாட்டு நேரத்துல எங்கள மாதிரி வெட்டிப்பசங்களோட அரட்டை அடிச்சுகிட்டே முடிஞ்சுபோவும்.. இது தான் நடைமுறை.. அவர் கிட்ட பேசினவங்க எல்லாருக்குமே திருப்தி தான்.. அவரும் வந்துட்டா எங்க வேலை நிறையவே குறையும்.. அதனால அப்பப்போ கேட்டுக்கிட்டே கெடந்தோம் - அவர் வருவாராஆஆஆஆஆஆஆ.. அவர் வருவாரா ன்னு.. ஜனவரியும் வந்து போச்சு.. பொறுக்க முடியாம, ஒரு நாள் மதிய உணவு நேரத்துல எங்க தலைவர (துறை மேலாளர்) காச்சி எடுத்ததுல, அவர் சொன்னார் - அந்தப் பையன் மனசு மாறிட்டான்னு.. நேர்முகத் தேர்வுக்கு வந்தவன் கிட்ட பேசின ஒன்னு ரெண்டு பேரு, இங்க புதுசா இன்னொரு துறை ஆரம்பிக்கப் போறாங்க தம்பி.. அதுல இங்க கொடுக்கறத விட சம்பளம் அதிகம்ன்னு சாதாரணமா பேச்சுவாக்குல சொல்லியிருக்காங்க.. பையன் இங்க மண்டைய மண்டைய ஆட்டிட்டு, வீட்டுக்கு  கிளம்பிப் போனவுடனே, அந்த புதுத் துறை ஆளுங்க கிட்ட விண்ணப்பம் போட்டிருக்கார்.. அவங்களுக்குத் தெரிஞ்சு போச்சு - இவன் வேறொரு துறைக்காக வந்தவன் இப்படி பல்டி அடிச்சிருக்கான்னு... இப்படி ஒரே நாள்ல மனசு மாறுறது அவனவன் விருப்பம்ன்னா, அப்படிப்பட்டவன எடுக்கறதும் விடறதும் அலுவலகத்தோட விருப்பமில்லையா!! அதனால வேணாம்னு அந்தத் துறைக்காரங்களே சொல்லிட்டாங்க.. (இத்தனைக்கும் அவங்களுக்கு ஆள் தேவையாத்தான் இருக்கு..  கடமைக்காக வேலை செய்யறவன விட காதலோட வேலை செய்யறவனை எதிர்பார்க்கிறாங்க.. ஆனா இந்த நிலைப்பாடு உறுதியானது  இல்ல..  ரொம்பவே ஆள் இல்லாத நிலையில, எப்படியிருந்தாலும் எடுத்துப்பாங்கன்னு தான் நினைக்கறேன்.. ) இந்தக் கதைய கேட்டதும், நான் சொன்னேன் - அக்காவப் பாக்க வந்த மாப்பிள அங்கயே வச்சு தங்கச்சி புடிச்சிருக்குன்னு சொன்ன கதையாயிருக்கேன்னு.. எல்லாரும் நல்லா சிரிச்சாங்க :)
 
~~~~~~~~~~~

எங்க அலுவலகத்துல எங்க துறை க்குன்னு  ஒரு குட்டி டீ காப்பி உற்பத்தி நிலையம் :)  ஒன்னு இருக்கு (இங்க பல அலுவலகத்துல இப்படித் தான்னு நினைக்கறேன்.. காப்பி கடைக்குப் போய் வாங்கி குடித்துவிட்டு வரும் நேரம், பணம் ரெண்டுமே மிச்சம்).. அங்க டீ பைகள், சர்க்கரைப் பொட்டலங்கள், பால் குப்பிகள், ஒரு காப்பி தயாரிப்பு மெஷின், சுடு நீர்  வழங்கும் மெஷின் இதெல்லாம் இருக்கும்.. கூட, நிறைய பேப்பர்/பிளாஸ்டிக் கப்புகள், அதற்கான மூடிகள் இதையும் வச்சிருப்பாங்க.. (எங்க செலவு தான்).. நான் காலையில வீட்டுல டீ தயாரித்துக் குடிக்கும் வேலையை நேரத்தை மிச்சப்படுத்தி (என்ன அஞ்சு நிமிஷம் ஆவுமான்னு கேக்கறது புரியுது :) ), அங்க போயி குடிச்சிப்பேன்.. எழுந்த அரை மணி நேரத்துல கிளம்பி ஓடறதுன்னா சும்மாவா? :)).. ஒரு நாள், எங்க ஆசிரியர் ஒருத்தர், காலையில குடிச்ச கப் லயே சாயங்காலமும் குடிக்கறதப் பாத்து, ஏன் இப்படி செய்றீங்கன்னு கேட்டதுக்கு, எதுக்கு தேவையில்லாம ஒரு கப்பை குப்பையாக்கனும்ன்னு ஒரு தத்துவம் சொன்னார்.. நானும் யோசித்தேன் - ஒரு நாளைக்கு ரெண்டு வாட்டி  குடிச்சா, ரெண்டு கப், அதற்கான மூடிகள் மற்றும் கலக்குவதற்கான  குச்சிகள் ன்னு பொருள் வீணாகுது.. ஒரு மாதத்துக்கு இருபத்தஞ்சு நாள் நான் வேலை செய்கிறேன் என்றால், நான் ஒருத்தியே, இப்படி அம்பது பொருட்களை உபயோகப்படுத்தி தூக்கி எறிகிறேன்.. அதிகமாகத் தோணலை???  பொருட்களின் குப்பையை மறுசுழற்சி செய்வதை விட, தேவையைக் குறைத்து, குறைவாக உபயோகப்படுத்துதலுக்கே முன்னுரிமை அளிக்கணும்.. இந்த விதியை பின்பற்றி, நான் இப்போ என்னுடைய பீங்கான் கோப்பை ஒன்றையும், சிறு கரண்டி ஒன்றையும் எங்களுக்கென்று கொடுக்கப்பட்ட அறையில் வைத்துவிட்டேன்.. என்னைப் பார்த்து, எனது ஆசிரியரும் அவரது கோப்பையைக் கொண்டு வந்து விட்டார்.. ஏதோ என்னால முடிஞ்சது!
 
~~~~~~~~~~~~

எகிப்துல நடக்கற புரட்சியை எல்லோரும் அறிந்திருப்பீங்க.. என்கூட வேலை பார்க்கும் ரெண்டு பேரோட குடும்பங்கள் அங்கே தான் இருக்கின்றன.. ஒருத்தரோட மனைவி மற்றும்  குழந்தையே அங்க தான் இருக்காங்க!! இன்னொருத்தருக்கு, பெற்றோர்கள், உறவுகள்ன்னு இப்படி.. தினமும், வேலையோட வேலையாக, கணினியில் செய்திகளை பார்த்துகிட்டு இருப்பாங்க.. இதுல ஒருத்தங்க கிட்ட அங்க இருக்கற நிலைமை பத்தி அங்கத்த குடியானவரா என்ன நினைக்கறீங்கன்னு கேட்டுப் பாத்தோம்.. அவரும் புரட்சியின் தேவையை முன் வைத்தார்.. அவருடைய கருத்துகள், தமிழ் வலைபதிவுகளில் காணப்படும் கண்ணோட்டத்தையே பிரதிபலிப்பதாக இருந்தன.. முபாரக், எட்டு வருடங்கள் துணை  அதிபராகவும், அதற்கப்புறம் முப்பது ஆண்டுகள் போலி ஜனநாயகத்தின் பெயரில் தொடர்ந்து அதிபராகவும் பதவியில் இருந்துவிட்டு, அதற்கடுத்து வாரிசு அரசியலுக்கும் வழி தோண்டிக் கொண்டிருக்கிறார்.. அவரை தீவிரமாக எதிர்ப்பவர்கள் பொதுவாக காணாமல் போய் விடுவார்கள்.. இதை விட்டால் அவரைத் தூக்கி எறிய வேறு சந்தர்ப்பம் கிடைக்கப் போவதில்லை.. ஆனால் இதன் பேரில் இஸ்ரேலின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் வர வாய்ப்பு இருப்பதால், அமெரிக்கா இந்த மாற்றத்தை வரவேற்கத் தயாராக இல்லை.. இது அனைவரும் அறிந்தது தான்.. ஆனால் இதன் மறுபக்கத்தையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.. இது நாள் வரை நான் பார்த்து வளர்ந்த கட்டிடங்கள் தீயில் எறிவது வேதனை அளிக்கிறது என்றாலும் முக்கியமான இன்னொரு விஷயம், இது போன்ற நிலையற்ற ஆட்சி நேரங்களில், சட்ட ஒழுங்கு சீர் குலைதல்..   காவலதிகாரிகள் காவல் நிலையங்களுக்குப் போகாமல் இருந்த நாட்களில் கைதிகள் தப்பித்து   இருக்கிறார்கள்.. அங்கிருந்த ஆயுதங்களையும் கடத்திக் கொண்டு.. கடைகளை, வங்கிகளை இஷ்டம் போல கொள்ளையடிக்க முடியும்.. பொது மக்களின் உடைமைகளையும் தான்.. ஆனால் முபாரக் இன்று வரை பிடி கொடுக்காமலே இருக்கிறார்.. மக்கள் உணவுக்கும் மருந்துக்கும் என்ன செய்கிறார்கள் என்றும் கவலையாக இருக்கிறது.. இவரது சொந்தங்களைக் குறித்தும்..