08 February 2011

வணக்கம்!


எங்க அலுவலகத்துல நடக்கற சில விஷயங்களை அப்பப்போ இங்கே பகிர்ந்துக்கறேன்..

~~~~~~~~~~~

ஜனவரில ஆரம்பிக்கற வருடப் படிப்புக்காக ஒரு மாணவர் நேர்முகத் தேர்வுக்கு வந்திருந்தார்.. அவர் இங்கத்தவர்.. அதனால வேற எந்த பிக்கல் பிடுங்கலும் இல்ல.. அவரோட தகுதிகளும் நிறைவானவையாகவே இருந்தன.. நேர்முகத் தேர்வின் போது, அவர்கிட்ட தனித்தனியா கால் மணி நேரத்துல இருந்து அரை அணி நேரம் வரைக்கும் நாலஞ்சு பேர் பேசுவாங்க.. அரைநாள் வரைக்கும் இப்படிக் கழியறது, இறுதியா சாப்பாட்டு நேரத்துல எங்கள மாதிரி வெட்டிப்பசங்களோட அரட்டை அடிச்சுகிட்டே முடிஞ்சுபோவும்.. இது தான் நடைமுறை.. அவர் கிட்ட பேசினவங்க எல்லாருக்குமே திருப்தி தான்.. அவரும் வந்துட்டா எங்க வேலை நிறையவே குறையும்.. அதனால அப்பப்போ கேட்டுக்கிட்டே கெடந்தோம் - அவர் வருவாராஆஆஆஆஆஆஆ.. அவர் வருவாரா ன்னு.. ஜனவரியும் வந்து போச்சு.. பொறுக்க முடியாம, ஒரு நாள் மதிய உணவு நேரத்துல எங்க தலைவர (துறை மேலாளர்) காச்சி எடுத்ததுல, அவர் சொன்னார் - அந்தப் பையன் மனசு மாறிட்டான்னு.. நேர்முகத் தேர்வுக்கு வந்தவன் கிட்ட பேசின ஒன்னு ரெண்டு பேரு, இங்க புதுசா இன்னொரு துறை ஆரம்பிக்கப் போறாங்க தம்பி.. அதுல இங்க கொடுக்கறத விட சம்பளம் அதிகம்ன்னு சாதாரணமா பேச்சுவாக்குல சொல்லியிருக்காங்க.. பையன் இங்க மண்டைய மண்டைய ஆட்டிட்டு, வீட்டுக்கு  கிளம்பிப் போனவுடனே, அந்த புதுத் துறை ஆளுங்க கிட்ட விண்ணப்பம் போட்டிருக்கார்.. அவங்களுக்குத் தெரிஞ்சு போச்சு - இவன் வேறொரு துறைக்காக வந்தவன் இப்படி பல்டி அடிச்சிருக்கான்னு... இப்படி ஒரே நாள்ல மனசு மாறுறது அவனவன் விருப்பம்ன்னா, அப்படிப்பட்டவன எடுக்கறதும் விடறதும் அலுவலகத்தோட விருப்பமில்லையா!! அதனால வேணாம்னு அந்தத் துறைக்காரங்களே சொல்லிட்டாங்க.. (இத்தனைக்கும் அவங்களுக்கு ஆள் தேவையாத்தான் இருக்கு..  கடமைக்காக வேலை செய்யறவன விட காதலோட வேலை செய்யறவனை எதிர்பார்க்கிறாங்க.. ஆனா இந்த நிலைப்பாடு உறுதியானது  இல்ல..  ரொம்பவே ஆள் இல்லாத நிலையில, எப்படியிருந்தாலும் எடுத்துப்பாங்கன்னு தான் நினைக்கறேன்.. ) இந்தக் கதைய கேட்டதும், நான் சொன்னேன் - அக்காவப் பாக்க வந்த மாப்பிள அங்கயே வச்சு தங்கச்சி புடிச்சிருக்குன்னு சொன்ன கதையாயிருக்கேன்னு.. எல்லாரும் நல்லா சிரிச்சாங்க :)
 
~~~~~~~~~~~

எங்க அலுவலகத்துல எங்க துறை க்குன்னு  ஒரு குட்டி டீ காப்பி உற்பத்தி நிலையம் :)  ஒன்னு இருக்கு (இங்க பல அலுவலகத்துல இப்படித் தான்னு நினைக்கறேன்.. காப்பி கடைக்குப் போய் வாங்கி குடித்துவிட்டு வரும் நேரம், பணம் ரெண்டுமே மிச்சம்).. அங்க டீ பைகள், சர்க்கரைப் பொட்டலங்கள், பால் குப்பிகள், ஒரு காப்பி தயாரிப்பு மெஷின், சுடு நீர்  வழங்கும் மெஷின் இதெல்லாம் இருக்கும்.. கூட, நிறைய பேப்பர்/பிளாஸ்டிக் கப்புகள், அதற்கான மூடிகள் இதையும் வச்சிருப்பாங்க.. (எங்க செலவு தான்).. நான் காலையில வீட்டுல டீ தயாரித்துக் குடிக்கும் வேலையை நேரத்தை மிச்சப்படுத்தி (என்ன அஞ்சு நிமிஷம் ஆவுமான்னு கேக்கறது புரியுது :) ), அங்க போயி குடிச்சிப்பேன்.. எழுந்த அரை மணி நேரத்துல கிளம்பி ஓடறதுன்னா சும்மாவா? :)).. ஒரு நாள், எங்க ஆசிரியர் ஒருத்தர், காலையில குடிச்ச கப் லயே சாயங்காலமும் குடிக்கறதப் பாத்து, ஏன் இப்படி செய்றீங்கன்னு கேட்டதுக்கு, எதுக்கு தேவையில்லாம ஒரு கப்பை குப்பையாக்கனும்ன்னு ஒரு தத்துவம் சொன்னார்.. நானும் யோசித்தேன் - ஒரு நாளைக்கு ரெண்டு வாட்டி  குடிச்சா, ரெண்டு கப், அதற்கான மூடிகள் மற்றும் கலக்குவதற்கான  குச்சிகள் ன்னு பொருள் வீணாகுது.. ஒரு மாதத்துக்கு இருபத்தஞ்சு நாள் நான் வேலை செய்கிறேன் என்றால், நான் ஒருத்தியே, இப்படி அம்பது பொருட்களை உபயோகப்படுத்தி தூக்கி எறிகிறேன்.. அதிகமாகத் தோணலை???  பொருட்களின் குப்பையை மறுசுழற்சி செய்வதை விட, தேவையைக் குறைத்து, குறைவாக உபயோகப்படுத்துதலுக்கே முன்னுரிமை அளிக்கணும்.. இந்த விதியை பின்பற்றி, நான் இப்போ என்னுடைய பீங்கான் கோப்பை ஒன்றையும், சிறு கரண்டி ஒன்றையும் எங்களுக்கென்று கொடுக்கப்பட்ட அறையில் வைத்துவிட்டேன்.. என்னைப் பார்த்து, எனது ஆசிரியரும் அவரது கோப்பையைக் கொண்டு வந்து விட்டார்.. ஏதோ என்னால முடிஞ்சது!
 
~~~~~~~~~~~~

எகிப்துல நடக்கற புரட்சியை எல்லோரும் அறிந்திருப்பீங்க.. என்கூட வேலை பார்க்கும் ரெண்டு பேரோட குடும்பங்கள் அங்கே தான் இருக்கின்றன.. ஒருத்தரோட மனைவி மற்றும்  குழந்தையே அங்க தான் இருக்காங்க!! இன்னொருத்தருக்கு, பெற்றோர்கள், உறவுகள்ன்னு இப்படி.. தினமும், வேலையோட வேலையாக, கணினியில் செய்திகளை பார்த்துகிட்டு இருப்பாங்க.. இதுல ஒருத்தங்க கிட்ட அங்க இருக்கற நிலைமை பத்தி அங்கத்த குடியானவரா என்ன நினைக்கறீங்கன்னு கேட்டுப் பாத்தோம்.. அவரும் புரட்சியின் தேவையை முன் வைத்தார்.. அவருடைய கருத்துகள், தமிழ் வலைபதிவுகளில் காணப்படும் கண்ணோட்டத்தையே பிரதிபலிப்பதாக இருந்தன.. முபாரக், எட்டு வருடங்கள் துணை  அதிபராகவும், அதற்கப்புறம் முப்பது ஆண்டுகள் போலி ஜனநாயகத்தின் பெயரில் தொடர்ந்து அதிபராகவும் பதவியில் இருந்துவிட்டு, அதற்கடுத்து வாரிசு அரசியலுக்கும் வழி தோண்டிக் கொண்டிருக்கிறார்.. அவரை தீவிரமாக எதிர்ப்பவர்கள் பொதுவாக காணாமல் போய் விடுவார்கள்.. இதை விட்டால் அவரைத் தூக்கி எறிய வேறு சந்தர்ப்பம் கிடைக்கப் போவதில்லை.. ஆனால் இதன் பேரில் இஸ்ரேலின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் வர வாய்ப்பு இருப்பதால், அமெரிக்கா இந்த மாற்றத்தை வரவேற்கத் தயாராக இல்லை.. இது அனைவரும் அறிந்தது தான்.. ஆனால் இதன் மறுபக்கத்தையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.. இது நாள் வரை நான் பார்த்து வளர்ந்த கட்டிடங்கள் தீயில் எறிவது வேதனை அளிக்கிறது என்றாலும் முக்கியமான இன்னொரு விஷயம், இது போன்ற நிலையற்ற ஆட்சி நேரங்களில், சட்ட ஒழுங்கு சீர் குலைதல்..   காவலதிகாரிகள் காவல் நிலையங்களுக்குப் போகாமல் இருந்த நாட்களில் கைதிகள் தப்பித்து   இருக்கிறார்கள்.. அங்கிருந்த ஆயுதங்களையும் கடத்திக் கொண்டு.. கடைகளை, வங்கிகளை இஷ்டம் போல கொள்ளையடிக்க முடியும்.. பொது மக்களின் உடைமைகளையும் தான்.. ஆனால் முபாரக் இன்று வரை பிடி கொடுக்காமலே இருக்கிறார்.. மக்கள் உணவுக்கும் மருந்துக்கும் என்ன செய்கிறார்கள் என்றும் கவலையாக இருக்கிறது.. இவரது சொந்தங்களைக் குறித்தும்..  

19 comments:

  1. //நேர்முகத் தேர்வுக்கு வந்தவன் கிட்ட பேசின ஒன்னு ரெண்டு பேரு, இங்க புதுசா இன்னொரு துறை ஆரம்பிக்கப் போறாங்க தம்பி.. அதுல இங்க கொடுக்கறத விட சம்பளம் அதிகம்ன்னு சாதாரணமா பேச்சுவாக்குல சொல்லியிருக்காங்க.//ம்ம்ம்ம்...அந்த 'ஒண்ணு-ரெண்டு'பேருல இந்த 'அலுவலகத்திலிருந்து அஞ்சலை'இல்லையே?!! ;) :)

    ReplyDelete
  2. இந்த காபிகப் மேட்டர் எங்காத்துக்காரர் வேலை பார்க்கிற இடத்தில அடிக்கடி அவங்களே கொடுப்பாங்க. கூடவே 'கோ-க்ரீன்'ப்ராஜக்ட்-னு ஒரு வாட்டர் பாட்டில்.கோக்-ஜூஸ் இதெல்லாம் அந்த வாட்டர்பாட்டில்ல ஃபில் பண்ணிகிட்டா விலை கம்மி!
    ஏதோ இயற்கையைக் காக்க நம்மால் ஆன உதவி!

    புரட்சி..நினைக்கவே கலக்கமா இருக்கு.விரைவில் எல்லாம் சரியாகணும்.

    நிறைய கமெண்ட்டிட்டேன்,இத்தோட நிறுத்திக்கறேன். :)

    ReplyDelete
  3. பெரிய பெரிய பாராவா இருக்கே. கொஞ்சம் பிரிச்சுப் போடுங்க:-)

    ReplyDelete
  4. எகிப்தில் இருக்கும் குடும்பங்கள் பத்திரமாக இருக்கட்டும். பாவம்ங்க! மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது.

    ReplyDelete
  5. முதல் சம்பவம் - இங்கயும் சிலர் என்ன செய்வாங்கன்னா, வேற கம்பெனில அதிக சம்பளத்துல அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் வாங்கிட்டு, அதை தற்போது வேலை செய்யும் கம்பெனியில் காட்டி சம்பளத்தைக் கூட்டித் தர்றீங்களா இல்லை ரிஸைன் பண்ணவான்னு மிரட்டுவாங்க!! ட்ரெயினிங் காஸ்ட், விஸா, டிக்கட் இன்னபிற செலவினங்களைக் கருத்தில் கொண்டு கேட்டபடி செய்துதரும் நிறுவனங்களும் உண்டு!!

    ரெண்டாவது - நானும் சொந்தமா ஒரு கோப்பை, ஸ்பூன் கொண்டு வச்சிருப்பேன் ஆஃபிஸில்.

    3வது - நீண்ட நாள் பதவியில் இருந்தாலே, அதிகாரப் பித்து வந்துடுது போல. புரட்சி நல்லபடி பயனளிக்கணும்.

    ரொம்ப பிஸியா இப்பல்லாம்?

    ReplyDelete
  6. எங்கள மாதிரி வெட்டிப்பசங்களோட அரட்டை // haha...ரொம்பத் தான் தன்னடக்கம் ஆக்கும்.

    கப் கொண்டு போய் வைச்சிருக்கிறது என் ஆ.காரரும் செய்தார். ஆனால், கழுவ சோம்பல். அது கறை பிடிக்கும் வரை வைச்சிருப்பார். பிறகு அங்கிருக்கும் டிஷ் வாஷரில் போடுவார். இப்ப பேப்பர் கப் இருக்கிறதா சொல்வார்.

    முபாரக் - சீக்கிரம் வீட்டுக்கு அனுப்பிடுவாங்க என்றே நினைக்கிறேன். ஆளுக்கு 80 வயசாம் பார்த்தா இன்னும் இளமை ஊஞ்சல் ஆடுது. கவலை இல்லா வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார் என்றே தோணுது.

    ReplyDelete
  7. வெல்கம் பக்(இது வேற பக்) சந்து. காணாமல் போனதுக்கு ஒரு மன்னிப்புக்கூட கேட்காமல்(ஆரிடம் எனக் கேக்கிறீங்களா? என் போன்ற பெரியவர்களிடம்தேன்:))... ஏதோ நேற்றும் இங்குதான் இருந்ததுபோலவே பதிவு போட்டிருக்கிறீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).

    இனி ஒயுங்கா வருவீங்க இல்ல?, அங்க எங்காவது மயிலைக் கண்டீங்களோ?... அவ எங்கயோ ~சிக்கு~ பட்டுப் போன ஊரில போயிருக்கிறாபோல:).

    சரி அது போகட்டும்...
    ///இந்த விதியை பின்பற்றி, நான் இப்போ என்னுடைய பீங்கான் கோப்பை ஒன்றையும், சிறு கரண்டி ஒன்றையும் எங்களுக்கென்று கொடுக்கப்பட்ட அறையில் வைத்துவிட்டேன்/// என்ன சந்து அமெரிக்காவிலயும் எங்கட புத்தியைக் காட்டிட்டு.... சே..சே.. பேசாமல் அந்தக் கப்பிலயே குடிச்சிட்டு எறிஞ்சிடுங்க.... சரி சரி நீண்ட காலத்துக்குப் பின்பு வந்து ஏஏஏஏஏஎசிடப்பூடாது எனக்கு... நோ கர் பிளீஸ்ஸ்ஸ்ஸ்.

    ReplyDelete
  8. @Mahi

    நன்றி மஹி.. அதுல நான் இல்லை.. பெரியவங்க தான் நேர்முகத் தேர்வுல இருப்பாங்க.. நாங்க சாப்பாட்டு நேரத்துல கூட இருந்து சந்தேகங்களைத் தீர்த்து வைப்போம்.

    பரவாயில்லையே.. நாங்க தான் இந்த விஷயத்துல பின் தங்கி இருக்கோம் போல!

    ReplyDelete
  9. @Gopi Ramamoorthy

    சுட்டினதுக்கு நன்றிங்க கோபி.. எப்பவும் பிரிச்சுப் போடறது தான்.. இந்த வாட்டி மெயில்ல தட்டச்சு செய்து இதிலே ஏற்றினேன். அங்க குட்டியாகத் தெரிந்தது, இங்க அகலம் குறைவானதால நீளம் அதிகமாகத் தெரியுது. அடுத்த வாட்டி சரியாப் பாத்துக்கறேன்..

    உங்க கிட்ட ஒரு கேள்வி - மாதொரு பாதகன் முடிவு - சோகமா இல்லை சுகமா - இதை மட்டும் இங்க சொல்ல முடியுமா?

    ReplyDelete
  10. சித்ரா - எனக்கும் அது தான்.. ஆனால் இதை விட்டால் முபாரக்கைத் துரத்த வேற வழி இல்ல. அவங்க இதை தொடர்ந்து தான் ஆகணும்..

    ReplyDelete
  11. ஹூசைனம்மா - வேலையில இப்படின்னா பராவாயில்ல. ஆனாலும் கூட நீங்க சொல்லியிருப்பது மாதிரி செய்வது மிரட்டலாகத் தான் தெரியுது.. பிடிக்கலைன்னா, முறையான அறிவிப்பு கொடுத்துட்டு, கம்பெனி மாத்திக்கலாம்..

    இது படிப்பு விஷயம்.. இந்தத் துறைகுள்ள தான் போகனும்ன்னு முடிவு செய்து போறவங்களைத் தான் இங்க விரும்பறாங்க.. ஏன்னா இன்னொரு ஆர்வமுள்ள ஆளுக்கு வாய்ப்பு கிட்டாம போயிடும் இல்லையா?

    அட.. அப்ப நாந்தான் லேட்டு போல :)

    ஆமா. ஆட்சிய வீழ்த்தறது மட்டும் இல்லாம அடுத்தபடியா அமைச்சுக்கறதும் நல்லதாக அமையனும்..

    கொஞ்சம் பயணம் செய்ய வேண்டி இருந்தது.. அதான்.. இப்போ பரவாயில்ல..

    ReplyDelete
  12. தன்னடக்கம் எல்லாம் இல்ல.. எங்க துறையில நாங்க தான் சிறியவங்க.. ஒரு வேலை குட்டிப் பசங்கன்னு சொன்னா ஒத்துக்குவீங்களோ? :)))

    அவரு பேப்பர் கப்புக்கு மாறிட்டாரா? முடிஞ்சா சொல்லிப் பாருங்க..

    //இளமை ஊஞ்சல் ஆடுது// :) முபாரக் இதைக் கேட்டா ரொம்பவே சந்தோஷப் படுவாரு..

    ReplyDelete
  13. அடடே.. யாரிது?? The cat is above the cot!!!! இது எப்பூடி இருக்கு? :) உங்க இடுகைக்கு இப்படி ஒரு வாசகத்தோட பின்னூட்டம் போடனும்ன்னு யோசிச்சிட்டு இருந்தேன். பரவாயில்ல.. இங்கயே சொல்லிக்கறேன்..

    மயில எங்கயும் காண்கல.. இனிமே தான் தேடனும்..

    //அமெரிக்காவிலயும் எங்கட புத்தியைக் காட்டிட்டு..// யோசித்துப் பார்த்தா நாம வாழ்ந்த வாழ்க்கை எளிமையானது அதிரா.. அந்த வகையில நம்ம புத்திய எனக்குப் பிடிக்கும் :)

    ReplyDelete
  14. //அக்காவப் பாக்க வந்த மாப்பிள அங்கயே வச்சு தங்கச்சி புடிச்சிருக்குன்னு சொன்ன கதையாயிருக்கேன்னு.. //

    ஐயோ....நல்ல வேளை மாமியார் நல்லா இருக்காங்கன்னு சொல்லாம விட்டாரே...!!

    ReplyDelete
  15. //என்னைப் பார்த்து, எனது ஆசிரியரும் அவரது கோப்பையைக் கொண்டு வந்து விட்டார்.. ஏதோ என்னால முடிஞ்சது!//

    அதையும் கழுவாமலேயே வையுங்க ஏன் தெரியுமா..? நீங்க ஒரு ஆளே ஒரு நாளைக்கு ரெண்டு கப் தண்ணீரை வேஸ்ட் செய்தா மாசத்துக்கு எவ்வளவு லிட்டர் செலவாகும் ... :-)))))))

    ReplyDelete
  16. //: அலுவலகத்திலிருந்து அஞ்சலை //

    இது யாருங்க புதுசா ஒரு எல் போர்ட் :-))

    ReplyDelete
  17. எங்க ரொம்ப நாளா யாரும் சந்தேகம் கேக்கக் காணோமேன்னு நினைச்சேன் :)

    //இது யாருங்க புதுசா ஒரு எல் போர்ட் :-))//

    பழைய எல்போர்டோட புது ஆல்டர் :)

    //அதையும் கழுவாமலேயே வையுங்க ஏன் தெரியுமா..? நீங்க ஒரு ஆளே ஒரு நாளைக்கு ரெண்டு கப் தண்ணீரை வேஸ்ட் செய்தா மாசத்துக்கு எவ்வளவு லிட்டர் செலவாகும்//

    இடுகைல குறிப்பிட்டது, வீண் செய்வதைப் பற்றி மட்டும் அல்ல.. மக்க முடியாத பொருட்களை தேவையற்ற முறையில் உபயோகித்து வீண் செய்வதைப் பற்றி.. தண்ணீர் இயற்கையின் சுழற்சியாலே மீண்டும் தண்ணீர் ஆகும்.. பிளாஸ்டிக்கால் அப்படி ஆக முடியுமா? தேவையற்ற குப்பையை குறைப்பதே நோக்கம்..

    நன்றி ஜெய்லானி...

    ReplyDelete
  18. தேநீர் கோப்பை...

    வாழ்க!

    ReplyDelete

பழைய வரிய மாத்தச் சொல்லீட்டாங்க.. இப்ப புதுசு “என்ன சொல்லனும்னாலும் தெகிரியமா சொல்லிட்டுப் போங்க” :)