30 December 2010

துருப்பிடிக்காத அம்பு..

கமல் உலக நாயகன் தான் ன்னு நிரூபிக்கறதுக்கு ஒரு அருமையான காட்சியோட பேரு போட ஆரம்பிக்கறாங்க :)) அதை நான் விளக்குவதை விட நீங்களே கண்டு களிச்சா தான் நல்லா இருக்கும் :)

ஹூ இஸ் த யீரோ? திருடருங்களோட சண்டை போட்டு கதாநாயகிக்கு பர்ஸ திருப்பித் தர்றவர் தான் யீரோ.. தமிழ்ப்பட யீரோ எப்பவுமே ஒரு சகலகலாவல்லவர்.. நல்லவர்.. இந்தப் படத்துலயும் அதே..

மாதவன் கேரக்டர் மாதிரி சுயநலம் மிகுந்த, நேர்மையற்ற, வெறுப்புணர்வு கொண்ட, ஒரு சந்தேகப்பேய் பிசினஸ்மேனோட, போராட்டங்கள் நிறைந்த வாழ்க்கை நடத்த வேண்டாம்ன்னு த்ரிஷா தெளிவா முடிவெடுத்த மாதிரி தான் இருக்குது.. அதுவும் ஒரு நடிகையாக ரொம்பவே சிரமப்பட வேண்டி இருந்திருக்கும்.. மாதவனோட அப்பா கூட மாதவன விட கொஞ்சம் நல்லவரா  இருக்கிறார்.. ஆனா இரண்டாவது பாதியில மாதவன ஒரு லூசாக மாத்தி படத்தை ஒரு காமெடி ட்ராமாவா ஆக்கிட்டாங்க..

ஆனாலும் ஒரு சந்தேகம் - தமிழ்த் திரையுலக நடிகர் நடிகைகள் இவ்வ்வ்வ்வ்ளோ நல்லவங்களா? :)))))))

சூர்யாவயும் நல்ல பையனா காட்டியிருக்காங்க.. நடுவால ஜோ போன்ல கூப்பிட்டு, குழந்தை கூட பேசி.. ன்னு ஒரே சென்டிமென்டல் டச்..

மாதவனோட அம்மாவுக்கு ஜாதியை ஒரு குறியீடாகக் காட்டாம, பொதுவான ஒரு அம்மாவாக காட்டியிருக்கலாம். ஒரு இலங்கைத் தமிழ் குடும்பத்த நக்கல் அடிச்சுவிட்டிருக்காங்க.. ஒரு மலையாள ப்ரொட்யூசர காரியவாத முட்டாளா ஆக்கியிருக்காங்க.. இதெல்லாம் பிடிக்கல..

கேன்சர் வந்து சிகிச்சை எடுத்துகிட்டு இருக்கற குடும்பம் - நெகிழ்ச்சி.. அந்த வலிகளை நேரில் பார்ப்பது போன்று தத்ரூபமாக படம் பிடித்தது நன்று.. கீமோதெரபி வாந்திக்கு மருந்தெல்லாம் ஏதும் கொடுக்க மாட்டாங்களா? :))) அவரு ரமேஷ் அரவிந்தா? அடையாளமே தெரியலைங்க!

சில நொடி கவனக்குறைவுகளால நடக்கும் விபத்துகள், பல வருஷங்களுக்கான வாழ்க்கையை இழக்கச் செய்பவை.. அந்த வலியையும் நல்லா காட்டியிருக்காங்க.. அந்தப் பாடல் முழுக்கவும் ரிவர்ஸ்லயே காட்டியதும் புதுமை.. அருமை..

கமலுக்கும் த்ரிஷாவுக்கும் காதல் மலர்ந்தத சரியாகக் காட்டல..

த்ரிஷா க்யூட்.. ஜூலியட்டும் அழகு.. சங்கீதா கேரக்டர் - நமக்கு அவங்க மேல கடுப்பு வரச் செய்யறதுல சக்சஸ் ஆகிட்டாங்க..

"உன்னாலே உன்னாலே"ன்னு ஒரு படம் வந்தது, மூணு வருஷம் முன்னால.. அதுல சதா கேரக்டரும் கொஞ்சம் சந்தேகப்படற கேரக்டர் தான்.. ஆனா மத்தபடிக்கு நல்ல பொண்ணு..  அவங்க இயல்பு அப்படித் தான்னு தோனுச்சு.. அதுல ஹீரோ, சதாவோட இயல்பு இதுதான்னு தெரிஞ்சும், கொஞ்சம் கூட தன்னை மாத்திக்க முயற்சி பண்ண மாட்டார்.. தன்னோட குறும்புகளை குறைச்சுக்கவே மாட்டார்.. ஒவ்வொரு குறும்பும் சதாவோட சந்தேகத்த அதிகப்படுத்திட்டு போகும்.. கடைசியா சதாவே ரெண்டு பேருக்கும் ஒத்து வராதுன்னு பிரிஞ்சிடுவாங்க.. எனக்கு அந்தக் கேரக்டரை புரிஞ்சுக்க முடிந்தது.. அவங்க பிரியும் போது கொஞ்சம் கஷ்டமாகவும் இருந்தது..

இந்தப் படத்துல ரொம்பத் தெளிவாகவே மாதவனை வில்லனாகவும், த்ரிஷாவையும் கமலையும் ரொம்ப நல்லவங்களாகவும் பில்டப் பண்ணிட்டாங்க.. அதனால வேலை ரொம்ப ஈசியா முடிஞ்சிடுச்சு :))))) நான் கூட கொஞ்சம் சர்ச்சைக்குரிய படம்ன்னு எதிர்பார்ப்போட பார்த்தேன்.. சாதாரணமாகத் தான் இருக்கு.. மூணு விதமான ஜோடிகளைக் காட்டியிருக்காங்க.. சுதந்திரமான இணைகளா ஒன்னு, இக்கட்டான சூழ்நிலைல செலவு பண்ண கையில ஒத்தப்பைசா இல்லாட்டியும் பரிவோட கவனிச்சுக்கற உறவுகளாக ஒன்னு, சுயநலத்தோட ஒன்னுன்னு.. அவ்ளோ தான்..

கமல் ரசிகர்கள் யாரும் அடிக்க வந்துடாதீங்க.. தசாவதாரத்த விட இது எனக்கு ஓகே வா இருந்தது..

29 December 2010

அந்த நாள் முதல் இந்த நாள் வரை..


சங்கரிக்கு அன்று சந்தோஷமாக இருந்தது. அவளுடைய பள்ளியில் சங்கரியின் ஏதோவொரு அத்தைக்கு கல்யாணம் என்று சொல்லி ஒரு நாள் விடுமுறை வாங்கிவிட்டார் அப்பா. ரேவதியிடம் மட்டும் உண்மையான காரணத்தைச் சொல்லியிருந்தாள். அதைக் கேட்கும் போதே ரேவதிக்கு முகம் சுளிந்தது. தனக்கு அதெல்லாம் பிடிப்பதில்லை என்று சொன்னாள். பின்னர் வழக்கம் போல கதை பேச ஆரம்பித்து அதை மறந்து போனார்கள்.

சங்கரி அன்று பட்டுப் பாவாடையும் சட்டையும் அணிந்திருந்தாள். அவளது வீட்டிலிருந்து அம்மாவும் அத்தையும் பாட்டியும் கிளம்பினார்கள். பெரிய சணல் பைகளில் பாத்திரம், அரிசி, வத்திப்பட்டி, மற்றும் பூஜைக்கான சாமான்கள் ஏற்றப்பட்டிருந்தன. போகும் வழியில் இருந்த வீடுகளில் நின்று பேசி, இன்னும் கொஞ்சம் பேர் இணைந்தார்கள். வீடுகளைத் தாண்டியதும் வயல்கள். வயல்களின் இடையே சென்ற ஒத்தையடி மண் தடத்தில் நடந்தார்கள். முதலில் சென்ற பெண், "பாத்து வாங்க.. ஒரே முள்ளா கெடக்கு..." என்றவாறே குனிந்து சிறு முள் குச்சி ஒன்றை கையிலெடுத்து தூர வீசி எறிந்தார்.



மண் பாதை, வயல்களை விட்டுவிட்டு, சிறு குன்றின் மீது ஏறத் துவங்கியது. வழியின் இரு நெடுகிலும் அடர்ந்த புதர்கள் கேட்பாரற்று வளர்ந்து கிடந்தன. கற்களையும் முட்களையும் கவனமாகத் தவிர்த்து விட்டு முன்னேறினர். குன்றின் சமபரப்பை அடைந்ததும் சங்கரிக்கு உற்சாகம் கரைபுரண்டது. சுற்றிலும் வயக்காடுகள். குன்றின் கீழ்புறம், மிதமான சரிவுகளைக் கொண்ட அடுக்குப் பாறை. அதிலே சறுக்கியபடியே சென்றால், கீழே மேலும் வயல்கள். சுத்தமான காற்று சுற்றிலும் சூழ்ந்திருந்த பொன்னான பூமி அது. காற்றின் மெல்லிய ஒலியையும், மரஞ்செடிகளின் அசைவையும், மனிதர்களின் பேச்சு சத்தத்தையும் தவிர்த்து, இரைச்சல் ஏதுமற்று இருந்தது.

ஆண்கள் முன்னமே அங்கு வந்துவிட்டிருந்தார்கள். கொஞ்சம் பெண்களும். புதிதாக வந்தவர்கள், தங்கள் சுமைகளை இறக்கி வைத்துவிட்டு வேலைகளில் சுறுசுறுப்பானார்கள். மூன்று மூன்று கற்களாகக் கூட்டி, சிறு அடுப்புகள் மூட்டப்பட்டன. விறகுகளுக்கு தீயிட்டு, மேலே பாத்திரமிட்டு, பொங்கலுக்கான உலை ஆரம்பமானது. சங்கரி, தனது ஒரு வயது சித்தி மகனை இக்கத்தில் இடுக்கிக்கொண்டு, மீதிப் பொடுசுகளை மேய்க்க ஆரம்பித்தாள். வேட்டுகள் முழங்க ஆரம்பித்ததும் சிறு குழந்தைகள் அழுது அலற, அந்த ஒரு வயதுக்காரன் மட்டும் இளங்கன்றாய்ச் சிரித்தான்.

"வெங்காட்டு வேலப்பன எல்லாரும் நல்லா கும்பிட்டுக்கோங்க.." பூசாரி சூடமேந்திய தட்டை எடுத்து வந்தார்.

"தள்ளுங்க.. தள்ளுங்க.." என்ற குரல் கேட்டதும் கூட்டத்தில் சிறிய பரபரப்பு தொற்றியது. நகர்ந்து நின்றார்கள். சுற்றிலும் மனிதர்கள் தன்னையே உறுத்துப் பார்ப்பதைக் கண்டு எதையோ உணர்ந்த ஆடு மேற்கொண்டு நகர மறுக்க, விடாமல் அதனை உறுதியாக இழுத்து வந்தான் கணேசன். கணேசன் சங்கரிக்கு மாமன் முறை. ஆட்டின் மீது சிறிது நீர் தெளித்தான். ஆடு இம்முறை எதையும் உணராமல் துளிர்த்துக் கொண்டது.

வலது கை கொண்டு குழந்தையின் கண்களைப் பொத்திவிட்டு, இமைகளை இறுக்கிக் கொண்டாள். "ஆச்சு.. கொஞ்ச நேரந்தான்.." அவனைச் சமாதானப் படுத்தினாள். இடையே தனது ஒற்றைக் கண் இமைகளை மட்டும் சற்றே தளர விட்டு, பின் மீண்டும் இறுக்கிக் கொண்டாள்.

*************

தொலைபேசி அழைத்ததும் சங்கரி படுக்கையறைலிருந்து எழுந்து வந்தாள். மாலையாகி இருந்தது பொழுது. தான் வர இரவு இரண்டு மணி போலாகும், காத்திருக்க வேண்டாம் என்று தகவல் கொடுத்தான் அவள் கணவன். கணினிக்கு உயிர் கொடுத்து, இணையப் பக்கமொன்றைத் திறந்து வைத்தாள். தேநீர் தயாரித்து, ஒரு கோப்பையில் எடுத்துக் கொண்டு, வந்தமர்ந்தாள்.

?????????????

இருளுடன் ஊடுருவிக் கலந்து, ஒளி மெல்ல மெல்ல தன் பலத்தைக் கூட்டி வெல்ல ஆரம்பித்திருந்த அந்த விடியற்காலை பொழுதில், சுமார் ஒரு மணி நேரத்திற்குள்ளாக, சங்கரியின் குழு வாழ்க்கை முடிவுக்கு வந்து விட்டிருந்தது. அந்தக் குழுவின் சிறிய எளிய குடில்கள் யாவும் சின்னாபின்னமாக்கப்பட்டு சூறையாடப்பட்டுக் கிடந்தன. என்ன நேர்ந்தது என்று விளங்கும் முன்னரே, அநேக மக்கள், விளங்கிக்கொள்ளும் நிலையைத் தாண்டி, நிரந்தர இருள்வெளியை நோக்கி பயணிக்க ஆரம்பித்து விட்டனர்.

சங்கரியும், எஞ்சியிருந்த கொஞ்சம் குழு மக்களும், தடியான நீளமானதொரு  மூங்கில் குச்சியால் கட்டப்பட்டு நடத்திச் செல்லப்பட்டார்கள். சங்கரிக்கு அழுகையாக வந்தது. அடக்கிக் கொண்டாள். இதெல்லாம் கனவாக இருந்து விடக்கூடாதா என்ற நப்பாசை அவ்வப்போது எட்டிப் பார்த்தது. உடம்பிலே ஏற்பட்டிருந்த காயங்கள், அவை தந்த வலிகள், அந்த நப்பாசையை நிராகரதித்து விரட்டின.

ஏதோ ஒரு ஊருக்கு அவர்கள் கொண்டு வரப்பட்டனர். வழிநடத்தியவர்களும் மனிதர்கள் தாம்.  ஆனால் இறுகிய முகத்துடன் உணர்வுடன் இருந்தார்கள். தான் வாழ்ந்த வாழ்க்கையை, தம்முடன் வாழ்ந்த மனிதர்களை நினைத்து வருந்திக் கொண்டிருந்தவள், மெல்ல நடப்பு நிலைக்கு வந்து, சூழலை உள்வாங்கத் துவங்கினாள். இது என்ன ஊர்? யார் இவர்கள்? ஏன் நம்மைச் சிறை பிடித்து வந்திருக்கிறார்கள்? நாமென்ன தீங்கு செய்தோம் இவர்கட்கு? இனி நம்மை என்ன செய்வார்கள்? வழியெங்கும் சங்கரியின் மனதில் கேள்விகள் எழுந்த வண்ணம் இருந்தன. வேற்று மனிதர்களின் முகபாவங்கள், செய்கைகள் மிகுந்த அச்சுறுத்தலைத் தந்தன. இரு நெடுகிலும் வேற்று மனிதர்கள் பரவசத்துடன் ஆர்ப்பரித்தவாறு இருந்தார்கள்.

மெல்ல ஒவ்வொருவராய் பீடத்தில் ஏற்றப்பட்டார்கள். பூசாரி ஒருவர் உச்சாடனங்களை உரக்கச் சொல்லிக் கொண்டிருந்தார். அங்கும் ஒரு சிறு பெண் தன் கண்களை இறுக்க மூடிக் கொண்டிருந்தாள்.

?????????????

சங்கரி சட்டென்று கணினியில் இருந்து வெளியேறி வந்தாள். மனம் இன்னமும் நடுங்கிக்கொண்டு தான் இருந்தது. பாஸ்ட் பார்வர்ட் பொத்தானை அமுக்கியதும், நடுக்கம் சற்று அடங்கியது. எழுந்து சென்று கொஞ்சம் தண்ணீர் அருந்திவிட்டு வந்தாள். படுக்கையில் சாய்ந்தமர்ந்தாள்.

?????????????

ஊர் கூடுவது நன்று.
இறையைக் கும்பிடுவது அவரவர் விருப்பம்.
ஓர் உயிரின் உணவாக இன்னோர் உயிரைப் புசித்து வாழ்வது இயற்கை.
ஆனால்... இறையின் பெயரால் ஒரு உயிரை எடுப்பதை, ஆதி மனிதன் வேண்டுமானால் அறியாமையால் செய்திருக்கலாம். பகுத்தறியத் தெரிந்த இன்றைய மனிதனுக்கு அது அறிவல்ல அழகல்ல என்று தோன்றியது சங்கரிக்கு.

*****************

19 December 2010

சில்லென்று இரண்டு கற்பனைகள்..



இளம் மாலை நேரம்..
கதவுசார் நிலைக்கண்ணாடி..
ஜோடித்து முடிக்கும் தருவாயில் அவள்..


பின்புறமிருந்து வந்து
சற்றே குனிந்து
அவளது வலது தோளின் மீது
தன் தலை வைத்துப் பார்த்து,
தங்களது பொருத்தம் மெச்சினான் அவன்..


"சுடிதார் நல்லாயிருக்கு..
தோடும்.."
மேய்ந்து கொண்டிருந்த அவன் பார்வை
அவளது விழிகளில் ஒரு யுகநொடி தொலைந்து நின்றது..
பின் மீண்டு, சட்டென உயர்ந்து, எதையோ தேடியது..
"என்னமோ குறையுது..
ம்ம்.. பொட்டு எங்க? பொட்டு வை.."
"பொட்டு வச்சாத் தாண்டி உம்முகம் முழுமையா இருக்கு.."


ப்ச்.. உதடு பிதுக்கி வருத்தம் காண்பித்தாள்
"ஊர்ல இருந்து வாங்கி வர மறந்துட்டேன்.."


"அதானே பாத்தேன்..
இதெல்லாம் மறந்துடுவியே..
மாடல் அழகின்னு மனசுல நெனப்பு.."
கன்னத்தில் மென்முத்தம் பதித்து விலகியவனை
சட்டை பற்றித் திருப்பினாள்..
"உம் மீச எங்கடா?
மீச வச்சாத் தாண்டா ஆம்பிளைக்கு அழகு.."

பழிவாங்கிய களிப்பு அவள் முகத்தில் வழிய,
குறும்பும் புன்சிரிப்பும் மின்ன பதிலுரைத்தான் அவன்..
"ம்ம்.. நானும் மறந்து ஊர்லயே விட்டுட்டு வந்துட்டேன்.."


..................................................

வா நனையலாம்
மழை பிடிக்கும்

என்றேன் நான்..


சளி பிடிக்கும்
என்றாய் நீ..


நனைந்தவாறே.. ஓடினோம்..

இருவரும்..
இருவருக்கும்...

05 December 2010

பெண்.. மனம்.. பாட்டு..

//பெண் மனதை சொல்லும் பாட்டு


பெண்கள் மனசை வெளிபடுத்தும் பாட்டு, அதுவும் பெண் பாடிய பாட்டு, அதுவும் பெண் குரலிலேயே இருக்கிற பாட்டு//

இதை மஹி என்னை தொடர அழைத்திருக்கிறார்.. முதலில் அதற்கு ஒரு நன்றி.. எழுத விருப்பம் இருக்கும் தலைப்பு.. இந்த வரிகளை ஆசியா அவர்களின் பதிவில் இருந்து எடுத்துப் போட்டுள்ளேன்..

சில இயக்குனர்கள் தமது படங்களின் பெண் பாத்திரங்களை சரியாக உருவகப் படுத்துவதில்லை.. ஒன்று, த்ரிஷாவுக்கு பாவாடை தாவணி கட்டி பாந்தமான பெண்ணாக காட்ட முயற்சிப்பார்கள்.. இல்லை, ஸ்ரேயாவை அல்ட்ரா மாடர்ன்-அரை லூசு-அழகுப் பெண்ணாக வளைய விடுவார்கள் (நேற்று பார்த்த சிக்கு புக்கு என்ற படத்தை வைத்து சொல்கிறேன்.. அந்தப் பாத்திரம் செயற்கையாக இருந்தது.. ஜப் வீ மெட் படத்தின் கரீனாகபூர் பாத்திரத்தை கொண்டு வர முயற்சித்து தோல்வி கண்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.. ஜப் வீ மெட்டில் வரும் கரீனாவின் பாத்திரம் மிக நன்றாக இருக்கும்..).. அதுவும் இல்லையா, இருக்கவே இருக்கு ஈகோ பிடித்த பெண் :)) 

இதைத் தாண்டி சற்றேனும் பெண்களை இயல்பாக, நல்லவராகவோ இல்லை கெட்டவராகவோ, வெளிப்படுத்தும் படங்கள் உண்டு.. பெண்ணினது பாத்திரம் சரியாக வடிவமைக்கப்பட்டாலே எனக்கு அந்தப் படம் கொஞ்சமாவது பிடித்துப் போகும்.. கல்லூரி, பூ, அங்காடித் தெரு, வாரணம் ஆயிரம், பருத்தி வீரன், மொழி.. இப்படி..

சரி.. பாட்டுக்கு வருவோம்.. அந்தந்த பாத்திரம் (அடுப்பங்கரைப் பாத்திரம் இல்லீங்கோ :) ) பாடும் பாட்டு என்பதால் சில.. பாடல் இனிமையாக, பாடியிருக்கும் குரல் இனிமையாக இருப்பதால் சில.. பிடித்ததை பத்துக்குள் அடக்கி விட முடியாது.. நேற்று இரவு சட்டென நினைவுக்கு வந்தவை மட்டுமே இங்கு.. வரிசைப்படியும் தரவில்லை.. பெண்ணின் மனது இப்பாடல்களில் வெளிப்படுகிறது என்றெல்லாம் சொல்லிவிட முடியாது :) படங்களில் பாடலைப் பாடுபவர்கள் பெண் கதாப்பாத்திரங்கள்.. பாட்டு எனக்குப் பிடிக்கும்.. அவ்வளவே.. 

௧. பொதுவாக பெண்கள் தனது காதலை நேரடியாக வெளிப்படுத்த தயங்குவார்கள்.. இந்த நாட்டிலும் அப்படித் தான் என்று நினைக்கிறேன்.. ஆனால் அந்த வட்டத்தை தாண்டி, நான் உன்னை விரும்புகிறேன்.. உன்னை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்.. உன்னோடு வாழ விரும்புகிறேன்.. என்று மாயா தைரியமாக தனது காதலைச் சொல்கிறார்.. திருமணம் முடிந்து, தேனிலவுக்காக ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து, அங்கு அந்தப் பெண் பாடும் பாடல்.. தாமரையினது வரிகள்.. பாம்பே ஜெயஸ்ரீ குரல்.. 


இதில் வரும் "பெண்களை நிமிர்ந்தும் பார்த்திடா.. உன் இனிய கண்ணியம் பிடிக்குதே.." வரிகளின் மேல் எனது தோழியருக்கு விமர்சனங்கள் எழுந்ததுண்டு.. பெண்ணைப் பாத்திடவே விரும்பாதவன் கண்ணியமானவனா என்று :) ஆனால் அடுத்து வந்த "கண்களை நேராய் பார்த்து தான்.. நீ பேசும் தோரணை பிடிக்குதே.." என்ற வரிகள் பிடிக்கும்.. 

௨. ஒரு சைக்கோ கணவனை விவாகரத்து செய்து விட்டு வாழும் பெண்.. கொஞ்சம் நாள் கழித்து சகோதரனின் நண்பருடன் அறிமுகம் ஏற்பட்டு, கொஞ்சம் தயக்கத்துடன் பழகி.. பின் மெல்ல காதல் கனியும்.. இந்தச் சூழ்நிலையில் வரும் இந்தப் பாடல் அந்தப் பெண்ணின் மனதே பேசுவது போல இருக்கும்.. சத்தம் போடாதே எனும் இந்தப் படம் அவ்வளவாக வெற்றி பெறவில்லை.. பாடியவர் நேஹா பாஸின்.. 


௩. நண்பன்-நட்பு என்று நாயகி ஒருவனுடன் பழகுகிறார்.. அந்த ஆண் இவரை விரும்ப ஆரம்பிக்க, நாயகி இன்னொருவனைக் காதலிக்கிறார்.. முதலில் சொன்ன நண்பன் கொஞ்சம் சைக்கோ.. நாயகியை கடத்தி வந்து சிறை வைத்து விடுகிறார்.. இதை உணராத நாயகி நண்பன் சோகமாக இருப்பதைக் கண்டு ஒரு தோழியினது பரிவோடு பாடும் பாடல்.. (எனக்கு இந்தப் படம் அவ்வளவாகப் பிடிக்கவில்லை.. ஆனால் பாட்டு வரும் சூழ்நிலை அதன் இனிமை.. நன்றாகயிருக்கும்..) தான் செய்த தவறை உணர்ந்து அந்த நண்பன் அழுவான்.. பெண் குரல் யாருடையது என்று தெரியவில்லை.. யுவன் இசையில் இனிமையான பாடல்... 


௪. இந்தப் பெண் போல ஒரு தோழி கிடைத்தால் எவ்வளவு நல்லாயிருக்கும்? தோல்வியில் துவண்டு கொண்டிருக்கும் நண்பர்களுக்கு தம்மால் முடிந்த உதவிகள் செய்து அவர்களை ஒரு நிகழ்ச்சிக்கு அழைத்து அங்கு இவர் பாடும் இந்தப் பாடல்.. தெளிவான உறுதியான பெண்!! அந்த நண்பர்களுக்கு மட்டுமல்ல எனக்கும் சில நேரம் நல்லுணர்வு கொடுத்திருக்கும் பாடல்.. சித்ரா வின் இனிய குரலில்.. 


௫. ஒரு கலைஞனின் வாசகியாய், மேடையேறி, தான் கண்ட குறையைச் சொல்லும் பாடல்.. அந்தத் துணிவும் அவருக்கு தன் கருத்தில் இருக்கும் தெளிவும் பிடிக்கும்.. இசைக்கும் மொழிக்கும் கலைக்கும் வரம்புகள் இல்லை என்று தான் நானும் நினைப்பேன்.. ஆனால், கட்டமைக்கப்பட்ட ஒழுங்கினை மிக ஒட்டி இசையோ அல்லது மொழியோ வெளிப்படும் போது, அந்த ஒழுங்கைப் புரிந்து கொண்டவர்களுக்கு பரவசம் ஏற்படுவதும் உண்மை.. இலக்கணங்களுக் குட்பட்டு அழகுத் தமிழில் ஒரு கவிதை படித்தால் நன்றாகத் தான் இருக்கும்.. ஆனால் அது மட்டுந்தான் தமிழ் என்றால் ஏற்றுக் கொள்ள முடியாது தானே? மறுபடியும் சித்ராவின் குரலில்.. இது அவங்களோட முதல் பாட்டுன்னு நினைக்கறேன்..


௬. சில படத்துல ரெண்டு பொண்ணுங்களைக் காட்டினாலே ஒருத்தி நல்லவளாகவும் ஒருத்தி கெட்டவளாகவுந் தான் காமிப்பாங்க :) விதிவிலக்கா சில சமயம் ரெண்டு பேரையுமே வேறுபடுத்தி ஆனா நல்ல விதமா காட்டியிருப்பாங்க.. உதாரணத்துக்கு, பார்த்திபன் கனவு படத்தில் ரெண்டு சிநேஹா வருவாங்க.. ஒருத்தர் லட்சியப் பெண்.. இன்னொருத்தர் குடும்பத்தோட இருப்பதே போதும் ன்னு நினைப்பவர்..

இந்தப் படத்திலும் அப்படி ரெண்டு பேர்.. ஒருத்தர் நாயகனோட காதலி.. இன்னொருத்தர் மனைவி.. மனைவி, கணவனோட பழைய டைரிய படிச்சிட்டு, மொதல்ல கஷ்டப்பட்டு, பின்னர் அவன் ஒரு காலத்தில தன் காதலியை ரொம்ப விரும்பியிருக்கிறான்னு புரிஞ்சுகிட்டு, அந்தக் காதலிய தேடிக் கண்டுபிடிச்சு அழைத்து வருவாங்க..  "ஒரு நாள்னாலும் உன்கூட வாழ்ந்துட்டுப் போயிடனும்" ன்னு இருக்கும் டைரியில.. உன்னை மட்டுமில்ல, உன்னோட ஆசைகளையும் காதலிக்கிறேன்னு கணவன் கிட்ட சொல்லிட்டு இவங்க ரெண்டு பேரையும் தனியா விட்டுட்டு மனைவி கிளம்பிப் போயிடுவாங்க (பாதி மனசோட தான் :))) ).. காதலியோ, என் பொருள் இன்னொரு இடத்துல இருந்தாலும் பத்திரமா இருக்குன்னு சந்தோஷப்படறேன் ன்னு சொல்லிட்டு கிளம்பிடுவாங்க..

ப்ளாஷ் பேக்ல, கல்லூரியில, நாயகன் தன் காதலியோட பாடற இந்தப் பாட்டு பிடிக்கும்..  பாடகி? இனிய உணர்வுப்பூர்வமான குரலுக்குச் சொந்தக்காரரான ஸ்ரேயா கோஷல்.. பாட்டுல நாயகி முகத்துல தெரியற சந்தோசத்தை, பரவசத்தை, காதலைப் பாருங்க.. கூடவே நாயகனோட குறும்பும்.. இவங்க ரெண்டு பேரும் சேர்ந்திருந்தா ரொம்ப நல்லாயிருந்திருக்கும்ன்னு நினைக்க வைச்ச பாடல்..


௭. தத்துப் பெண்ணோட, அம்மா பாடற பாடல்.. சிம்ரனும் குழந்தையும் ரொம்ப நல்லாப் பண்ணியிருப்பாங்க.. சின்மயி யின் குரலில் பாட்டு.. உண்மையில இதை விட அப்பா பாடற பாடல் (இதே, ஆண் குரலில்) பிடிக்கும்.. இசை ரொம்ப நல்லாயிருக்கும்..

செல்ல மழையும் நீ.. சின்ன இடியும் நீ..

௮. ஜெஸ்ஸி யின் இனிமையான குரல்.. இவங்களோட பேட்டி கொஞ்சம் வருஷத்துக்கு முன்னாடி தான் படிச்சேன்.. ரொம்ப நல்லா வந்திருக்க வேண்டியவங்க.. கொஞ்சம் படங்களோட காணாம போயிட்டாங்க.. ம்ம்.. தெய்வீக ராகம்.. தெவிட்டாத பாடல்.. கேட்டிருக்கீங்க தானே? பாடியவர் அவரே..

இப்ப நான் சொல்லப் போற படத்துல நாயகி ஒரு பாடகி.. அவங்க பாடற பாடல் தான் இது.. ஒரு பாடகியா இசையை ரசிச்சுப் பாடியிருப்பாங்க..

ஒரு இனிய மனது இசையை அணைத்துச் செல்லும்..

௯. ஹரிணியின் குரலுக்காக இந்தப் பாட்டு.. இது கொஞ்சமாவது பெண் மனசைச் சொல்லுதோ இல்லையோ.. அந்த ஐஸ்கிரீம் குரலுக்காக கேட்கலாம் :)

நிலா காய்கிறது..

௰. புலியை முறத்தால் விரட்டின மூத்த குடியில் வந்த இளம் குடிகள் தானே நாமெல்லாம்??!! :))) மேலும், பெண் என்றாலே இள நடுத்தர வயதுப் பெண்கள் மட்டுந்தானா? பாட்டி எல்லாம் பாடப்படாதா? தனது பேராண்டியின் வீரத்தைப் போற்றி, தனது பெருமிதத்தை வெளிப்படுத்தி, ஒரு பாட்டி "போர்க்களத்திலே" ஆடிப் பாடும் இந்தப் பாடல் ரொம்பவே புடிக்குமுங்கோ!! :))



19 November 2010

Living separate after marriage..

இது நல்லதா நல்லதில்லையா.. தேவையா தேவையில்லையா.. ஒத்து வருமா வராதா.. நன்மை அதிகமா.. பக்க விளைவு அதிகமா.. பின் விளைவு அதிகமா.. ரிஸ்க் பெனிபிட் ரேஷியோ என்ன...

அறிஞர் பெருமக்கள் பல பேரு பலவாறாகப் பேசுவது கண்டு, அது பற்றி ஆராய்ச்சி செய்யலாம் என்று, நெட்டில் விஷயங்களைத்  தேடியலைந்து கொண்டிருந்த கண்ணம்மாவின் லேப்டாப்பில், கிட்டத்தட்ட ஐம்பது வலைப்பக்கங்கள் திறந்து கிடந்தன.. அருகில் ஒரு கிழிந்திருக்காத (அதுவரை) காகிதமும், உடைந்திருக்காத  (இதுவும் அதுவரை) பேனாவும்..

ஒரு முடிவுக்கும் வர முடியாமல் மண்டையைப் பிய்த்துக் கொண்டிருந்த கண்ணம்மா, அதற்கு மேல் பிய்ப்பதற்கு ஏதும் மிச்சமில்லை என்ற நிலை வந்ததும், லேப்டாப்பை அணைத்து விட்டு, தூங்கலாம் என்று ஒரு இறுதி முடிவெடுத்தாள்.

இரண்டு மணி நேரமாகப் படுக்கையில் புரண்டு கொண்டு தூங்க முயற்சித்தாலும் தூக்கம் வர மறுத்தது.. எப்படியோ அதனுடன் போராடி அவள் தூங்க ஆரம்பிக்கும் பொழுது, புதிதாக நூறு பேர், விஷயத்தின் சார்பாகவும் எதிராகவும், போர்க்கொடி ஏந்தி களம் இறங்கியிருந்தனர்.. நல்ல வேளை, அவர்கள் இறங்கிய சத்தம் அவளது காதுகளுக்கு எட்டவில்லை..

நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்த போது தான் அந்தக் கனவு வந்தது அவளுக்கு..

முகம் நிறைய ஏக்கங்களுடன் பலர் அவள் முன்னே நின்று கொண்டிருக்கின்றனர்.. எங்களுக்காக யாரும் பேச மாட்டீர்களா என்று இறைஞ்சிக் கொண்டிருக்கின்றனர்.. ஆனால் யாரும் அவர்களைச் செவிமடுத்ததாகவே தெரியவில்லை.. தத்தம் போக்கில் சென்று கொண்டிருக்கின்றனர்.. அந்த வழியாக வந்த கண்ணம்மா நிற்கிறாள்.. பார்க்கிறாள்.. அவர்களை நோக்கிப் போகிறாள்.. அவர்களுடன் பேசுகிறாள்.. இனி தன் வாழ்வு முழுவதும் அவர்களுக்காகவே அர்ப்பணிப்போம் என்று முடிவு செய்கிறாள்..

யார் அவர்கள்? அவர்கள் அப்பாவிகள்.. ஒரு பாவமும் செய்திடாதவர்கள்.. ஒரு புள்ளியில் ஆரம்பித்த அவர்களது வாழ்க்கையை, காலமெனும் பெயர் கொண்ட ஏதோவொன்று, கோலம் போடுகிறேன் பேர்வழியென்று, சுற்றிச் சுழற்றி சூறாவளியாக்கி, தனக்குப் பிடித்த மாதிரி வரைந்து கொண்டிருந்தது..

அவர்களுடன் பேசி, அவர்களது வலியினை அறிந்து, அதனைப் போக்குவதற்குண்டான மருந்தினைத் தருவதே தமது முதற்பணி என்று நினைக்கும் கண்ணம்மாவின் கைகளில், உடனே தோன்றுகின்றன, ஒரு மைக்கும் ஒரு ஓட்டை டேப் ரிக்கார்டரும்.. உடனே ஆரம்பிக்கிறாள்..

முதல் தம்பதி..  திரு மற்றும் திருமதி குமரன்..

என்ன தான் மறக்க நினைத்து தூங்கியிருந்தாலும், அவளது கனவிலும் அந்தக் கேள்வியே முதலில் வந்து விழுந்து தொலைக்கிறது.. "நீங்க இந்த Living together before marriage, followed by living together with or without marriage பத்தி என்ன நினைக்கறீங்க?"

"ஐயோ மேடம்.. வெந்த புண்ணுல வேலைப் பாய்ச்சினாப்ல இப்படிக் கேக்கறீங்களே.." கண்ணில் நீர் தளும்புகிறது குமரனுக்கு..

"ஓ.. மன்னிக்கணும்.." சட்டெனச் சுதாரித்து உடனே கேள்வியை மாத்திப் போட்டாள்.. "நீங்க ஏன் Living separate after marriage"?

"அதையேன் மேடம் கேட்கறீங்க?  ஆசைப்பட்டு கட்டிகிட்டோம் மேடம்.. விதி அமெரிக்கா ரூபத்துல வந்துடுச்சு.. முதல்ல கொஞ்ச நாள் இங்க வீட்டுல அழுதுகிட்டு கெடந்தா..  அப்புறம் வேலைக்குப் போயே ஆவனும்ன்னு கட்டை விரல்ல நின்னா.. ரெண்டு பேருக்கும் ஒரே இடத்துல வேலை கிடைக்கல.. அதான்... ஒரே இடத்துல கிடைக்கற வரைக்கும், இப்படி பக்கதூருல வேலை.. வெள்ளிக்கிழமையானா பொறுப்பா இவ வீட்டுக்கு வந்துடறேன்.. ஆனாலும் கஷ்டமா இருக்கு.. வேலை முடிஞ்சு வீடு வந்தா சண்டை போடக் கூட ஆளில்ல.. வாரக்கடைசியில லொங்கு லொங்குன்னு வண்டி ஓட்டி வர்றேன்.. ஒரு வாரமா போட வேண்டிய சண்டையெல்லாம் ரெண்டே நாளுல போட வேண்டியிருக்குது மேடம்.. எங்க கஷ்டம் எங்களுக்குத் தான் புரியும்.."

அடுத்த தம்பதி.. மிஸ்டர் அண்ட் மிசஸ் மாடச்சாமி.. இவர்கள் இருவரும் அமெரிக்கர்கள் என்பதால், ஆங்கிலத்துலயே உரையாடல்..

"He is my best buddy.. We are married for so many years.. We lived in Alaska for a long time.. But due to economic situations, he had to move out for a better place to work.. I joined him for 6 months initially.. But our son could not like the new place.. He was missing his school, his friends, and was feeling very sad..  So finally I decided to move back to Alaska with my son, and be with him till he finishes his school, while leaving my husband in the new job.. He comes here by flight every weekend.. But still.. I miss him a lot.. I grow some tomato plants at home and I talk to them every evening after I return home from work.. They grew not with water, but with my tears.."

உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்குகிறார் மிசஸ் மாடசாமி.. ஒரு டிஷ்யூ எடுத்துக்  கொடுத்துவிட்டு அடுத்த தம்பதியிடம் நகர்கிறார் கண்ணம்மா..

மூன்றாவது தம்பதி.. திரு உசிலைமணி மற்றும் திருமதி உசிலைமணி..

"மேடம்.. இன்னா மேடம் செய்ய.. இந்தாளு இந்தக் குறட்டை விடுறாரே.. நானும் முதல்ல காதுல பஞ்சு வச்சு தூங்கிப் பாத்தேன்.. வேலைக்காவுல... பக்கத்து ரூம்ல தூங்கிப் பாத்தேன்.. முடியல்ல... அப்புறம் மேல் மாடியில தூங்கிப் பாத்தேன்.. படுக்கையெல்லாம் ஒரே அதிர்வா இருக்குது.. தெருவுல இருக்கரவுங்க கூட காலி பண்ணிட்டு போயிட்டாங்க மேடம்.. அதான்.. நானும் ரெண்டு தெரு தள்ளி தனியா வீடு எடுத்துட்டு இங்க வேலையெல்லாம் முடிஞ்சதும் அந்த வீட்டுக்கு ஓடிப் போயிடறேன் தூங்கறதுக்கு.."

"ஹாவ்.. எனக்கு தூக்கமா வருது.." திரு உசிலைமணியின் கொட்டாவி கொடுத்த புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து விலகி வந்தாள் கண்ணம்மா..

அடுத்து திரு குழந்தையப்பன் தம்பதி..

"நானு எங்கப்பா வாங்குன கடனைக் கட்ட, அதுக்கப்புறம் வீடு கட்ட அப்படின்னு துபாய்க்கு வந்து வேல பண்ணி சம்பாதிக்கறேன்.. எம் பொண்டாட்டிக்கு விசா கிடைக்கல.. குழந்த குட்டிகளோட வீட்டுல இருக்கா மேடம்.. ஒரு கம்ப்யூட்டர வாங்கிக் கொடுத்துட்டு வந்துட்டேன் நானும்.. தெனமும் ஸ்கைப்புல பாத்துக்கறோம்.. வருஷமொருக்கா வீட்டுக்குப் போறேன்.."

அடுத்து திரு அண்ட் திருமதி கிஷோர்..

"இவளுக்கு ஹெச் 1 விசா கிடைச்சிருந்தது மேடம்.. ஒரு மாசம் ஆகியிருக்கும்.. ஆறு மாசம் ஆன் சைட் வேல இருக்குன்னு, கம்பெனில கிளம்பச் சொல்லிட்டாங்க.. என்னையும் புள்ளையையும் விட்டுட்டு இப்ப ஒக்லஹோமால வாசம்.. முதல்ல ஆறு மாசம்னாங்க.. அப்புறம் ஆறேகால்.. அப்புறம் ஆறரை.. அப்புறம் திடீர்ன்னு எட்டு.. இப்போதைக்கு எட்டே முக்கால்ல நிக்குது.."

அடுத்து திரு அண்ட் திருமதி செல்வா..

"படிப்புக்காக பிரிஞ்சிருக்கிறோம் மேடம்.."

அடுத்து திரு அண்ட் திருமதி கண்ணன்..

அடுத்து திரு அண்ட் திருமதி ஜான்சன்..

அடுத்து திரு அண்ட் திருமதி குப்புச்சாமி..

அடுத்து திரு அண்ட் திருமதி பூவாத்தா..

க்யூ தொடர்ந்து கொண்டே இருக்க, மயக்கமே வந்து விட்டது கண்ணம்மாவுக்கு.. அங்கே மயங்கி விழுகையில், இங்கே வியர்த்து முழித்திருந்தாள்..

பிறகென்ன.. மறுபடியும் தூங்கி.. கனவு கண்டு.. முழிச்சு.. காலையில ஆபிஸ்க்கு லேட்டாப் போயி, பாஸ் கண்ணுல படாம எப்பிடியோ எஸ்கேப் ஆயிட்டா..



JUST FOR FUN MAKKALS.. NOTHING SERIOUS.. பெரும்பாலும் நான் கேள்விப்பட்ட பார்த்த மனிதர்களைக் கொண்டே எழுதியிருக்கிறேன்.. THANKS FOR UNDERSTANDING..

16 November 2010

குடிக்கறவங்களெல்லாம் கெட்டவங்களா?

குடி நல்ல பழக்கமா? இல்ல..

அளவு மீறிப் போனா புத்தி மாறுமா? ஆமாம்

அளவு மீறிப் போனா குற்றம் செய்யத் தூண்டி விடுமா? அப்படித் தான் நினைக்கறேன்..

உடம்புக்கு உகந்ததா? இல்ல.. ஆனா விதிவிலக்கு இருக்கலாம்.. 

உடம்புக்கு என்ன ஆவும்? அல்சர்ல இருந்து கல்லீரல் புத்துநோய் வரைக்கும் வரலாம்..

குடி அடிக்ட் பண்ணுமா? ஆமாம்

எல்லாரையும் அடிக்ட் பண்ணுமா? இல்ல..

குறிப்பிட்டு இவங்களைத் தான் செய்யும், இவங்களைச் செய்யாதுன்னு சொல்ல முடியாது.. ஆனா, கொஞ்சம் பேருக்கு இயல்பாவே எதுக்கும் அடிமையாகிடும் பழக்கம் இருக்கு.. அவங்க அடிக்ட் ஆகறது எளிது.. இப்ப, நானே வீட்டு வேலைய கொஞ்சம் தள்ளி வச்சுட்டு ப்ளாக் எழுத உட்கார்ந்திருக்கேன்.. வேலைய முடிச்சிட்டு எழுதலாம்னா, இல்ல எழுதிட்டு செய்யலாம்ன்னு மனசு சொல்லுது.. அதே, பக்கத்து வீட்டு ருக்மணி, வேலைய எல்லாம் செஞ்சு முடிச்சிட்டு சும்மா இருக்கற நேரத்துல மட்டும் தான் ப்ளாக் பக்கம் வருவா..

குடிக்கறவங்க எல்லாரும் குடிகாரங்க ஆயிடுவாங்களா? மேல சொன்னதே தான்.. யாரும் குடிகாரர் ஆகணும்ன்னு விரும்பி குடிக்க ஆரம்பிக்கறதில்ல.. ஆனா குடிக்காம இருக்கறவன விட குடிக்க ஆரம்பிச்சிட்டவனுக்கு குடிகாரர் ஆகறதுக்கான ரிஸ்க் கண்டிப்பா அதிகம் :)

குடும்பத்துக்கு உகந்ததா? இதுவும் ஒருத்தருக்கொருத்தர் வேறுபடும். கட்டுப்பாட்டுல உறுதியா இருக்கறவங்க குடும்பத்துக்கு பாதிப்பு இல்ல.. தனது விருப்பங்களை கட்டுப்படுத்திக்கத் தெரியாதவனோட குடும்பம் நாசம் தான்..

குடிச்சிட்டு காரோட்டறது நல்லதா? கண்டிப்பா இல்ல.. குடியால வரக் கூடிய போதை ஆளாளுக்கு வேறுபடும்.. ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல ரத்தத்துல அல்கஹால் அளவு இருந்தா வண்டி ஓட்டி வரக் கூடாதுன்னு சட்டமே இருக்கு.. கைது, லைசென்ஸ் ரத்து, பைன், ஜெயிலு எல்லாம் உண்டு..

எதிரில் வரும் வாகனத்தின் வேகத்தை சட்டென அனுமானித்து தனது வாகனத்தை கண்ட்ரோல் செய்யும் நேரம் அதிகமாகும்.. அதிகமா குடிச்சிட்டு வீடு திரும்பறதா இருந்தா குடிக்காத ஒருத்தரை ஓட்டச் சொல்லி திரும்பி வரலாம்..

நீ குடிப்பியா? ச்சே.. கருமம்..

உன் தம்பி குடிச்சா ஒத்துப்பியா? அவனுக்கு வேலை கிடைச்சப்பவே சொன்னேன், பாத்து சூதானமா இருந்துக்கப்பான்னு..

நம்ம நாட்டுல இவ்வளவு மக்கள் ஏழ்மையில இருக்கும் போது, டாஸ்மாக் ரொம்ப அவசியமா? இதுக்கு எனக்கு தெளிவான பதில் சொல்லத் தெரியல.. ஆனா அவசியம்ன்னு நினைக்கல

குடிக்கறவங்களெல்லாம் கெட்டவங்களா? இல்ல..

உன் ஆபிசுல பக்கத்து டேபிள்ல வேல பண்ற குமாரு குடிப்பான் தானே? அப்பப்ப குடிப்பான்.. ஆனா குடிச்சிட்டு யாருக்கும் எந்தப் பிரச்சனையும் கொடுத்ததில்ல.. நேரங்காலமா வேலையை செஞ்சு முடிச்சடறான்.. எங்க கிட்ட மரியாதையா நடந்துக்கறான்.. அது அவன் விருப்பம்ன்னு விட்டுடறேன்..

அவன் உனக்கு நண்பன் தான? உடம்பு கெட்டுப் போயிரும்ன்னு எடுத்துச் சொல்ல மாட்டியா? அது அவனுக்குத் தெரியாதா? அதுவுமில்லாம அவனுக்கு உபதேசம் பண்ண என் உடம்ப நான் முதல்ல ஒழுங்கா வச்சிருக்கறனா? எண்ணையும் வெண்ணையுமா திங்கறேன்.. உடற் பயிற்சி எதுவும் பண்றதில்ல.. நான் எப்படி அவனுக்குச் சொல்ல? அப்புறம், பதிலுக்கு அவன் என்னைப் பாத்து, "நீ தெனமும் ரெண்டு தடவ நல்லா ஸ்ட்ராங்கா காப்பி குடிக்கற, குடிக்கலைன்னா தலை வலிக்க ஆரம்பிச்சுடுதுன்னு சொல்லற.. நீயும் காப்பி அடிக்ட் தான்.. காப்பி குடிச்சா இதயத்துக்கு கெடுதல்" அப்படின்னு பேச ஆரம்பிச்சுட்டா?

அப்ப அளவோட குடிச்சா தப்பில்லங்கற? அது குமாரோட விருப்பம்.. அரசாங்கமே மது விற்பனைய அனுமதிக்கும் போது நான் எப்படி தடை சொல்ல?

குடிக்கறதப் பத்தி உங்கம்மா என்ன சொல்லிருக்காங்க? குடிக்கறவன் எல்லாம் கெட்டவன்னு சொல்லி வளர்த்துனாங்க..

நீ அது உண்மைன்னு ஒத்துக்கறியா? அது தம்பிக்கும் எனக்கும் மனசுல அழுத்தமா பதியறதுக்காக அப்படிச் சொன்னது.. காரணமில்லாம இல்ல.. ஊருல ரெண்டு மூணு பேரு குடிச்சுக் குடிச்சே குடல் வெந்து போயிச் சேந்துட்டாங்க..

ஆனா, நான் செய்யாத, செய்ய விரும்பாத ஒரு விஷயத்த இன்னொருத்தர் செய்யறதாலயே அவரைக் கெட்டவர்னு சொல்ல விரும்பல. என்னைப் பொறுத்தவரைக்கும் அது ஒரு பழக்கம்.. அதை வச்சே ஒருத்தன முழுசா எடை போடக் கூடாது.. இன்னைக்கு நான் ஏறுன ரயிலுல வாழ்க்கைல ஒரு வாட்டி கூடக் குடிக்காதவங்கள விரல் விட்டு எண்ணிடலாம். ஆனா யாரும் எம்மேல வந்து உரசல.. தப்பான பார்வை பார்க்கல.. எனக்கு அது தான் முக்கியம்..

ஆனா அதுவே குடிச்சிட்டு போதைல வம்பு பண்ணுனா, வண்டி ஓட்டுனா கண்டிப்பா தப்பு..
ஒரு கொள்கைக்காக குடிக்கவே வேண்டாம்ன்னு நினைச்சிருக்கற ஒருத்தனுக்கு ஜூஸ் ல அவனுக்கே தெரியாம வீம்புக்குன்னு கலக்கிக் கொடுத்து குடிக்க வச்சா தப்பு..
குடிப்பழக்கத்தோட பின் விளைவுகளைப் பத்தி சரியாத் தெரியாதவனுக்கு பழக்கி விட்டா தப்பு..
அதென்ன இவன் மட்டும் குடிக்க மாட்டேன்றான்னு வயித்தெரிச்சல்ல மெண்டல் ப்ரெஷர் கொடுத்து குடிக்க வச்சா தப்பு..
குடிக்காதவனெல்லாம் ஆம்பளையே இல்லன்னு பேசிட்டு சுத்துனா அதுவும் தப்பு..
வெவரந் தெரியாத பத்து வயசுப் பையனுக்கு ஊத்திக் கொடுத்தா தப்பு..

குடியைப் பற்றின கருத்துகள் நாட்டுக்கு நாடு வேறுபடுமா? ஆமாம்.. 

குடிக்காதவங்க எல்லாரும் நல்லவங்களா? எதிர் டேபிள் வைஷு குடிக்கறதில்ல தான்.. ஆனா, வேலையெல்லாம் நைசா மத்தவங்க தலையில கட்டிடறா.. மத்தவங்களப் பத்தி இல்லாத புரளி பேசிட்டு சுத்தறா.. அதை என்னன்னு சொல்ல?

அப்ப நீ குடிய சரியான விஷயம் தான்னு ஆமோதிக்கற? அப்படி நான் சொன்னனா? மறுபடியும் படிங்க மேல இருந்து..

நீ உனக்கானமட்டில் என்ன நினைக்கற? என்னைப் பொருத்தவரைக்கும் எனக்கு அது தேவையில்லாத பழக்கம்.. அப்புறம், மனசுல ஆழமா தப்புன்னு பதிஞ்சிருக்கறதால என்னால அப்படிச் செய்ய முடியாது..

மேல சொன்னதெல்லாம் "குடி" யப் பத்தி இன்னைக்கு எனக்கு இருக்கற புரிதல் மற்றும் கருத்துகள்.. நாளைக்கு மாறலாம்.. இதுல நான் சொல்லியிருக்கறது தவறாகயிருந்தா இல்லை யாருக்கும் தவறாகப்பட்டா, மன்னிக்கனும்.. எதிர் கருத்து இருக்கறவங்க கண்டிப்பா பின்னூட்டம் போடணும்.. பேசலாம்.. விவாதம் நன்று.. விதண்டாவாதம் வேண்டாம்.. நன்றி.. 

12 November 2010

ஓர் எல்போர்ட் வண்டியோட்டுகிறது.. 2

முதல் பாகம் படிச்சு அசந்து (தூங்கிப்) போன எல்லாரையும் எழுப்ப, ஹாரன்.. ஹாங்.. ஹாங்.. ஹாங்..

எப்பிடியோ அடிச்சுப்பிடிச்சு, ஒரு learners permit வாங்கி, வண்டிக்கு வெளிய ஒரு எல் போர்ட மாட்டிட்டு, வண்டி ஓட்டப் பழகியாச்சு.. அடுத்தது, லைசென்ஸ்.. இங்க நம்ம ஊரு மாதிரி இல்ல.. அதுவும் நான் வசிக்கும் மாநிலம் இதற்கான பரிட்சைகள்ல கண்டிப்புக்குப் பெயர் போனது.. காரணம், நம்ம ஊர்ல இரண்டு சக்கர வாகனங்கள் மாதிரி, இங்க கார்கள் தான் முக்கியமான தரை வழிப் போக்குவரத்து.. பைக், சைக்கிள் - இதெல்லாம் இங்க ரொம்பவும் குறைவு.. அது மட்டுமில்லாம, இங்க சாலையில் கார்கள் போகும் வேகமும் மிக அதிகம்.. சாலை விதிகளுக்கு மிக முக்கியத்துவம் கொடுக்கும் நாடு இது.. எல்லாரும் விதிகளைப் பின்பற்றி ஓட்டிச் செல்லும் போது, ஒருத்தர் தவறு செய்தா, மற்றவருக்கு ஏற்படும் பாதிப்பு ரொம்பவே அதிகம்.. ஒரு நபருக்கு லைசென்ஸ் கொடுக்கும் போதே அவரது திறனை நன்றாகப் பரிசோதனை செய்து தான் கொடுக்கறாங்க.. அப்பிடியும், குடி, மித மிஞ்சிய வேகம், கவனக்குறைவு மற்றும் இன்னும் பிற காரணங்களால விபத்து நடந்துட்டுத் தான் இருக்குது.. :((

லைசென்ஸ் பரிட்சைக்கு ஆதிரேயனே தேதி எடுத்துக் கொடுத்துட்டார்.. அதுலயும், நாங்க விவரமா, எளிதான சாலைகள் இருக்கும் பகுதியில நடக்கற மாதிரி வேணும்ன்னு கேட்டிருந்தோம்.. பரிட்சை அன்னைக்கு, நானும் ஆதியும் கிளம்பிப் போனோம்.. பரிட்சைக்கு முன்னாடி, பக்கத்துல ஒரு இடத்துல, ஒரு மணி நேரம் கூடுதல் பயிற்சி வேற.. ஆதி கூட வந்தது, மன ரீதியா நல்ல தெம்பா இருந்தது..

கிட்டத்தட்ட ஒரு மாசத்துக்கு மேல பயிற்சி எடுத்திருந்தாலும், மனசளவில, எனக்கு என்னமோ நம்பிக்கை குறைச்சலாவே இருந்தது.. அதுக்கு பல பல காரணங்கள்.. எதைச் சொல்ல எதை விட.. ஆனா, வாங்கியே ஆகணும்ன்ற கட்டாயம் இருந்தது.. ஏன்னா, அடுத்த ரெண்டு மாசத்துல என்னோட வேலை/கல்வி தொடங்கறதா இருந்தது.. வண்டி இல்லாட்டி கஷ்டமாப் போயிடும்..

இங்க பரீட்சைக்குன்னு தனி மைதானம் இல்ல.. எல்லாரும் உபயோகிக்கும் சாலை தான்.. பத்து-பதினைந்து நிமிஷம் தான் சோதனை நடக்கும்.. அதுக்குள்ள அவங்க சொல்ற மாதிரி நிறுத்தி, திருப்பி, சரியா ஓட்டிக் காமிக்கணும்.. ஒரே நாளைல நிறைய பேர் பரீட்சை எடுக்கறதால, பரிசோதகர்களும் சட்டுன்னு முடிவு பண்ணிடுவாங்க..  என்னோட முறை வந்தது.. என்னைப் பரிசோதிக்க வந்த அம்மா, வண்டியில ஏறும் போதே உர்ருன்னு இருந்தாங்க.. வண்டிய எடுத்தவுடனே முதல் குட்டு விழுந்தது.. வேகமாப் போ, பின்னாடி வர்ற வண்டிகளுக்கு இடைஞ்சலா இருக்கேன்னு.. அதுக்கப்புறம் அவங்க சொன்ன மாதிரி சரியாகத் தான் செஞ்சேன்.. ஆனா அவங்களோட ஆட்டிட்யூட் என்னை உதற வச்சிட்டே இருந்தது.. ஒவ்வொரு கட்டளைக்கும் உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் தான்.. கடைசியா, parallel parking.. இதை ஆதி மற்றும் ஆதிரேயன் கூட நல்லாத் தான் பழகியிருந்தேன்.. ஆனா, அந்த இடத்துல, பதற்றத்துல தப்பா செய்துட்டேன்.. உடனே தலைய இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் ஆட்டி, முகத்த சுளிச்சு, உதட்டப் பிதுக்கி (மறுபடியும், ஆட்டிட்யூட்), நீ தேறாத கேஸ் அப்பிடின்னு சொல்லாம சொல்லிக் காமிச்சாங்க..

எனக்காக ஆதி காத்திருந்தார் - என்ன பாஸா ன்னு சந்தோஷமான முகத்தோட.. அவரப் பாத்ததும் தான் கண் கலங்க ஆரம்பிச்சது.. தேறாம போனதுக்காக இல்ல.. நீயெல்லாம் தேறவே மாட்டே அப்பிடின்னு அந்தம்மா சொன்ன மாதிரி இருந்தது.. எம் முகத்தைப் பாத்துட்டு ஒண்ணும் சொல்லாம வண்டியைக் கிளப்பினார் ஆதி.. என்னால கட்டுப்படுத்தவே முடியல.. கண்ணுல இருந்து கொட்டுது.. அவரும் பாத்துட்டு, என்ன ஏதுன்னு கேக்காம, ஒரு டிஷ்யூ மட்டும் எடுத்துக் கொடுத்தார்... துடைச்சிட்டு, ரங்ஸ் க்கு போனப் போட்டு, மறுபடியும், ஹிஹி.. இப்ப நினைச்சா சிப்பு சிப்பா வருது.. :))

திரும்பிப் போகும் போது, ஆதி தன்னோட மனைவியோட கதையச் சொன்னார்.. அவங்களுக்கு சின்ன வயசுல ஏற்பட்ட ஒரு விபத்து மனசுல ஆழமா பதிஞ்சிருந்ததால ஓட்ட முடியாம சிரமப்பட்டதச் சொன்னார்.. அப்பத் தான் நானும் வாயத் திறந்து என்னோட கஷ்டங்களைச் சொன்னேன்.. அதை அவர் புரிஞ்சுகிட்டதே அந்த நேரத்துக்கு மிகப் பெரிய ஆறுதலா இருந்தது..

........................................  Intermission ......................................

அடுத்த பரீட்சைக்கு தேதி உடனடியா கிடைக்காததால, ரயில்வே ஸ்டேஷனுக்கு எதிராவே வீடு எடுத்துட்டோம்.. எல்போர்டுக்கு கண்டபடி ரோஷம் வந்துடுச்சு.. அதனால சுமார் ஆறேழு மாசம் மாதிரி, வண்டிய ஒரு வாட்டி கூட ஓட்டிப் பாக்கல.. ஒரு வழியா சமாதானம் ஆகி, ஒரு கிறிஸ்மஸ் விடுமுறைல (ஒரு வாரம் கிடைத்தது) தேதி எடுக்கச் சொல்லி, ரங்ஸ் கிட்டச் சொல்லியிருந்தேன்.. விடுமுறைக்கு முன்னால வேற ஊர்ல இருந்து வந்து, ஓட்டிப் பழகனும்.. நான் சனிக்கிழமை மாதிரி வந்து இறங்கி, வியாழக்கிழமை மாதிரி பரிட்சைக்கு தேதி எடுத்தா, அஞ்சு நாளு இருக்கும் நடுவுல, மறுபடியும் பழகிக்கலாம்ன்னு யோசிச்சு வச்சிருந்தேன்.. ரங்ஸ் போன் பண்ணி, திங்கக் கிழமை தான் தேதி கிடைச்சது, எடுத்துட்டேன்னார்.. அவ்வ்வ்வ்வ்வ்வ்.. மறுபடியும் கொட்டுது.. எதுக்கா? எனக்கெதிரா எல்லாருமாச் சேர்ந்து சதி பண்றீங்கன்னு :)) இந்த வாட்டி யாரும் பக்கத்துல இல்ல டிஷ்யூ தர.. வீட்டுல டிஷ்யூவும் இல்ல.. நானே கையால தொடச்சிகிட்டேன்.. ஒரு மாசமா ஓட்டு ஓட்டுன்னு ஓட்டியே ஆப்பு தான் கிடைச்சது, ரெண்டே நாள்ல என்னத்தக் கிழிக்க?

சனிக்கிழமை காலை, நான் வரல, மறுபடியும் அவமானப்பட என்னால முடியாதுன்னுட்டேன்..  எப்பிடியோ தேறி, மதியம் மாதிரி ஓட்ட ஆரம்பிச்சா, பனித்தூறல் வேற கூடவே ஆரம்பிக்குது.. எனக்குச் சுத்தமா நம்பிக்கை இல்ல.. இருந்தாலும் பரவாயில்லன்னு ரங்ஸ் கூட்டிட்டுப் போனார்.. அதே cemetry.. வேண்டா வெறுப்பா அங்க சுமார் ஒரு நிமிஷம் ஓட்டினேன்.. என்னத்தச் சொல்ல? பழைய மாதிரி ஓட்ட வந்துட்டது.. மறுபடியும் அங்க வச்சே நம்பிக்கை வந்தது.. ரொம்ப நேரம் ஓட்டினோம்..  ஞாயிறும் தொடர்ந்து பயிற்சி.. இந்த வாட்டி parallel parking பண்ணும் போது, அடுத்தடுத்த sequential steps சை சரியாக நினைவில் வைக்க, ஒரு சுலபமான வரிசையை நானே மனசுல உருவாக்கிட்டேன்.. இப்படிச் செய்தது, ஒவ்வொரு முறையும் மிகவும் உதவியாக இருந்தது..

திங்கக்கிழமை.. இந்த வாட்டி ஆதிரேயன் கூடப் போனேன்.. அதே ஒரு மணி நேரப் பயிற்சி.. அதே இடத்துக்குப் போனோம்.. இந்த வாட்டி ஒரு இளம் கறுப்பினப் பெண் வந்தார்.. சிரித்த முகம்.. ஒரு பட்சி உள்ள பறந்தது.. முயற்சித்துத் தான் பார்ப்போமேன்னு.. சரியாக வந்தது எல்லாமே.. ஒரு இடத்துல திருத்தம் சொல்லும் போது கூட, குண இனமாகச் (ஊர்ப் பதம்.. in gentle tone ன்ற மாதிரி) சொன்னார்.. இப்பிடிச் செய்திருக்கனும்ன்னு.. மறுபடியும் parallel parking.. ஏற்கனவே மனசுல வரிசைப் படுத்தி இருந்த மாதிரி சரியாகச் செய்தேன்.. என்ன, கொஞ்சம் தள்ளி வந்தது.. சரி, மறுபடியும் பண்ணிப் பார்க்கலாமேன்னு சொன்னார் (மறுபடியும்.. in gentle tone).. செய்தாச்சு..

ஒரு மாசமா ஓட்டிக் கிடைக்காத லைசென்ஸ், ரெண்டே நாள்ல கிடைத்து விட்டது.. என்னத்தச் சொல்ல? அந்தப் பெண் இல்லாட்டி கிடைத்திருக்காதுன்னு நினைக்கறேன்.. அவங்களுக்கு, அவங்களோட மென்மையான அணுகுமுறைக்கு, மானசீகமா ஒரு நன்றி.. ஆதிரேயன் கூடத் தான் வந்திருந்தேன்..  திரும்பிப் போகும் போது, அந்த இடத்துல ஆதியும் நின்றிருந்தார்.. வேறொரு ஆளைக் கூட்டி வந்திருந்தார்.. அவர்கிட்ட ஓடிப் போயி சந்தோஷத்தப் பகிர்ந்துகிட்டு வந்தேன்..

என்ன, ரங்ஸ்சால தான் நம்பவே முடியல.. ஹாஹ்ஹா..

 ........................................  சுபம் ......................................

இதைத் தொடர இலாவையும் (வானதி கிட்ட இவங்களும் அடம் பண்ணினாங்க), ஹூசைனம்மாவையும் (தனக்கும் ஒரு இனிய எல்போர்ட் காலம் இருந்ததாகச் சொன்னாங்க) அழைக்கிறேன்.. நேரம் இருக்கும் போது தொடருங்க.. நன்றி.. 

10 November 2010

தோழியிருவர்..




தோற்றம் கண்டேன்
தென் மாநிலத்தவள்..

தமிழரென்றாள்..
உடனே ஒட்டினேன்..

உன் நாட்டில் பிறந்து
வெளி மாநிலமொன்றில் 
வளர்ந்தேன் என்றாள்
கொஞ்சம் விலகினேன்..

தமிழில் பேச விருப்பமென்றாள்
தட்டுத் தடுமாறிப் பேசினாள்
பிழை கண்டு சுளித்தேன்..
ஆங்கிலத்தில் பதிலுரைத்தேன்..
இன்னும் விலகினேன்..

புரிதல் தொடங்கிய நாளொன்றில்
அதுவரை நான் இட்டிருந்த 
மனவேலிகளைத் தாண்டி
பூத்தது எங்கள் நட்பு.. 


2

தோற்றம் கண்டேன்
தென் மாநிலத்தவள்..

தமிழரென்றாள்
உடனே ஒட்டினேன்..

"நீங்க எந்த ஊரு?
அட, ..... ஆ?
நானும் பக்கத்துல தான்" என்றாள்
இன்னும் ஒட்டினேன்..

வட்டார வழக்கில் பேசினாள்
நட்பை இறுக்கினேன்..

அடையாளங்கள் மெல்ல 
சுவாரசியமிழந்து,
உணர்வுத்திரை விலகி,
அவள் முகம் 
தெரியத் துவங்கிய
நாளொன்றில்..
துடித்து விலகினேன்..


இன்று

முதலாமானவளிடம்
அவளது தமிழில் பேசுகிறேன்..

இரண்டாம் ஆளிடம்..
பேசுவதேயில்லை.....

07 November 2010

ஆ vs நா

மு vs கோ மாதிரி முடிவில்லாத இன்னொரு விவாதம் இந்த ஆ vs நா!

எனக்கு ஒரு விஷயம் புரியவேயில்ல.. ஆ களுக்கு சுயமரியாதை இல்லையா? அப்ப, வீட்டுல நாட்டுல பெரியவங்கள ஒருத்தன் மதிச்சா, அவனுக்கு சுயமரியாதை இல்லாம போயிடுமா? 

அப்புறம், இந்த சிந்தனை.. ஆ மக்களெல்லாம் சிந்திக்கத் தெரியாதவங்களா? மக்களா.. ஆ களுக்கும் கேள்வி கேக்கத் தெரியும்.. சிந்திக்கத் தெரியும்.. ஆனா, அந்த விஷயத்துல மட்டும் கேட்டுக்க மாட்டாங்க.. அப்படியேக் கேட்டுகிட்டாலும், அவங்களுக்கு கிடைக்கற பதில் லயும் அவங்க க வ எப்பிடியாச்சும் உணர்ந்துப்பாங்க..  

அடுத்து தன்னம்பிக்கை.. ஆ களுக்கு இதுவும் இல்லைன்னு சொல்றாங்க.. மறுபடியும் புரியல.. வாழ்க்கை முழுசா நம்ம கையில இல்லையே? நிறைய நிச்சயமற்றதன்மை உடையதா இருக்கு பொழப்பு.. நிலையில்லாத உலகில் நிலைக்கும் என்ற கனவில் ன்னு வாழும் போது, தன்னையும் மீறின அந்த தற்செயல் நிகழ்வுகளைத் தாங்கிக் கொள்ள ஒரு பிடிப்பு, தன்னம்பிக்கையைத் தாண்டின ஒரு நம்பிக்கை கொஞ்சம் பேருக்குத் தேவைப்படுதே.. 

நான் இங்க சொல்லியிருக்கறது, நல்லபடியான ஆ கள் பத்தி தான்.. இந்த அங்காடித் தெருவுல வருவாரே.. கடை ஊழியர்கள மனுஷனாக் கூட மதிக்காம, நுழையும் போது வலது காலை உள்ள வச்சு வருவாரே, அவர மாதிரி ஆட்களை இல்ல.. அப்புறம், எதுத்தாப்ல ஒருத்தன் பசியோட இருந்தா, அவனைக் கடந்து போறப்ப, க ளே, நீ தான் இவனப் பாத்துக்கனும்ன்னு தன்னோட கடமையில இருந்து எஸ்கேப் ஆகிட்டு ஓடற ஆட்களை இல்ல.. நிதர்சனங்களை ஏத்துக்காம, க பத்தின ஒரு fantasy ல மூழ்கி, இத்துனூண்டு பிரச்சனைக்கும் க வ எதிர்பாத்துட்டு இருக்கற ஆட்கள இல்ல.. 

சரி, ஆ ஆ வாவே இருந்துட்டுப் போகட்டுமே? இதில நா களுக்கு என்ன கஷ்டம்? அவங்கங்க விருப்பம்... வாழ்க்கை.. அடுத்தவன் தலையில க பேரைச் சொல்லி மிளகாய் அரைக்காத வரைக்கும், ஆ களுக்கு, ஆ சிந்தனை நல்ல விஷயந்தான்.. அவங்களப் பொருத்தவரைக்கும், க ஒரு ஆத்மார்த்தமான தோழன்/தோழி.. மனம் விட்டுப் பேச, புலம்ப, பகிர, அழுக.. இப்பிடி..

அப்புறம், நா கள் எங்க தன்னோட கருத்துகளைச் சொன்னாலும் இந்த ஆ மக்களும் அங்க போயி சண்டை போடறது ஏன்? விவாதம் பண்ணலாம்.. சில விஷயங்களை ஏத்துக்கப் பிடிக்கலைன்னா தாண்டிப் போறது?.. நா களுக்கு அவங்க பார்வை.. 

இத்தன பேசறியே? நீ ஆ or நா வான்னு கேட்டா.. Its however I want.. :)

29 October 2010

ஓர் எல்போர்ட் வண்டியோட்டுகிறது..

தலைப்பு எப்பூடி? சும்மா கவித மாதிரி இல்ல? ஓர் ஓடம் நதியாகிறது அப்படின்ற படத்தலைப்போட பாதிப்புல இ(சு)ட்டது.. (தமிழ்ப்படந்தான், டிவில எப்பவோ பாத்து பிடிச்சுப் போனது..) வானதி கிட்ட அடம் பண்ணி, கேட்டு வாங்குன தொடர் பதிவு..

எல்போர்டு வண்டியோட்ட பட்ட சிரமத்த விட, எல்போர்டு எல்போர்டாக பட்டச் சிரமந்தான் அதிகம்.. கதையச் சொல்றதுக்கு முன்னாடி, திரு. எக்ஸ் ஐப் பத்தி ஒத்த வரி அறிமுகம்.. தன்னப்பத்தி ப்ளாக்ல எதுவும் எழுதவேண்டாம்ன்னு வூட்டுக்காரர் சொல்லியிருக்கறதால, அவரப் பத்தி எதுவும் எழுதல, திரு. எக்ஸ் ஐப் பத்தி மட்டுந்தான் இங்க எழுதியிருக்கிறேன்னு இப்பவே சொல்லிப்போடறேன்.. :)

இங்க learner's permit (இது எல்போர்டா ஆவறதுக்கான லைசென்ஸ்) ஒரு முக்கியமான அடையாளச் சீட்டு.. ரெண்டு மூணு உறுதியான அடையாளச்சீட்டுக்கள் இருந்தாத்தான் பெர்மிட்டே கிடைக்கும்.. இந்த நாட்டுக்கு வேலைக்கான விசால வர்றவங்களுக்கு பிரச்சன எதுவும் இல்ல.. நாம யாரு.. கண்ணாலந்தான் கட்டிக்கிட்டு ஓடி வந்தவங்களாச்சே... அதனால, லொட்டு லொசுக்குன்னு பல அடையாளங்கள தேத்தோனும்.. இதுக்கோசரமே, வங்கியில கணக்கு ஆரம்பிச்சு, ரெண்டு வங்கிக்கணக்கு, இன்சூரன்ஸ், பாஸ்போர்ட், அது போவ இன்னும் ஒன்னோ ரெண்டோ..  எல்லாஞ் சேத்தி (அதுக்கே ஒரு வருஷமாயிப் போச்சு), ஒரு மஞ்சப் பையில போட்டு எடுத்துக்கிட்டு பஸ்ஸப் புடிச்சு தெகிரியமா ஒரு நா அந்த அலுவலகத்துக்குப் போயி நின்னா..  :(

எல்லாம் சரிதான், ஆனா இன்சூரன்ஸ் கார்டுல உன் நடு இனிசியல் வரல, அதனால செல்லுபடியாவாதுன்னு சொல்லிப்போட்டாங்க.. இந்த நாட்டுக்கு வந்ததுல இருந்தே பொழப்பு நாசமாத் தான் போயிக் கெடக்கு.. நமக்கு வாழ்க்கையே இனி அம்புட்டுத்தான் அப்பிடின்னு கண் கலங்க திரும்புனேன்.. அப்பப் பாத்து இன்னோரு அம்மா திரும்பவுங் கூப்புட்டு, இந்தா கண்ணு, போனாப் போவுதுன்னு உன்னைய ஏத்துக்கறோம்ன்னு பெரிய மனசு பண்ணி சொல்லிட்டாங்க.. பெர்மிட்டும் கிடைச்சுது..

முதன்முதல்ல ஓட்டுனது, எக்ஸ் சோட அலுவலகத்துல இருக்கற கார் பார்க்கிங்ல.. நாமளே முயற்சி பண்ணிப்பாக்கலாம் அப்பிடின்னு கூட்டிட்டு போனாரு.. கேஸ் பெடல (அக்சலறேட்டர்)  ஒரு அமுக்கு அமுக்கி, சும்மா விர்ருன்னு கிளம்பி, இன்னொரு கார் பின்னாடி ரொம்ப பக்கத்துல போயி, சடாருன்னு ப்ரேக்கப் போட்டு நிறுத்துனேன்.. திரும்பிப் பாத்தா, எக்ஸ் நெஞ்சைப் பிடிச்சிகிட்டு பேச்சு மூச்சில்லாம உட்கார்ந்திருந்தார்..

அதுக்கப்புறம், பயிற்சி ஆட்களோட, அவங்க கார்கள்ல சில மணி நேரங்கள் கடுமையான பயிற்சி.. ரெண்டு பேரு வந்தாங்க; ஆதிரேயன் - இவர் பெரியவர்.. இவர் தான் பயிற்சிப் பள்ளி முதலாளி.. சொல்லிக் கொடுக்கறதும் கண்டிப்போட இருக்கும்.. பயந்து பயந்து ஓட்டுவேன்.. தான் சொன்ன மாதிரி சரியாகச் செய்யணும்ன்னு எதிர்பார்ப்பார்.. டூ வீலர் ஓட்டியிருக்கேன்னு சொல்லற, அதைய விட இது எளிதானது தான்னு சொன்னார்..  இவர் கூட ஓட்டுன வரைக்கும் நம்பிக்கையே வரல..

ரெண்டாவது - ஆதி.. இவர் நம்ம வயசுக்காரர்.. அதனால பயிற்சி ரொம்பவே இயல்பா இருக்கும்.. இப்போதைக்கு நான் சொல்ற மாதிரி ஓட்டு, நாளாக ஆக நீயே உனக்குன்னு ஒரு ஸ்டைல்ல (?!) ஓட்டுவ, அப்படிம்பார்.. எனக்கு பிரச்சனையே, வேகமாப் போக பயப்படறது தான்.. பின்னாடி வர்றவங்க எல்லாம் பொறுமையிழந்து போயி ஹாரன் அடிப்பாங்க.. ஒரு நாள் ரொம்ப நொந்து போய்ச் சொன்னார் - உன்னைய நம்பி நான் என் வாழ்க்கையவே பணயம் வச்சு இந்தக் கார்ல உட்கார்ந்திருக்கேன், நீயும் பதிலுக்கு என்னைய நம்பி தெகிரியமா ஓட்டனும்..

அதுக்கப்புறம் நிலைமை கொஞ்சம் சுமாராச்சு.. ஒருக்கா, இறக்கத்துல (downhill) போறப்ப, யாராயிருந்தாலும் தன்னிச்சையா இந்த இடத்துல ப்ரேக் போட்டிருப்பாங்களே, உனக்கு அது தோணலையா ன்னு ஆதிரேயன் கேட்டார்.. நாமல்லாம் யாரு?! கஷ்டப்பட்டு பெடல மிதிச்சு, மேடேறி, மேடு தாண்டினதும் வர்ற இறக்கத்துல, ரெண்டு கையையும் விட்டுட்டு சும்மா சல்லுன்னு சைக்கிள்ல போனவங்களாச்சே.. நமக்கெல்லாம் அது தன்னிச்சையா வராதுன்னு சொல்லிட்டேன்.. இந்த வெத்துப் பெருமைக்கெல்லாம் குறைச்சலே இல்ல!

இதெல்லாம் கொஞ்சம் மணி நேரங்கள் தான், பத்தாதுன்னு, எக்ஸ் சொன்னாரு.. எல்போர்டா இருக்கற வரைக்கும் தனியா ஓட்டக் கூடாது; அதனால அவரு கூட எங்கயாச்சும் போயி நல்லா பழகனும்.. எங்க போக? அப்பத்தான் இந்த எல்போர்ட் மண்டையில ஒரு "பயங்கரமான" யோசனை உதிச்சது.. நம்ம வீட்டுப் பக்கத்துல ஒரு cemetry இருக்கே (அர்த்தம் தெரியாதவங்க தேடிப் பிடிச்சு படிச்சுக்கோங்க :) ), அங்க போனா "யாருக்கும்" எந்தப் பிரச்சனையும் இருக்காதேன்னு! சும்மா சொல்லக் கூடாது.. நெறைய ரோடுங்க, குறுக்கும் நெடுக்குமா போட்டு வச்சிருந்தாங்க.. அந்தப்பக்கம் இந்தப்பக்கம்ன்னு திருப்பிப் பழகறதுக்கு ரொம்பவே உபயோகமா இருந்தது.. எப்பவாச்சும் ஒருக்காத் தான் ஏதாவது வண்டி கண்ணுல படும்.. மீதி நேரமெல்லாம் எங்க ராஜ்ஜியம் "மட்டுந்" தான்.. அங்க பல மணிநேரங்கள் ஓட்டின பிறகு, வாழ்க்கையில கொஞ்சம் நம்பிக்க வந்தது (?!)..

எங்க வீட்டுல இருந்து கொஞ்சம் தொலைவுல, நல்ல இயற்கை வளத்தோட, ரெண்டு பக்கமும் அடர்ந்த மரங்களோட, லேசான வலைவுகளோட, பாதைகள் உண்டு.. இங்க கொஞ்சம் நேரம் ஓட்டிப் பழகினேன்.. மழை லேசாத் தூறும் போது, இந்த மாதிரி இடத்துல, வேற யாராவது வண்டி ஓட்ட, உட்கார்ந்து பாட்டு கேட்டுக்கிட்டு வர்றது, சுகமான அனுபவம் - அப்படின்னு எக்ஸ் சார்பா நானே சொல்லிக்கறேன்.. என்ன, அப்பப்ப எதிர்தாப்புல வர்ற சிக்னல், ஸ்டாப் சைன் - இதெல்லாம் கவனமாப் பாத்து சொல்லிக்கிட்டே வரணும் :))


பிகு: கார்ல பயிற்சி ஆரம்பிக்கறதுக்கு முன்னால, பயிற்சிப் பள்ளில,  சாலை விதிகள் பத்தின வகுப்பு நடந்தது.. ஆதிரேயன் தான் சொல்லிக் கொடுத்தார்.. எல்லா நாடுகள்லயும், ஸ்டாப் சைன், ஓரளவுக்கு ஒரே மாதிரி தான் இருக்கும் அப்பிடின்னு சொல்லிட்டு, வெளிநாட்டு ஆளுங்க ரெண்டு மூணு பேர எழுப்பிவிட்டு, சொன்னது சரிதானன்னு கேட்டார்.. என் போதாத நேரம், என்னையும் எழுப்பி விட்டுட்டார்..  எங்க நாட்டுல நான் ஸ்டாப் சைனையே பாத்ததில்ல அப்பிடின்னு ஒரே போடாப் போட்டேன்.. கொஞ்சம் நேரம் விவாதம் பண்ணுனார் - அதில்லாம எப்படின்னு.. அப்பிடித் தான், வேணும்னா நீங்களே வந்து பாத்துக்கோங்கன்னு சொல்லிட்டு உட்கார்ந்துட்டேன்.. நீங்க யாரும் பாத்திருக்கீங்களா?

ஆவ்.. சொல்ல மறந்துட்டேன்.. இன்னொரு பாகம் இருக்கு! என்ன  செய்ய? பேச ஆரம்பிச்சா நிறுத்த முடியறதே இல்ல! 

27 October 2010

இவர்களைக் காணவில்லை!!




மிஸ் பண்றோம் பூஸ்!


டோரா இக்கத்த (இடுப்பு) விட்டு இறங்க முடியலையோ?


ம.பொ.ர? விமானம் எப்பிடி ஓட்டறதுன்னு திரும்பி உட்கார்ந்து படிச்சிட்டு இருக்காரோ!!

24 October 2010

உணவு, காதல்

நேற்று முன் தினம்.. ஆஷா, எங்க அலுவலகத்தில் வேலை/படிப்பு கற்கும் ஒரு சக பணியாளர்.. இவர், புலம் பெயர்ந்ததொரு இந்தியப் பெற்றோருக்கு, அமெரிக்காவில் பிறந்து, இங்கேயே வளர்ந்தவர்.. பெற்றோரின் பூர்வீகம் வட இந்தியா..  ஒன்றிரண்டு வருடங்களுக்கு ஒரு முறை அங்கு சென்று வருவது வழக்கம்..  வெள்ளி மாலை, வழக்கத்துக்குப் புறம்பாக, வேலை குறைவாக இருந்தது.. மெதுவாகப் பேச ஆரம்பித்தோம்..

நான் தமிழர் என்றதும் அவர் என்னிடம் முதலில் கேட்டது, இட்லி செய்யும் வித்தை :).. பின், அவரவர் கல்வி, குடும்பம் என, பேச்சு நீண்டது.. அவர் இன்னும் திருமணமாகாதவர்.. பையன் தேடிக் கொண்டிருக்கிறார்.. அதுக்கென்ன, சீக்கிரம் கிடைச்சிடுவான் என்று சொல்லிக் கொண்டிருந்தேன்.. எனக்கென்னமோ அப்படித் தோன்றவில்லை என்றார்.. ஏன் என்று கேட்டதற்கு, அவர் சொன்ன காரணம், உணவுப் பழக்கம்.. சைவம் என்பதையும் தாண்டி.. VEGAN என்பார்கள் ஆங்கிலத்தில்.. அதாவது, பால், தயிர், முட்டை, சீஸ் இதெல்லாம் கூட சாப்பிட மாட்டாராம்.. எனக்கு கொஞ்சம் தலை சுற்றித் தான் போனது.. முட்டை சாப்பிட மாட்டாரெனில், இங்கு விக்கும் ரொட்டிகள் கூட சாப்பிட முடியாது.. ஒரு பீட்சா கூட.. முட்டை கலக்காமலும் ரொட்டிகள் செய்கிறார்கள், அந்த பிராண்டை தெரிந்து வைத்துக் கொண்டால் எளிது தான் என்றார்.. தினமும் தனக்கென்று சமைத்து தான் சாப்பிடுகிறார்..

அமெரிக்காவில், பொதுவாக, அசைவ உணவுப் பிரியர்களே அதிகம்.. நிறைய பேர் தினமும் அசைவம் உண்கிறார்கள்.. இங்கு பிறந்து வளரும் இந்தியக் குழந்தைகளும், பொதுவாக, எல்லா வகை அசைவமும் (சிக்கன், போர்க், பீப், டர்கி) உண்பதைக் கண்டிருக்கிறேன்... இதற்கு சில விதிவிலக்குகளையும் கண்டிருக்கிறேன்..

சரி, மறுபடியும் கதைக்கு வருவோம்.. முதலில் சைவம் சாப்பிடுபவர் மட்டுமே துணையாக வேண்டும் என்று நினைத்ததாகவும், இப்பொழுது தன்னுடைய எதிர்பார்ப்பினை கொஞ்சம் தளர்த்திக் கொண்டதாகவும் சொன்னார்.. இருவகை உணவுகளுக்கும் ஒரே பாத்திரங்களைப் புழங்கினால் ஒத்துக் கொள்ள முடியுமா என்றேன்.. வேறு வழியில்லை என்றார்.. சைவ உணவு சாப்பிடுபவரே ஆனாலும், கொஞ்சம் பேர் flexible ஆக இருப்பார்கள்.. அவர்களுடைய பாத்திரங்களில் அசைவம் சமைத்தாலும் ஒன்றும் சொல்ல மாட்டார்கள்.. எங்கள் தோழி அறையில், அவரது கட்டில் மேலேயே வைத்து அசைவம் சாப்பிட்டு இருக்கிறோம் (அவர் இருக்கும் போது தான் :) ).. ஆனால், கொஞ்சம் பேருக்கு இதெல்லாம் பார்த்தாலே அருவருப்பாக இருக்கும்..

இதையெல்லாம் யோசித்திருந்தாலும், நம்ம ஆட்களில், சைவ-அசைவ ஜோடிகள் கொஞ்சம் பேரைக் கண்டிருப்பதால், நான் பாட்டுக்கு, அதெல்லாம் பிரச்சனையாகாது, அசைவ உணவுப் பழக்கம் இருந்தாலும், பையனைப் பிடித்திருந்தால் ஒத்துக்கொள் என்று சொல்லியிருந்தேன்.. என் எண்ணத்துக்கு நேர்மாறாக வந்து விழுந்தது, இன்று ஆனந்த விகடனில் நான் படித்த ஒரு கதை..

கதை ஆசிரியர், திரு எஸ்.ரா அவர்கள்.. கதையில், சைவ உணவுப் பழக்கம் உள்ள ஒரு பெண், அசைவ உணவுப் பிரியனைக் காதலித்து மணந்து, அவனது குடும்பத்தில் ஒருத்தியாக வாழும் நிலைமையில், அசைவ அருவருப்பினால் ஏற்படும் இன்னல்களும், அந்தப் பெண்ணுக்கு ஏற்படும் மனக்கசப்பும், படிக்கவே ரொம்ப கவலையாக, பதைபதைப்பாக இருந்தது.. கதையின் பெயர் - "ஜெயந்திக்கு ஞாயிற்று கிழமை பிடிப்பது இல்லை".. நம்மூர் உணவுப் பழக்கத்தை அறிந்தவர்களுக்கு இந்தத் தலைப்பை விளக்கத் தேவையில்லை :).. குடும்பம் (கணவன், மாமனார், மாமியார், நாத்தனார்) மொத்தமும், ஞாயிறு அன்று, அசைவம் சமைத்து ருசித்து உண்ண, தனித்து விடப்பட்டிருப்பார் கதை நாயகி.. அவளது கணவனுக்கு அசைவம் ரொம்பவே விருப்பம்.. முடிவில், அந்தப் பெண், இன்னும் எத்தனை வருடங்கள் இப்படி காலத்தை ஓட்ட வேண்டியிருக்குமோ என்று மனம் வெதும்பியிருப்பார்..

நேற்று முன் தினம் நான் ஆஷாவுக்கு சொன்னது தவறோ என்று இப்போது படுகிறது.. தினமும் ஒரு வேளையாவது சேர்ந்து உண்ணப் போகும் உணவு... அதற்கு சமைக்கும் நேரம் வேறு.. இருவருக்கும் ஓரளவுக்காவது ஒத்த ரசனை இருந்தால் தான் காதலும் உணவோடு சேர்ந்து ருசிக்கும் என்று தோன்றுகிறது.. ஓரளவு மட்டும் அசைவம் உண்ணுபவராக இருந்தால் பிரச்சனை இருக்கப் போவதில்லை தான்.. ஆனால், ஒருவர் மிகுதியான அசைவப் பிரியராகவும், இன்னொருவர் அசைவத்தைக் கண்டே அருவருப்பு கொள்பவராகவும் இருத்தல் கடினம் என்று படுகிறது.. நீங்க என்ன நினைக்கிறீங்க?

16 October 2010

இலக்கை மீறிய பயணம்...



பிரபஞ்சவெளியில்
உயிர்த்தெழும்பியிருந்த
ரோஜாவின் மேற்
பனித்துகள்கள் அகற்றி
அதன் ஒற்றையிதழ் உதிர்த்து
முகர்ந்து சுவாசித்த வேளையில்
என்னருகில் மிதந்துவந்த
நிலவின் மீதேறி,
தேடித்திரிந்து கண்டெடுத்த கல்லில்
என்னவளின் நிழலைச்
செதுக்கி முடித்தபொழுது
வந்த பெரும் பிரளயத்தில்
அடித்துச் செல்லப்பட்டு
எதுவுமற்ற பல
வெளிகளைக் கடந்து
கொடியொன்றினைப் பற்றி
கரை சேர்ந்திருந்த
 'நான்'
அங்கு தியானித்துக் கொண்டிருந்த
ஜென் துறவி யொருவரின்
மூச்சில் உள்ளிழுக்கப்பட்டு
செந்நிறத்துச் சிறு
உலகமொன்றின் உதவிகொண்டு,
பிணைந்திருந்த ஏணிகளை
எட்டிப்பிடித்து அவைகளை
இணைத்திருந்த தொரு
கம்பியின் அங்கமாகி
யுகங்கள் சில காத்திருந்து
பின் வெளிப்பட்டதொரு நாளில்
மண்ணில் விழுந்து
முளைத்து வளர்ந்து
பூத்து ரோஜாவானேன்..

12 October 2010

சிலே

எல்லாரும் நல்ல படியா மேல வந்து சேரனும் (கடவுளே)!

http://www.reuters.com/article/idUSN0925972620101013

02 October 2010

எந்திரன் - காதுல வயர்

அழகு - இருக்குங்க (ஐஸ்க்கு வயசே ஆகாதா?)

பிரமிப்பு - இருக்குங்க

பிரமாண்டம் - இருக்குங்க

கற்பனை, உழைப்பு, கிராபிக்ஸ் - குறைச்சலே இல்லாம இருக்குங்க

கலர் - கிளிமஞ்சாரோ ன்னு ஒரு பாட்டு வருதுங்க. அதுல ஐஸ் கலர் கலரா வராங்க.

உணர்வு - தலீவரு பேரு வர்றப்வே, படம் பாக்கற மக்களுக்கெல்லாம் பொங்கி வந்துடுச்சுங்க. விசிலு, பேப்பரு, கைதட்டலுன்னு தூள் கெளம்புது. எழுந்து நின்னு சாமியாடாதா கொற ஒன்னு தான்..

இசை - காதடைக்கற அளவுக்கு இருக்குங்க


அட, உலோகம் கூட டன் கணக்குல இருக்குதுங்க..

கதை - இது கூட ஒரு வரில சொல்ற அளவுக்காவது இருக்குங்க 



லாஜிக் - புல் மீல்சுல ஓரமா இத்துனூண்டு ஊறுகா தொட்டுக்க வைப்பாங்களே, அந்தளவுக்காவது இருக்குங்க


உயிர் - அதையத் தானுங்க காணோம்.


நான் கூட எந்திரன் படத்துல ரஜினி நடிச்சிருக்காருன்னு நெனச்சு போனேங்க.. பொறவு தான் தெரிஞ்சது, ரஜினி படத்துல ரோபோட்டும் நடிச்சிருக்குன்னு.. அதுக்காகவே அந்த "ரோபோட்"ட பிடிச்சிருக்குங்க.

30 September 2010

இ'ரை'யாண்மை (சவால் சிறுகதை)


"காமினி.. ஆர் யூ ஆல்ரைட்?" அருகில் வந்து, படுக்கையில் அமர்ந்து, மென்மையாக அவளது விரல்களைக் கையிலெடுத்தார் டாக்டர் பரந்தாமன்.

சென்னையின் புறநகர்ப் பகுதி ஒன்றில், ரியல் எஸ்டேட் பெரும்புள்ளிகளால் வளைத்துப் போடப்பட்டு, ‘காலனி’யாதிக்கம் பெற்று, ஆங்காங்கே ஒன்றிரண்டு வீடுகள் கட்டப்பட்டு, புதியதாக ஆனால் பாதியே பருவம் எய்தியிருந்தது அந்த இடம்.  அந்தப் பரப்பளவின் ஒரு சிறிய அங்கமாக, அருகிலிருக்கும் பெரு நகரத்தின் ஆரவாரத்தைப் பூச விருப்பமில்லாமல் இருந்தது அந்தச் சாலை.  அதிகம் ஆள் நடமாட்டமில்லாத அந்தப் பகுதியில் பயணிக்கும் எவரின் கண்ணும் சாலையோரத்தில் அமைந்திருந்த அந்த வீட்டின் மீது படாமல் கடந்து போனதில்லை. இதை உணர்ந்தே அதன் அழகையும் தனித்தன்மையையும் உரிமையற்ற பார்வைகளிடம் இருந்து காக்கும் பொருட்டு சுற்றிலும் பசுமையைப் போர்த்திவிட்டிருந்தார் உருவாக்கியவர். அந்த வீட்டின் கீழ்நிலையில் அமைந்திருந்த பெரியதொரு படுக்கையறையினுள், சுழலும் நாற்காலி ஒன்றின் மீது சாய்ந்தமர்ந்தவாறு, கண்களை மூடிய நிலையில், நடப்பதை உள்வாங்கிக்கொண்டிருந்தான் சிவா. காமினி பேசட்டும் எனக் காத்திருந்தான்.. 

கண் விழித்த காமினி, விரல்களை விடுவித்து, கைகளை ஊன்றி கொஞ்சமாக எழுந்து, தலையணையை பின்னே நிறுத்தி வைத்து, அதன் மீது சாய்ந்தாள்.. மாஸ்க்கை கொஞ்சமாக கீழே இழுத்து விட்டுக் கொண்டாள். எதிரில் இருந்த டீவியின் செய்தி  கேட்டதும், "அந்த டீவிய முதல்ல நிறுத்தித் தொலைங்க.." எரிந்து விழுந்தாள்.

'ரேஷன் கடை அரிசி மூட்டைகளுக்கு சாக்குப் பை...... ' ரிமோட்டைக் கையிலெடுத்து அறையை அமைதியாக்கினான் சிவா. 

"வேற ஆளே கிடைக்கலையா உங்களுக்கு?" காமினியின் குரலில் அதிகமாகியிருந்தது எரிச்சல்.

"நம்பிக்கையான ஆளா இருக்கணும் காமினி.. அதுவுமில்லாம, தேடினா சிக்கிக்கிற மாதிரி இருக்கக்கூடாது..  உன்ன இங்க யாருக்கும் அவ்வளவாத் தெரியாது.. அதான்" காமினியின் கண்களை கூர்ந்து நோக்கியவாறு, நிதானமாகப் பேசினார் பரந்தாமன்.

"நேத்திக்கு வரைக்கும் சரின்னு தான சொன்ன? என்ன தான் பிரச்சனை இப்ப உனக்கு? எவ்வளவு ரிஸ்க்கான வேலை, விளைவுகள் எப்படியிருக்கும்ன்னு சொல்றப்பக் கூட மறுத்துப் பேசலையே நீ?" அதுவரை அமைதியாய் இருந்த சிவா பொறுமையிழந்து குரலை உயர்த்தினான்.

“மூச்சு திணறுது எனக்கு” சிவாவின் ஆளுமைக்கு முன் கொஞ்சம் அடங்கி ஒலித்தது காமினியின் குரல்.

“சிவா.. ம்ம்ம்..” அதே அமைதியான, ஆனால் உறுதியான குரலில் அவனைப் பின்னுக்குப் போகச் செய்தார் பரந்தாமன். “காமினி.. ஐ அண்டர்ஸ்டேண்ட்.. இது தான முதல் தடவை? போகப் போகச் சரியாகிடும். என்ன நம்பு.. யூ நீட் நாட் வொர்ரி அபவுட் திஸ்.. அதுவுமில்லாம, நினைச்ச மாதிரியே எல்லாம் நடந்தாத் தான் இதெல்லாம் தேவைப்படும்.. ப்ளான் சரியா நடக்க சான்ஸ் அம்பது பெர்சென்ட் தான்.. புரியுதா?"

எதுவும் பேச விருப்பமற்று தலையைத் திருப்பிக் கொண்டாள் காமினி.
“சிவா.. எனக்கு நேரமாச்சு.. இன்னும் மூணு நாள் தான் இருக்கு.. மீதி ஆட்களையும் தயார் பண்ணனும்.. லுக் காமினி.. சிவாக்கு இன்னைக்கு லீவ்.. இங்கதான் இருக்கப் போறான்.. கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடு.. அப்புறம் ப்ராக்டீஸ் பண்ணு.. நாளைக்குப் பார்க்கலாம்..” பேசிக்கொண்டே எழுந்தார் பரந்தாமன்.

“நீங்க போங்க சார்.. காமினிய நான் பாத்துக்கறேன்” எழுந்து விடை கொடுத்தான் சிவா..

அறையை விட்டு டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அகற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.

“ஹே காமினி.. என்னதிது சின்னப்புள்ளத்தனமா? எதுவாயிருந்தாலும் பேசிக்கலாம் வா..” சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு கவனமாகக் குரலைத் தாழ்த்தியிருந்தான் சிவா.

அவள் எழ முயற்சிப்பதற்குள், சிவாவும் வெளியே குதித்தான். காமினியை அவனது பிடிக்குள் கொண்டு வர அதிக முயற்சி தேவைப்படவில்லை. ஜன்னல் வீட்டின் பின்புறமாக அமைக்கப்பட்டிருந்ததாலும், அந்நேரம் வீட்டை விட்டு வெளியே வந்து காரில் ஏறி அமர்ந்துகொண்டதாலும், இதன் பாதிப்பு ஏதுமில்லாமல் பரந்தாமன் ஆட்டோமேடிக் கேட்டின் வழியே வெளியேறிக் கொண்டிருந்தார்.

அவளது திமிறல் அதிகமாகவும், ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலைஎன்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா. சத்தம் கேட்டு யாரும் வந்து விடப் போகிறார்கள் என்ற கவலை அவனுக்கு.

“இந்த வேலையெல்லாம் எங்கிட்ட ஆகாது இன்ஸ்பெக்டர்..” அவனை முறைத்தவாறே துப்பாக்கியைத் தட்டி விட்டாள் காமினி.

“முதல்ல வீட்டுக்கு வா. உட்காந்து பேசுவோம்..” என்றான் சிவா புன்னகையுடன்.

******

வெள்ளிகிழமை மாலை.. மாநகரின் மையப்பகுதியிலிருந்த அந்த மருத்துவமனையின் அகண்ட வரவேற்புப் பகுதியில், உறவினர்கள் விட்டுச் சென்ற நிறங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு, மங்கலான மஞ்சள் வெளிச்சம் மட்டும் மிச்சமிருந்தது. எமர்ஜென்சி பிரிவில், மருத்துவர்களுக்கான அறையில், அவனது அம்மா அனுப்பியிருந்த புகைப்படங்களை சிப்ஸ் கொறித்தவாறே கணினியில் ஜூம் செய்து கொண்டிருந்தான் மகேஷ்.. கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு “எஸ்” என்றான்.  பதற்றத்துடன் உள்ளே வந்தாள் நர்ஸ் செல்லா... “டாக்டர்.. ஒரு எமர்ஜென்சி.. “

கணினியின் பக்கமிருந்த தன் முகத்தைத் திருப்பினான் மகேஷ்... “மேல சொல்லு”

“இருபது வயசு இருக்கும் டாக்டர்.. ரொம்ப ப்ரெத்லெஸ்சா இருக்கா.. இன்னைக்கு காலைல தான் ஆரம்பிச்சுதாம்.. அதிகமாகிக்கிட்டே போகுதாம்...” செல்லாவுக்கு மூச்சு வாங்கிக் கொண்டிருந்தது..

“எங்க இருக்காங்க?” அறையை விட்டு வெளியே வந்திருந்தான் மகேஷ்..

“ரூம்ல படுக்க வச்சிருக்கேன்.. ஆக்சிஜன் போயிட்டு இருக்கு.. பல்ஸ் அண்ட் பிபி நார்மல்..” பேசிக்கொண்டே மகேஷ் பின்னால் ஓடினாள் செல்லா.

அறைக்குள் நிலைமை ஓரளவுக்குச் சீராக இருப்பதைக் கண்டு, முதற் கட்ட பரிசோதனைகளை ஆரம்பித்தான் மகேஷ். “கூட யார் இருக்காங்க.. வரச் சொல்லு”

“நீங்க அவங்களுக்கு என்ன வேணும்?”

“அம்மா சார்..” என்றார் அந்தப் பெண்மணி அழுகையினூடே,.. “காலைல நல்லாத் தான் இருந்தா.. திடீர்னு ஆரம்பிச்சுது... ஒண்ணுமே புரியல..” பதற்றம், கலக்கம், குழப்பம், இயலாமை என எல்லாம் சேர்ந்து அவரது கண்களில் கண்ணீராக வழிந்து கொண்டிருந்தன..

“அழாதீங்கம்மா.. முதல்ல கண்ணத் துடைங்க.. உட்காந்து பேசுவோம்..” செல்லாவின் பக்கம் திரும்பி, “செல்லா.. நீ பக்கத்துலயே இரு.. அஞ்சு நிமிஷத்துக்கு ஒருதரம் வைட்டல்ஸ் செக் பண்ணு.. நான் இவங்க கூட பேசிட்டு வர்றேன்..”

வெளியே, கேள்விகள்.. விசும்பல்கள்... பதில்கள்... செல்லா கவலையுடன் தனது பேஷன்ட்டைப் பார்த்தவாறு அமர்ந்தாள்.. ரொம்பச் சின்னப்புள்ளையா இருக்கே.. அவளது மனம் சலனமுற்றிருந்தது..

சில நிமிடங்கள் கரைந்த பின் உள்ளே வந்தான் மகேஷ். “செல்லா.. முதல்ல செஸ்ட் எக்ஸ்ரே.. ஈசிஜி.. அப்புறம் இந்த பிளட் டெஸ்ட்ஸ் எல்லாம் அனுப்பிடு.. ஷீ இஸ் ஸ்டேபிள் நவ்.. ஆனா, மறுபடியும் எப்பவேனும்னாலும் மோசமாகலாம்.. நான் ஐஸியூக்கு கால் பண்ணி அங்க நிலைமை என்னன்னு கேக்கறேன்..”

திரும்பி வந்தான்.. “ஐசியூ ஒன்ல இடமில்லையாம்.. டூ க்கு ஷிப்ட் பண்ணனும்.. வார்ட்பாய்க்கு கால் பண்ணு..”

அடுத்தடுத்து அவன் கொடுத்த வேலைகளால் திணறிப் போனாள் செல்லா. டெஸ்ட் ஆர்டர்கள் அனுப்பிமுடித்து, வார்ட்பாய்க்கு போன் செய்யப் போகும் போது தான் அவன் கடைசியாகச் சொன்னது உறைத்தது.. “டூ க்கு எப்படி டாக்டர்? விஸ்வநாதன் சொல்லியிருக்காரே..”

“சொல்லியிருக்கார் தான்.. ஒன்ல இடமில்லைன்னு தான அங்க போறோம்? தப்பில்ல.. விஸ்வநாதன் ரெண்டு நாளைக்கு லீவு.. நாந்தான் இன்சார்ஜ்.. நான் முதல்ல டூ க்குப் போய் நேர்ல பார்த்து பேசிட்டு வரேன்.. கவனமா ஷிப்ட் பண்ணுவோம்.. இவளுக்கும் இன்னும் முழுசா நினைவு திரும்பல.. யாருக்கும் தொந்தரவு இருக்காது.. அப்புறம்.. இப்போதைக்கு ஆக்சிஜன்லயே இருக்கட்டும்.. தேவைப்பட்டா மத்த மெடிசின்ஸ் கொடுத்துக்கலாம்.. முழுசும் படுக்க வைக்க வேண்டாம்.. ரெண்டு தலையணை வைத்து லேசா சாய்ந்த மாதிரி இருக்கட்டும்.. க்விக்.. லெட் அஸ் நாட் வேஸ்ட் ஹெர் மினிட்ஸ்..”

**********

பரபரப்பெல்லாம் ஓய்ந்து போய் குறட்டைச் சத்தம் கேட்க ஆரம்பித்ததும், துளி வெளிச்சம் புகும் அளவுக்கு மட்டும் கண்ணைத் திறந்தாள் காமினி. எதிர் பெட்டில் இருப்பவர் குறட்டை விட்டவாறு தூங்கிக்கொண்டிருக்க, மறுபக்கம் நர்ஸ் டேபிள் மேல் தலையை வைத்து கண் அசந்திருந்தார். சுற்றிலும் மானிட்டர்கள் இயங்கிக் கொண்டிருந்தன.. கண்களை மூடிக் கொண்டாள்..

அதிகம் சத்தமெழுப்பாமல், இரவில் இருமுறை மகேஷ் ரவுண்ட்ஸ் வந்து போனான். அவளது சீரான மூச்சைக் கண்டு நிம்மதியடைந்தான். அவனது தொடுதலை உணர்ந்து, விழித்து, புன்னகைத்தாள் காமினி. அவனுக்கும் மனசு கேட்கவில்லை.. பாவம், சின்னப் பெண்.. விஸ்வநாதன் புரிந்து கொள்வார் என்று நம்பினான். ரிசல்ட்கள் அனைத்தும் நார்மலாக இருந்தன. அந்தத் தாயிடம் சொல்லி, அவளது பெருமூச்சில் பங்கெடுத்து, மனநிறைவு அடைய விரும்பினான்.

அடுத்த நாள் காலை விடிவதற்குள் தனிரூமுக்கு மாற்றப்பட்டு, மதியமே டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாள் காமினி. தாயானவள், இம்முறை ஆனந்தக் கண்ணீர் வடித்தாள்.

**********

காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியேஎன்று பாராட்டினார் பரந்தாமன்.

“ம்ம்ம்.. இனிமே உங்க விஷப் பரீட்சையையெல்லாம் என்ன வச்சு எழுத வைக்காதீங்க.. இதோ நிக்கிறாரே சிவா.. இவர் போகட்டும்” கடுப்புடன் தன் காதிலிருந்த பெரிய வைரத் தோடுகளை கழற்றித் தந்தாள் காமினி.

“சிவா.. காமினி முதல்ல அமெரிக்கா கிளம்பட்டும்.. மீதி வேலைகளெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்.. உன் உதவிக்கு ரொம்ப தேங்ஸ் சிவா.. உன்னோட ப்ளூ பிரிண்ட் இல்லாம எதுவும் நடந்திருக்காது..”

“உங்களுக்குத் தான் சார் நன்றி சொல்லணும்.. ரொம்ப சந்தோஷமா இருக்கு சார்..”

*******

நான்கு நாட்கள் கழித்து....

விடுமுறை நாட்களை இந்தியாவில் கழித்துவிட்டு ஊர் திரும்பியிருந்த காமினி, டல்லசில் தனது வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தாள். நடந்ததெல்லாம் மனதில் ஓடிக்கொண்டே இருந்தாலும், முன்பிருந்ததை விட வேகம் குறைந்திருந்தது. அப்பாவை நினைத்து ஒருபுறம் பெருமையாகவும் மறுபுறம் கவலையாகவும் இருந்தது. அவருக்கு எதுவும் ஆபத்து வந்து விடக் கூடாது என்று கடவுளை வேண்டிக் கொண்டாள். நினைவுகளில் சிவா வந்து போனான்.. கூட அவனது ஆளுமையும் நேர்மையும் வந்து போயின.. மகேஷ் வந்து போனான்.. கூட அவனது மென்மையும் கடமையுணர்வும்.. அப்பாவுக்காகவும் நாட்டுக்காகவும் துணிய வைத்த தனது பாசத்தையும் பற்றையும் நினைத்து அவளுக்கு பெருமையாக இருந்தது.

சிவா அன்று சந்தோஷமாக இருந்தான். கரையானரித்துப் போய் பெருச்சாளிகள் பலவற்றை தப்ப விட்டிருந்த அவனது டிபார்மெண்டின் ஓட்டைகளை, அதிகாரப்பூர்வமற்ற ‘டெல்டா.காம்’ இன் உதவியுடன் வெளிச்சத்துக்கு கொண்டு வந்ததை நினைத்து நினைத்து சந்தோஷப்பட்டான்.

மகேஷும் செல்லாவும் விஸ்வநாதனின் முன்பு நின்று கொண்டிருந்தார்கள்.. தங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லையென்றும், உயிர் காக்கவே அப்படிச் செய்ததாகவும் வாதாடிக் கொண்டிருந்தார்கள்.. மகேஷ் கலங்கியிருந்தான்.. செல்லா அழுது கொண்டிருந்தாள்..

பன்-டி-டிவியில், அன்று மட்டுமே நூற்றி எட்டாவது முறையாக, கவனமாக எடிட் செய்யப்பட்டிருந்த அந்த வீடியோ, ஒளிபரப்பாக்கிக் கொண்டிருந்தது.. 'ரேஷன் கடை அரிசி மூட்டைகளுக்கு சாக்குப் பை வழங்கியதில் ஊழல் புரிந்தததற்காக கைது செய்யப்பட்டு, மாரடைக்கிறது என்று கோர்ட்டில் மயங்கி விழுந்து, கப்பல்லோ ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகியிருந்த ஆளுங்கட்சி அமைச்சர் மெய்யப்பன், ஐசியூவில் உட்கார்ந்து மட்டன் பிரியாணியும், சிக்கன் 65 வும் தின்றுகொண்டிருக்க, நடுநடுவே காவல் துறை உயரதிகாரிகள் வந்து போய்க்கொண்டிருந்தனர்’

மாநில ஆளுங்கட்சிக்கு எதிராகப் படம்பிடிக்கப்பட்ட ஆதாரத்தை, மத்திய ஆளுங்கட்சியிடம் விலைபெற்று வழங்கி, தனது ஆட்சி-அதிகார ஆசைப் பேய்க்கு, பாசம்-நேர்மை-கடமையென, நல்லுணர்வுகளை இரையாக்கியிருந்த டெல்டா.காம் பரந்தாமன், சோபாவில் சாய்ந்தவாறு, பன்-டி-டிவி யில் நாட்டு நடப்பை அவதானித்துக் கொண்டிருந்தார்.. அவரிடத்தில் கொஞ்சம் நஞ்சம் மிச்சமிருந்த குற்றவுணர்வும், விஸ்கி க்ளாசினுள் ஐஸ்கட்டியாகக் கரைந்து கொண்டிருந்தது...

*****END*****

டிஸ்கி: கதையோட தலைப்புக்கும், இன்னைக்கு வந்திருக்கற தீர்ப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்ல..


பிகு:

இது சவால் சிறுகதை.. விபரங்களுக்கு இங்க பாருங்க..

இதுக்காக எழுதப்பட்ட ரெண்டு மூணு கதைகளைப் படிச்சதும், எனக்கும் ஆச வந்தது.. எழுதிட்டேன்.. "L" கதைன்றதால போட்டிக்கு அனுப்ப விருப்பமில்ல.. யாராச்சும், "பரவாயில்ல.. அந்தளவுக்கு மோசமில்ல.. சுமாரா இருக்கு.. அனுப்புங்க" ன்னு சொன்னா, அவங்க வீட்டுக்கு ஆட்டோ அனுப்பலாம்ன்னு இருக்கேன்.. 

அடுத்தவன் காரோட்டும் போது, அந்தப் பக்கமா போ.. இப்படித் திருப்புன்னு சொல்றது ஈஸி.. சொந்தமா முதல்ல கார்ல உட்காரும் போது தான் சிரமம் தெரியும்.. இங்கயும் அப்படித் தான்.. எழுதி முடிச்ச பின்னாடி, இதுக்கு முன்னாடி நிறைய கதைகளப் படிச்சு கேள்வி கேட்டு வச்சிருக்கோமே, நம்ம கதைலயும் அப்படி கேட்டுப் பாக்கலாம் ன்னு கேட்டா, ஏகப்பட்ட ஓட்டைஸ்.. என்னால கண்டு பிடிக்க முடிஞ்சதெல்லாம் கோந்து போட்டு ஒட்டிட்டேன்.. நீங்களும் கண்டுபிடிச்சு சொன்னா பரிசு உண்டு (ஆட்டோ இல்ல).. இலக்கணப் பிழை கணக்குல வராது.. இப்பவே சொல்லிட்டேன்..

அப்புறம், இந்தப் பொண்ணு அழகா இருந்ததால இந்தப் படத்த இணைச்சேன்.. கதைல வர்ற மாஸ்க் வேற..